செய்திகள் :

பவுமாவின் டெம்பா!

post image

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்திய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்தில் வென்றதன் மூலம், "வெற்றியின் விளிம்பில் தோல்வியைத் தழுவும் அணி' என்ற அவப்பெயரில் இருந்து தென்னாப்பிரிக்க அணி விடுபட்டுள்ளது.

இந்த வெற்றியின் மூலம், 141 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்து தோல்வியை வெற்றியாக மாற்றிய இரண்டாவது அணி என்ற பெருமையை தென்னாப்பிரிக்கா பெற்றிருக்கிறது.

டெஸ்ட் ஆட்டத்தின் சுவாரஸ்யம் குறைந்து, 50 ஓவர், 20 ஓவர் ஆட்டங்கள் பிரபலமான நிலையில் கிரிக்கெட் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை ஐசிசி நடத்திவருகிறது. 2023 முதல் 2025 வரை நடைபெற்ற ஆட்டங்களுக்குப் பின்னர் முதலிரண்டு இடங்களைப் பிடித்த ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் இறுதி ஆட்டத்தில் மோதிக்கொண்டன.

கடந்த ஜூன் 11}ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில், முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென்னாப்பிரிக்கா 138 ரன்களில் சுருண்டபோது, வழக்கம்போல இறுதி ஆட்டத்தில் அந்த அணி தோற்கப்போவது உறுதி என்றுதான் ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், முதல் இன்னிங்ஸில் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தாலும் இரண்டாவது இன்னிங்ஸில் பொறுப்புடன் விளையாடி 136 ரன்கள் எடுத்த தொடக்க ஆட்டக்காரர் எய்டன் மார்க்ரம், கேப்டன் டெம்பா பவுமா ஆகியோர் வரலாற்றை திருத்தி எழுதினர்.

1990-களுக்கு முன்பு வெள்ளையர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்த தென்னாப்பிரிக்க அணி பலம்வாய்ந்ததாக இருந்தது. நிறவெறி கொள்கைக்காக கிரிக்கெட் விளையாட அந்த அணிக்கு 1970}இல் தடை விதிக்கப்படும் முன், கடைசியாக விளையாடிய 4 டெஸ்டுகள் கொண்ட தொடரில் பலம்வாய்ந்த ஆஸ்திரேலியாவை 4-0 என வீழ்த்தியது அதன் வலிமைக்கு சான்று. 21 ஆண்டுகளுக்குப் பின்னர், 1991}இல் அந்த அணி மீண்டும் அனுமதிக்கப்பட்டபோதும் வலுவான அணியாகவே திகழ்ந்தது.

கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஜாக்ஸ் காலிஸ், அதிரடி மன்னர் ஏபி டிவில்லியர்ஸ், அற்புதமான தொடக்க பேட்டர்கள் பேரி ரிச்சர்ட்ஸ், ஹெர்ஷல் கிப்ஸ், ஹஷிம் ஆம்லா, சிறந்த தொடக்க ஆட்டக்காரரும் வெற்றிகரமான கேப்டனுமான கிரேம் ஸ்மித், மின்னல் வேகப்பந்து வீச்சாளர்களான டேல் ஸ்டெயின், ஆலன் டொனால்ட், ஷான் போலக், ஃபீல்டிங் ஜாம்பவான் ஜான்டி ரோட்ஸ் உள்ளிட்ட எண்ணற்ற சிறப்பு வாய்ந்த ஆட்டக்காரர்கள் இருந்தாலும் 1998 ஐசிசி 50 ஓவர் போட்டியில் மட்டுமே தென்னாப்பிரிக்கா கோப்பையை வென்றது.

50 ஓவர் போட்டியாக இருந்தாலும் 20 ஓவர் போட்டியாக இருந்தாலும், கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படும் அணியாகக் களம் இறங்கி, வெற்றியின் விளிம்புவரை வந்து எதிர்பாராதவிதமாகத் தோல்வியைத் தொடர்ந்து தழுவி வந்ததால் "சோக்கர்ஸ்' என்ற அவப்பெயருக்கு உள்ளானது தென்னாப்பிரிக்கா.

