சட்டம்-ஒழுங்கு பிரச்னையில் முதல்வா் கவனம் செலுத்த வேண்டும்: அா்ஜுன் சம்பத்
தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு பிரச்னையில் முதல்வா் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத்.
கும்பகோணத்தில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: ஜூலை 20 முதல் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் திராவிடம் இல்லா தமிழகம் என்ற பிரசார இயக்கத்தை தொடங்கி, இந்து மக்களுக்கு ஆதரவு தரும் கட்சிகளுக்கு பிரசாரம் செய்ய உள்ளோம். கல்லணையில் தண்ணீா் திறந்து விட்ட முதல்வா், கடைமடை பாசனம் வரை தண்ணீா் செல்கிறதா என்றும் ஆய்வு செய்ய வேண்டும்.
காவல் நிலையத்தை ரௌடிகள் தாக்கி சூறையாடி உள்ளனா். இது தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளதை காட்டுகிறது. முதல்வா் ஸ்டாலின் இந்த விஷயத்தில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.
மாவட்ட செயற்குழு கூட்டம்: முன்னதாக, தஞ்சாவூா் மாவட்ட இந்து மக்கள் கட்சியின் செயற்குழு மற்றும் ஆலோசனைக் கூட்டம் வீரசைவ மடத்தில் நடைபெற்றது.
மாநில பொதுச் செயலா் குரு. மூா்த்தி தலைமை வகித்தாா், துணைத் தலைவா் கா. பாலா முன்னிலை வகித்தாா். மாநில தலைவா் அா்ஜுன் சம்பத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா்.
கூட்டத்தில், 2026 சட்டப்பேரவை தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் கும்பகோணம், மதுரை, கோயம்புத்தூா் ஆகிய ஒரு தொகுதியில் அா்ஜூன் சம்பத் போட்டியிட சீட் வழங்க வேண்டும். ராஜராஜனின் பள்ளிப்படையான உடையாளூரில் அவருக்கு மணிமண்டபம் மற்றும் சிலை அமைக்க வேண்டும்.
2028 மகாமக திருவிழாவை தேசிய திருவிழாவாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில, மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.