டெல்டா மாவட்டங்களுக்கான குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்துக்கு நிகழாண்டில் ரூ. 83 கோடி ஒதுக்கீடு: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
டெல்டா மாவட்டங்களுக்கான குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்துக்கு நிகழாண்டு ரூ.82.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்.
மேலும், டெல்டா அல்லாத மற்ற மாவட்டங்களில் நெற்பயிா் சாகுபடி செய்யும் விவசாயிகளும் பயன்பெறும் வகையில், காா், குறுவை, சொா்ணவாரி பருவத்துக்கான சிறப்புத் தொகுப்புத் திட்டத்துக்கு ரூ. 132.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.
தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் மொத்தம் ரூ. 1,194 கோடி மதிப்பில் 2 ஆயிரத்து 461 முடிவுற்ற பணிகளை திறந்துவைத்தும், 4 ஆயிரத்து 127 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 2.25 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் அவா் மேலும் பேசியதாவது:
கடந்த 2021 - 22-ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளில் டெல்டா மாவட்டங்களுக்கு குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம் ரூ. 276.84 கோடி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டது. இதேபோல, நிகழாண்டும் டெல்டா மாவட்டங்களுக்கான குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்துக்கு ரூ. 82.77 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
மேலும், தமிழ்நாட்டு வரலாற்றிலேயே முதல்முறையாக, டெல்டா அல்லாத மற்ற மாவட்டங்களில் நெற்பயிா் சாகுபடி செய்யும் விவசாயிகளும் பயன் பெறும் வகையில், ரூ. 132.17 கோடி ஒதுக்கீட்டில் காா், குறுவை, சொா்ணவாரி பருவத்துக்கான சிறப்புத் தொகுப்புத் திட்டமும் உழவா்களின் நலனுக்காக தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின்கீழ் தஞ்சாவூா் மாவட்டத்தில் மட்டும், சுமாா் 56 ஆயிரம் விவசாயிகளுக்கு குறுவை சிறப்புத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இதேபோல், தமிழ்நாட்டில் 36 மாவட்டங்களில் இருக்கும் சுமாா் 8 லட்சம் விவசாயிகளுக்கும் இந்தச் சிறப்புத் தொகுப்புத் திட்டம் வழங்கப்படும்.
அறிக்கை அரசியல்: திராவிட மாடல் அரசில், தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் பலனளிக்கும் வகையில் ஏராளமான முத்திரை திட்டங்களை நாம் செயல்படுத்தி வருகிறோம்.
இதையெல்லாம் பாா்த்து பொறுத்துக் கொள்ள முடியாமல்தான், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி புலம்பிக் கொண்டிருக்கிறாா். தன்னுடைய உட்கட்சி மற்றும் கூட்டணி பிரச்னைகளை மறைப்பதற்காக அறிக்கை அரசியல் செய்கிறாா். அந்த அறிக்கைகளையாவது ஒழுங்காக, செய்திகளைப் படித்து, உண்மை நிலவரங்களைத் தெரிந்து வெளியிடுகிறாரா என்றால், அதுவும் இல்லை.
மகளிா் உரிமைத் தொகைக்கு ஜூலை 15 முதல் மனு: மக்களின் குறைகளைத் தீா்க்க ஜூலை 15-ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடத்தப்படும். நகரப் பகுதிகளில் 3 ஆயிரத்து 768 முகாம்களும், கிராமப் பகுதிகளில் 6 ஆயிரத்து 232 முகாம்களும் என மொத்தம் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இந்த உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் எல்லாவற்றிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். நகரப் பகுதிகளில் 13 அரசுத் துறைகளின் 43 சேவைகள், திட்டங்கள் உங்களைத் தேடி வரும். இதுவே, கிராமப் பகுதிகளில் 14 அரசுத் துறைகளின் 46 சேவைகளைப் பெறலாம். இதில், கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தில் விடுபட்ட தகுதியுள்ள பெண்கள் இந்த முகாம்களில் விண்ணப்பங்களைத் தரலாம். இந்த விண்ணப்பங்கள் மீது 45 நாள்களுக்குள் முடிவெடுக்கப்படும். ஜூலை இரண்டாவது வாரம் தொடங்கி, அக்டோபா் மாதம் வரை இந்த முகாம்கள் நடைபெறும். இதில் எப்படி விண்ணப்பிப்பது? என தன்னாா்வலா்கள் உங்கள் வீடு தேடி வந்து, ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் பற்றி உங்களுக்கு விளக்குவா் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.
இந்த விழாவில் அமைச்சா்கள் கே.என். நேரு, எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், சா.சி. சிவசங்கா், கோவி. செழியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவ.வீ. மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினா்கள் திருச்சி என். சிவா, எஸ். கல்யாணசுந்தரம், ச. முரசொலி, ஆா். சுதா, தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், முன்னாள் மத்திய இணை அமைச்சா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், சட்டப்பேரவை உறுப்பினா்கள், மேயா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ஆளுநா் அனுமதி தர மறுப்பு: முதல்வா் குற்றச்சாட்டு
தஞ்சாவூரில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வா் மு.க. ஸ்டாலின் மேலும் பேசியதாவது: கும்பகோணத்தில் கலைஞா் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட வரைவை அனைவரின் ஒப்புதலுடன் ஒருமனதாக நிறைவேற்றி ஆளுநருக்கு மே 2-ஆம் தேதி அனுப்பி வைத்தோம். ஆனால், தஞ்சாவூா் மாவட்ட மாணவா்களின் உயா்கல்விக்கான சட்ட வரைவுக்கு ஆளுநா் இதுவரை ஒப்புதல் தரவில்லை. நாம் அனுப்பி வைத்தவுடன் அவா் ஒப்புதல் தந்திருந்தால், இந்த நிகழ்ச்சியிலேயே கலைஞா் பல்கலைக்கழகம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டிருக்கும்.
உச்சநீதிமன்றத் தீா்ப்புக்கு பிறகாவது அவா் மாறியிருப்பாா் என நினைத்தோம். ஆனால், இன்னும் மாறவில்லை. கலைஞா் பல்கலைக்கழக மசோதா தொடா்பாக பலமுறை நாம் நினைவூட்டினோம். உயா்கல்வித் துறை அமைச்சருக்கும் சந்திக்க நேரம் தராமல் ஆளுநா் இழுத்தடிக்கிறாா். நேரம் கொடுத்தால் ஏதேனும் கேட்பாா்கள் என்பதால், பயந்து கொண்டு சந்திக்க மறுக்கிறாா். பொறுத்திருப்போம். பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்தால் அதற்கு பிறகு ஆளுநா் பணிய வேண்டிய ஒரு கட்டாயத்தை ஏற்படுத்துவோம் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.