இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | June 17 | Today Rasi palan | Astrology | ...
பந்தை சேதப்படுத்தியதாக அஸ்வின் மீது புகார்; ஆதாரம் கேட்கும் டிஎன்பிஎல்!
பந்தை சேதப்படுத்தியதாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் மீது மதுரை பேந்தர்ஸ் அணி நிர்வாகம் புகார் அளித்துள்ளது.
இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டனாக அந்த அணியை வழிநடத்தி வருகிறார்.
டிஎன்பிஎல் தொடரில் நேற்று முன் தினம் (ஜூன் 14) சேலத்தில் நடைபெற்ற போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் மதுரை பேந்தர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மதுரை பேந்தர்ஸை வீழ்த்தியது.
அஸ்வின் மீது மதுரை பேந்தர்ஸ் புகார்
சேலத்தில் நேற்று முன் தினம் (ஜூன் 14) நடைபெற்ற போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியினர் பந்தை சேதப்படுத்தியதாக மதுரை பேந்தர்ஸ் சார்பில் டிஎன்பிஎல் நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிக்க: அம்மா நலம், மீண்டும் இந்திய அணியுடன் இணையும் கௌதம் கம்பீர்!
இது தொடர்பாக டிஎன்பிஎல் நிர்வாகத்துக்கு மதுரை பேந்தர்ஸ் அணி நிர்வாகம் சார்பில் எழுதப்பட்டுள்ள புகார் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தொடர்ச்சியாக எச்சரிக்கை செய்தபோதிலும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியினர் தொடர்ச்சியாக பந்தை சேதப்படுத்தினர். இதனால், பந்தின் எடை மற்றும் வடிவத்தில் மாற்றம் ஏற்பட்டது. பந்து பேட்டில் படும்போது, உலோகத்தின் சத்தம் எழுந்தது. பந்தை சேதப்படுத்த வேதியல் திரவத்தைப் பயன்படுத்தியதால், அதன் தன்மை மாறிவிட்டது எனக் கூறப்பட்டுள்ளது.
உரிய ஆதாரம் கேட்கும் டிஎன்பிஎல்
மதுரை பேந்தர்ஸின் புகாருக்கு பதிலளித்து டிஎன்பிஎல் தலைமைச் செயல் அதிகாரி பிரசன்னா கண்ணன் பேசியதாவது: போட்டி நிறைவடைந்து 24 மணி நேரத்துக்குப் பிறகு புகார் அளித்துள்ள போதிலும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் மீதான உங்களது புகார் எடுத்துக் கொள்ளப்படுகிறது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் மீதான உங்களது புகாருக்கு உரிய ஆதாரம் வேண்டும். மதுரை பேந்தர்ஸ் சார்பாக உரிய ஆதராங்கள் சமர்பிக்கப்பட்டால், நாங்கள் குழு அமைத்து இந்த புகார் மீது விசாரணை மேற்கொள்வோம். உரிய ஆதாரமின்றி ஒரு அணியின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது.
இதையும் படிக்க: இந்திய அணிக்காக விளையாட ஊக்கமளித்தவர் வாஷிங்டன் சுந்தர்; மனம் திறந்த சாய் சுதர்சன்!
பந்தை உலரச் செய்வதற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் மூலம், ஒவ்வொரு அணிக்கும் தரமான துண்டுகள் வழங்கப்படுகின்றன. அந்த துண்டுகளை வீரர்கள் நடுவர்கள் முன்னிலையில்தான் பயன்படுத்துகிறார்கள். அதேபோல, நடுவர்கள் போட்டியின் நடுவே அடிக்கடி பந்தை சோதனை செய்கிறார்கள் என்றார்.
திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் மீது மதுரை பேந்தர்ஸ் அணி அளித்துள்ள புகாருக்கு உரிய ஆதராங்களை சமர்பிக்க டிஎன்பிஎல் நிர்வாகம் கேட்டுள்ள நிலையில், மதுரை பேந்தர்ஸ் ஆதாரங்களை சமர்பிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.