"கட்டப்பஞ்சாயத்து செய்யவா 84,000 பேர் வாக்களித்தார்கள்?" - ஜெகன்மூர்த்திக்கு நீதிபதி சரமாரி கேள்வி
திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞரும், தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்பவரும் இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து பதிவுத் திருமணம் செய்துகொண்டனர்.
இந்தத் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த விஜயஸ்ரீயின் பெற்றோர், தனது மகளை தனுஷ் கடத்திவிட்டதாக போலீஸில் புகாரளித்தனர். இதை விசாரித்த போலீஸ், இருவரும் மேஜர் என்று அவர்கள் விருப்பப்படி வாழ அனுமதித்தனர்.
இருப்பினும் தனது மகள் தனுஷுடன் வாழ்வதை விரும்பாத விஜயஸ்ரீயின் தந்தை வனராஜா, கடந்த சில நாள்களுக்கு முன்பு தனுஷின் தம்பி 17 வயதுடைய சிறுவனைக் கடத்தும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்.
இதுதொடர்பாக, தனுஷ் வீட்டார் அளித்த புகாரின்பேரில், வனராஜா, முன்னாள் காவலர் மகேஷ்வரி, வழக்கறிஞர் சரத் ஆகியோரைப் போலீஸார் கைதுசெய்தனர்.

மேலும் போலீஸ் விசாரணையில், மகேஷ்வரி மூலம் ஏ.டி.ஜி.பி ஜெயராமனிடமும், கே.வி.குப்பம் எம்.எல்.ஏவும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவருமான பூவை ஜெகன்மூர்த்தியிடமும் வனராஜா உதவி கேட்டு நாடியதாகத் தெரிகிறது.
இதன் அடிப்படையில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்த போலீஸார், பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைது செய்தனர்.
மறுபக்கம், தன்னையும் போலீஸார் கைது செய்யக்கூடும் என ஜெகன் மூர்த்தி முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பி.வேல்முருகன் முன் இன்று காலை விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜெகன்மூர்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன், "இந்த கடத்தல் வழக்கில் அவர் எந்த தொடர்பும் இல்லை.
ஒரு கட்சியின் தலைவராகவும் எம்.எல்.ஏ.வாகவும் உள்ள ஜெகன்மூர்த்தியை கைதுசெய்ய வஜ்ரா வாகனம், 200 போலீஸார் திரண்டதால், அந்த பகுதிகளில் அசாதாரண சூழல் நிலவியது" என வாதிட்டார்.
மேலும், காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தாமோதரன், "இந்த வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சரத்குமார் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில் ஜெகன்மூர்த்தியின் பங்கு குறித்து குறிப்பிட்டிருக்கிறார்.
கடத்தப்பட்ட சிறுவன், ஜெயராமனின் காரில் திரும்பக் கொண்டுவந்து விடப்பட்டிருக்கிறார். இந்த கடத்தலுக்கும் ஏ.டி.ஜி.பி-க்கும் உள்ள தொடர்பு குறித்து ஜெகன்மூர்த்தியைக் கைதுசெய்து விசாரிக்க வேண்டியுள்ளது.
கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்திலிருந்து 7 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக இன்று பிற்பகல் நேரில் ஆஜராகும்படி ஜெகன்மூர்த்திக்கும், ஜெயராமனுக்கும் நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.
ஆஜராக முன்வராவிட்டால் ஜெயராமனைக் கைதுசெய்து ஆஜர்படுத்த உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையைப் பிற்பகலுக்கு ஒத்திவைத்தார். அதன்படி, ஜெகன்மூர்த்தியும், ஜெயராமனும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
அப்போது, ஜெகன்மூர்த்தி தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், கூலிப்படையினர் யாரும் கடத்தலில் ஈடுபடுத்தப்படவில்லை. கூலிப்படையினரை ஈடுபடுத்தியதாகக் காவல் துறை கூறுவது தவறு.
இந்தக் கடத்தலில் ஜெகன்மூர்த்திக்கு எந்த தொடர்பும் இல்லை. காவல்துறையில் உள்ள பிரச்னை காரணமாக ஒரு அதிகாரியை இழுக்க முயற்சிக்கின்றனர்" என்று கூறினார்.
