ரூ.1500 கோடி செலவில் வீட்டுவசதி திட்டத்தை அறிமுகம் செய்த கோத்ரெஜ் பிராபர்டீஸ்!
ரூ.2,676 கோடி மெகா மோசடி; 70,000 பேரை ஏமாற்றிய இரண்டு சகோதரர்கள் - மோசடியின் முழு விவரம்
தோலேரா ஸ்மார்ட் சிட்டி திட்டம் எனும் திட்டத்தை மத்திய அரசும் குஜராத் அரசும் இணைந்து செயல்படுத்துகிறது. இது இந்தியாவின் முதல் பசுமை ஸ்மார்ட் சிட்டி எனக் கூறப்படுகிறது. டெல்லியை விட இரண்டு மடங்கு பெரிய நகரமாக உருவாகும் இந்த திட்டத்தில் ஒரு சர்வதேச விமான நிலையம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் அலுவலகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. 2042-ம் ஆண்டுக்குள் இந்த திட்டம் முழுமையடையும் எனக் கூறப்படுகிறது. இந்த திட்டத்தை அடிப்படையாக வைத்து ராஜஸ்தானை சேர்ந்த இருவர் சுமார் 70,000 பேரை ஏமாற்றியதாக புகார் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

யார் அந்த இருவர்?
ராஜஸ்தானைச் சேர்ந்த ரன்வீர் பிஜாராணி 2014-ம் ஆண்டு முதன்முதலில் தோலேராவில் நிலத்தை வாங்கினார். இவரின் சகோதரர் ஓய்வுபெற்ற ராணுவ வீரரான சுபாஷ் பிஜாராணி ரூ.30 லட்சத்தில் மற்றொரு நிலத்தை வாங்கினார். பின்னர் இருவரும் சேர்ந்து 'நெக்ஸா எவர்கிரீன்' என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை உருவாக்கி 2021-ல் அகமதாபாத்தில் பதிவு செய்தனர்.
மோசடி:
பிகாஸ் எனும் நில அளவீடு முறைப்படி சுமார் 1300 நிலங்கள் இருப்பதாக நெக்ஸா எவர்கிரீன் நிறுவனம் அறிவித்தது. மற்றொரு பக்கம் இந்த நெக்ஸா எவர்கிரீன் தோலேரா ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வருவதாகவும் விளம்பரப்படுத்தியது. இங்கு நிலம் வாங்குபவர்களுக்கும், நிலம் வாங்க ஏஜெண்ட்டாக இருப்பவர்களுக்கும் கமிஷன் கொடுப்பதாக உறுதியாளித்தது. அதிக வாடிக்கையாளர்களை கொண்டுவருபவர்களுக்கு கார், வீடு, பைக் போன்ற பரிசு பொருள்கள் வழங்கப்படும் என்றும் அறிவித்தது. இந்த அறிவுப்புகளை நம்பிய பலரும் இந்த திட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர். பல கோடிகள் கமிஷனாக விநியோகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தப்பி ஓட்டம்:
இந்த திட்டத்தில் சேர்ந்த சுமார் 70,000 பேரிடமிருந்து ரூ.2,676 கோடி ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. ஏமாற்றியப் பணத்தில் ராஜஸ்தானில் சொகுசு கார்கள், ஹோட்டல்கள், அகமதாபாத்தில் பிளாட்கள் மற்றும் கோவாவில் 25 ரிசார்ட்டுகளை வாங்கி குவித்திருக்கின்றனர். மோசடி நடந்ததாகக் செய்திகள் வெளியானப் பிறகு, அவர்கள் தங்கள் அனைத்து அலுவலகங்களையும் மூடிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இது தொடர்பாக ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள போலீஸார் மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியிருக்கின்றனர்