ஏர் இந்தியா விமான விபத்து: விமானிகள் அறையின் குரல் பதிவுக் கருவி மீட்பு!
ஜூன் 12ஆம் தேதி அகமதாபாதில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் விமானிகள் அறையின் குரல் பதிவுக் கருவி மீட்கப்பட்டிருப்பதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏர் இந்தியா விமான விபத்தில், விமானத்தில் இருந்த 241 பேர் உள்பட 274 பேர் பலியான நிலையில், கடைசி நேரத்தில் விமானத்துக்கு என்ன நேர்ந்தது என்பது, விமானிகளின் உரையாடல் மூலம் தெரிய வரும் என்பதால், இந்த குரல் பதிவுக் கருவி மீட்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் பார்க்கப்படுகிறது.
முன்னதாக, விமான விபத்து புலனாய்வு அமைப்பினர், விமானத்தின் தகவல்கள் பதிவு அமைப்பானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று அறிவித்திருந்தது. தற்போது, விமான தகவல் பதிவு அமைப்பும், குரல் பதிவு அமைப்பும் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
விமான விபத்து புலனாய்வு அமைப்பானது, ஏர் இந்தியா விமான விபத்து குறித்து விரிவான விசாரணையைத் தொடங்கியிருக்கிறது. மேலும் விமானம் அமெரிக்க நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்பதால், அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியமானது, சர்வதேச நெறிமுறைகளின் கீழ், இந்திய விசாரணை அமைப்புக்கு இணையானதொரு விசாரணையை நடத்தி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.