புணே: ஆற்றுப்பாலம் இடிந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நி...
'தமிழ்நாட்டில் 18 லட்சம் மக்களுக்கு ஒரு எம்.பி; பீகாரில் 30 லட்சம்..!' - திடீர் சர்ச்சையின் பின்னணி
இந்த ஆண்டு நவம்பர் மாதம் பீகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலுக்கான பிரசாரங்கள் பீகாரில் சூடு பிடித்து வருகிறது.
இந்த நிலையில், பாஜக கூட்டணியில் இருக்கும் ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்தக் கட்சியின் தலைவரான உபேந்திர குஷ்வாஹா வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கான தீவிர பிரசாரத்தில் ஈடுப்பட்டு வருகிறார்.
அப்படியான பிரசாரம் ஒன்றில், "தொகுதி மறுவரையறை தாமதத்தினால் பீகார் பாதிக்கப்படுகிறது. இது தாமதிக்கப்படாமல் நடைமுறைக்கு வந்திருந்தால், நாடாளுமன்றத்தில் பீகாரின் பிரதிநிதித்துவம் அதிகரித்து இருக்கும். இந்தத் தாமதம் பீகாருக்கான அநீதி" என்று பேசியுள்ளார்.

தமிழ்நாட்டிற்கு 18 லட்ச மக்களுக்கு ஒரு எம்.பியா?
தற்போது இருந்து வரும் தொகுதி மறுவரையறை 1971-ம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் பின்பற்றப்படுகிறது. ஆனால், அப்போதிருந்த மக்கள்தொகைக்கும், இப்போதிருக்கும் மக்கள்தொகைக்கும் மிகுந்த வேறுபாடு இருக்கிறது. அதனால், பீகார், உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்கள் தங்களது பிரதிநிதித்துவம் குறைகிறது என்று கருதுகிறது.
அதற்கேற்றப்படி, பாஜக கட்சியை சேர்ந்தவர் மற்றும் எழுத்தாளர் மிருத்யுஞ்சய் ஷர்மா சமீபத்தில் எழுதிய 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' கட்டுரையில் தொகுதி மறுவரையறை பற்றி...
"கிட்டத்தட்ட 30 லட்ச உத்திரபிரதேச மக்களுக்கு ஒரு எம்.பி தான்; ஆனால், தமிழ்நாட்டில் ஒவ்வொரு 18 லட்ச மக்களுக்கும் ஒரு எம்.பி. இது 'ஒரு நபர், ஒரு ஓட்டு' என்ற பிரதிநிதித்துவத்தை மீறுகிறது" என்று குற்றம்சாட்டியுள்ளார்.
1971 vs 2011
தொகுதி மறுவரையறை இந்தியாவில் 1971-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி வரையறுக்கப்பட்டுள்ளது.
1971-ம் ஆண்டு தமிழ்நாட்டின் மக்கள் தொகை 41.2 மில்லியன்; பீகாரின் மக்கள் தொகை 42.1 மில்லியன்; உத்திரபிரதேசத்தின் மக்கள் தொகை 88.3 மில்லியன்.
2011-ம் ஆண்டு தமிழ்நாட்டின் மக்கள் தொகை 72.1 மில்லியன்; பீகாரின் மக்கள் தொகை 104.1 மில்லியன்; உத்திரபிரதேசத்தின் மக்கள் தொகை 199.8 மில்லியன்.
ஆக, 40 ஆண்டுகளில், தமிழ்நாடு, பீகார், உத்திரபிரதேச மாநிலங்களில் மக்கள்தொகை முறையே கிட்டத்தட்ட 75 சதவிகிதம், 147 சதவிகிதம், 126 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
(1 மில்லியன் = 10 லட்சம்)

நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் எவ்வளவு?
மக்களவையில் தமிழ்நாட்டிற்கு 39 எம்.பிக்கள், பீகாருக்கு 40 எம்.பிக்கள் மற்றும் உத்திர பிரதேசத்திற்கு 80 எம்.பிகள் உள்ளனர்.
என்ன பிரச்னை?
உபேந்திர குஷ்வாஹா மற்றும் மிருத்யுஞ்சய் ஷர்மாவை பொறுத்தவரை, 1971-ம் ஆண்டு தமிழ்நாடு, பீகார், உத்திரபிரதேசத்தில் இருந்த மக்கள் தொகை மற்றும் இப்போது இருக்கும் மக்கள்தொகைக்கும் அபரிவிதமான மாற்றம் உண்டு. ஆனால், அதைக் கருத்தில் கொள்ளாமல் அதே தொகுதி எண்ணிக்கை தொடர்வது இவர்களுக்கு பிரச்னையாக உள்ளது.
இப்போது தொகுதி மறுவரையறை நடந்தால் உத்திரபிரதேசத்திற்கு 143 மக்களவை எம்.பிக்கள், பீகாருக்கு 79 மக்களவை எம்.பிக்கள் கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாடு என்ன சொல்கிறது?
தொகுதி மறுவரையறை என்ற பேச்சு எழுத்தப்போதில் இருந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறையை செய்யக்கூடாது என்று வலியுறுத்தி வருகிறார். மேலும், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வது மக்கள்தொகை கட்டுப்பாட்டை சரியாக செய்த மாநிலங்களை வஞ்சிப்பதாக அமையும் என்று குரல் எழுப்பி வருகிறார். இது குறித்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 7 மாநில பிரதிநிதிகள் கூட்டம் ஒன்றை சென்னை நடத்தி முடித்தார்.
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் இதற்கு உறுதியாக எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், வட மாநிலங்கள் மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை என்று தற்போது மெல்ல மெல்ல குரல் எழுப்பத் தொடங்கியுள்ளது... அதுவும் அந்தக் குரல் பாஜகவிற்கு சாதகமாக இருக்கிறது என்பது தென் மாநிலங்களில் பரபரப்பையும், எதிர்ப்பையும் கிளப்புகிறது.