எந்த தொகுதி எம்.எல்.ஏ. நீங்கள்?
அதைத்தொடர்ந்து காவல்துறை தரப்பில், "வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சரத்குமார், டேவிட், வனராஜ் உள்ளிட்டோர் தனுஷ் வீட்டுக்குச் சென்று அவரது சகோதரரைக் கடத்தியுள்ளனர்.
அருகில் இருக்கும் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர். சி.சி.டி.வி காட்சிகளும் உள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக ஜெகன்மூர்த்தியிடம் ஏ.டி.ஜி.பி பேசியிருக்கிறார். ஜெகன்மூர்த்திக்கு இந்த கடத்தலில் தொடர்பு உள்ளது.
இதுசம்பந்தமாக வழக்கறிஞர் சரத்குமார், முன்னாள் காவல் அதிகாரி மகேஸ்வரி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
ஏ.டி.ஜி.பி-யும், அவரது டிரைவர்களும் விசாரிக்கப்படுவர்" எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி வேல்முருகன், "எந்த தொகுதி எம்.எல்.ஏ. நீங்கள்? எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றீர்கள்" என ஜெகன்மூர்த்தியிடம் கேள்வியெழுப்பினார்.
அதற்கு கே.வி.குப்பம் தொகுதியில் 84,000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாகத் தெரிவித்ததைத்தொடர்ந்து நீதிபதி, "84,000 பேர் அவர்களின் குரலாக சட்டமன்றத்தில் பேசத்தான் உங்களுக்கு வாக்களித்தனர்.
ஆனால், அதை மறந்து கட்டப்பஞ்சாயத்து நடத்தியுள்ளீர்கள். கட்டப்பஞ்சாயத்து செய்யத்தான் மக்கள் வாக்களித்தார்களா?
இரண்டு பேர் திருமணம் செய்து கொண்டது உங்கள் கட்சி விவகாரமா? நீங்கள் சாதாரண மனிதர் அல்ல. மக்கள் பிரதிநிதி. ஓட்டு போட்ட மக்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தொகுதிக்கும் நீங்கள்தான் எம்.எல்.ஏ.
நீங்களே காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால், சாதாரண மக்கள் எப்படி ஒத்துழைப்பார்கள். எம்.எல்.ஏ. என்ற போர்வையைப் பயன்படுத்தி, பதவியைத் துஷ்பிரயோகம் செய்யக் கூடாது.
எம்.எல்.ஏ-வையும், ஏ.டி.ஜி.பி-யையும் சமமாகக் கருத முடியாது
எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். மக்கள் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டுமே தவிர கட்டப்பஞ்சாயத்து செய்யக் கூடாது.
கட்டப்பஞ்சாயத்து செய்ய உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? விசாரணையில் போலீஸாரைத் தடுக்கும் வகையில் ஆட்களைச் சேர்த்து செயல்பட்டால் வேறு மாதிரி நடவடிக்கை எடுக்கப்படும்.
உங்களுக்கு வாக்களித்த மக்களுக்காகத்தான் உங்களைக் கைதுசெய்ய உத்தரவிட வில்லை. குற்றவாளிகளுக்கு ஆதரவாக மக்கள் பிரதிநிதிகள் செயல்படுவதை அனுமதிக்க முடியாது.
உங்களுக்குத் தொடர்பு இல்லாவிட்டாலும், உங்கள் பெயரைத் தவறாகப் பயன்படுத்தினாலும் குற்றம்தான். விசாரணைக்கு தனியாகத்தான் செல்ல வேண்டும்" உத்தரவிட்டு, முன் ஜாமின் மனு மீதான விசாரணையை ஜூன் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அதேசமயம், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஜெயராமனைக் கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
இதற்கு, ஜெயராமன் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தபோது, "எம்.எல்.ஏ-வையும், ஏ.டி.ஜி.பி-யையும் சமமாகக் கருத முடியாது.
வாக்களித்த மக்களுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க எம்.எல்.ஏ-வுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.
அரசு ஊழியருக்கு இந்த சலுகை வழங்க முடியாது. தவறு செய்யும் அதிகாரிகளுக்கு இது ஒரு செய்தியைச் சொல்லட்டும்" என்று நீதிபதி குறிப்பிட்டார்.