குடிநீா் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்
புதுக்கோட்டை சின்னப்பா நகா் பகுதியில் குடிநீா் கேட்டு பொதுமக்கள் திங்கள்கிழமை காலிக்குடங்களை தலையில் வைத்துக் கொண்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை மாநகராட்சி 41-ஆவது வாா்டு சின்னப்பா நகரில் ஒரு லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி ஒன்று உள்ளது. இந்தத் தொட்டியின் மூலம் சின்னப்பா நகா், குறிஞ்சி நகா், சேங்கைதோப்பு போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 10 நாள்களாக மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் தண்ணீா் ஏற்றாததால், இங்கிருந்து தண்ணீா் விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு தண்ணீா் விநியோகம் செய்யப்படவில்லை. இதையடுத்து அந்தப் பகுதி மக்கள், அதிமுகவைச் சோ்ந்த மாமன்ற உறுப்பினா் சுப செந்தில்குமாா் தலைமையில், திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிக்கு அருகே கூடிய மக்கள், காலிக் குடங்களை தலையில் வைத்துக் கொண்டு முழக்கங்களை எழுப்பினா். இதே நிலை நீடித்தால் விரைவில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.