1999 உலகக் கோப்பை போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில், கடைசி 4 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் கடைசி விக்கெட்டை இழந்ததால் ஆட்டம் சமநிலையில் முடிய, முந்தைய சுற்றின் அடிப்படையில் ஆஸ்திரேலியா இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி தென்னாப்பிரிக்கா வெளியேறியது.

துரதிருஷ்டம் அந்த அணியைத் துரத்தியது என்றே கூறலாம். 1992 உலகக் கோப்பை போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியபோது 13 பந்துகளில் 22 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. 5 நிமிஷங்கள் மட்டுமே பெய்த மழையால் ஒரு பந்தில் 22 ரன்கள் என இலக்கு மாற்றப்பட்டது தென்னாப்பிரிக்காவுக்கு சோதனையாக அமைந்தது.

கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் 30 பந்துகளில் வெறும் 30 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையிலும் இந்தியாவிடம் 7 ரன்களில் வீழ்ந்தது. ஐசிசி போட்டியின் "நாக் அவுட்' ஆட்டங்களில் இதுவரை 15 முறை தென்னாப்பிரிக்க அணி தோல்வியைத் தழுவியுள்ளது. இந்தப் பின்னணியால்தான், 1998 ஐசிசி போட்டி வெற்றிக்குப் பின்னர், இப்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை தென்னாப்பிரிக்கா வென்றிருப்பது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் தென்னாப்பிரிக்க அணியில் இடம்பிடிப்பது என்பது கடந்த சில பத்தாண்டுகளுக்கு முன் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதது. அதிலும் கேப்டனாக ஆவது என்பது கற்பனைக்கு எட்டாதது. கருப்பினத்தைச் சேர்ந்த பவுமா கேப்டனானது மட்டுமல்லாமல், முதல் 10 டெஸ்டுகளில் தோல்வியே காணாமல் 9 வெற்றிகளைப் பெற்ற முதல் கேப்டன் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 8 ஆட்டங்களில் பவுமா 711 ரன்கள் குவித்தது மட்டுமல்லாமல், இறுதி ஆட்டத்திலும் 36, 66 என ரன்கள் எடுத்து வெற்றியில் முக்கியப் பங்காற்றினார்.இந்த வெற்றிக்குப் பின்னர், கேப்டன் பவுமா கூறியிருப்பது "பிளவுபட்டிருக்கும் எங்கள் தேசம் ஒன்றுபடுவதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது' என்பது உண்மையிலும் உண்மை.

டெம்பா என்றால் தென்னாப்பிரிக்க மொழிகளில் ஒன்றான ஜூலு மொழியில் "நம்பிக்கை' என்று பொருள். ஒடுக்கப்பட்டவர்கள் நம்பிக்கையுடன் இருந்தால் சாதிக்க முடியும் என்பதை பவுமா நிரூபித்திருக்கிறார். கருப்பினத்தவர் ஒருவர் தலைமையில் வெற்றிவாகை சூடி தென்னாப்பிரிக்கா தனது இனவெறி பின்னணியை பின்னுக்குத் தள்ளி இருக்கிறது.

அரசின் கையாலாகாத்தனம்!

பெங்களூருவில் நடந்த ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 போ் உயிரிழந்திருப்பது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகா்களையும் துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது. கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக விசாரணை... மேலும் பார்க்க

திருச்சபையின் புதிய மேய்ப்பா்!

ஏறத்தாழ 140 கோடி மக்களின் நம்பிக்கையைப் பெற்ற கத்தோலிக்கத் திருச்சபையின் புதிய மேய்ப்பராக, போப் பதினான்காம் லியோ என்கிற பெயரில் பதவி ஏற்றிருக்கிறாா் காா்டினல் ராபா்ட் பிரான்சிஸ் ப்ரிவோஸ்ட். 69 வயதான ப... மேலும் பார்க்க