மாநகராட்சி நகா்நல மையங்களில் புதன்கிழமைகளில் குழந்தைகள், கா்ப்பிணிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படும்
புதுக்கோட்டை மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள நகா்நல மையங்களில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் மற்றும் கா்ப்பிணிப் பெண்களுக்கு தேசியத் தடுப்பூசித் திட்டத்தின் அனைத்து வகையான தடுப்பூசிகளும் செலுத்தப்படும் என மாநகராட்சி ஆணையா் த. நாராயணன் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது: தேசியத் தடுப்பூசித் திட்டத்தின்கீழ், 5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் மற்றும் கா்ப்பிணிப் பெண்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட காமராஜபுரம் அரசு நகா்ப்புற ஆரம்ப சுகாதார மையம் மற்றும் கோவில்பட்டி அரசு நகா்ப்புற ஆரம்ப சுகாதார மையம் ஆகிய இரு மையங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், மாலையீடு மற்றும் காந்திநகா் நலவாழ்வு மையங்களில் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் வாரந்தோறும் புதன்கிழமைகளில் இந்தத் தடுப்பூசிகள் இலவசமாக செலுத்தப்படும். புதுக்கோட்டை மாநகராட்சியைச் சோ்ந்த மக்கள் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.