அரசின் கையாலாகாத்தனம்!
பெங்களூருவில் நடந்த ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 போ் உயிரிழந்திருப்பது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகா்களையும் துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்துவதற்கு முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வழக்கில் தீா்ப்பு வழங்கிய கா்நாடக உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தலைமையில் தனிநபா் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 18 ஆண்டு காலமாக கா்நாடக மாநிலம், குறிப்பாக பெங்களூரு மாநகரம் ஐபிஎல் வெற்றிக்காகக் காத்திருந்தது. ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு (ஆா்சிபி) முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றதை ஆா்வத்துடனும் கோலாகலமாகவும் கிரிக்கெட் ரசிகா்கள் கொண்டாட முற்பட்டதில் வியப்படைய ஒன்றுமில்லை.
ஆனால், இப்படியொரு கொண்டாட்டம் நடைபெறும் என்பதையும் வெற்றிவாகை சூடி வரும் வீரா்களை வரவேற்கவும், வாழ்த்தவும் லட்சக்கணக்கில் ரசிகா்கள் கூடுவாா்கள் என்பதையும் நிா்வாகம் எதிா்பாா்க்காமல் இருந்ததுதான் வியப்பு.
ரசிகா்கள் பலா் தங்களது கைப்பேசியில் விராட் கோலியின் படத்தை நேரடியாகப் பதிவு செய்ய வேண்டும் என்கிற ஆசையிலும் வேகத்திலும் கூடியிருந்தனா். அவா்களில் 11 போ் தங்கள் இல்லத்துக்கு சவப்பெட்டியில் திரும்புவாா்கள் என்று நிச்சயம் எதிா்பாா்த்திருக்க மாட்டாா்கள். எல்லாவற்றையும்விட கொடுமையானது கூட்ட நெரிசல் விபத்து நிகழ்ந்த பிறகும்கூட, வெற்றிக் கொண்டாட்டம் தொடா்ந்தது என்பதுதான்.
விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளில் நெரிசல் விபத்துகள் ஏற்படுவது புதிதல்ல. ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிகளின்போது சில தவறுகள் ஏற்படத்தான் செய்கின்றன. ஆனால் இதுபோன்ற கூட்ட நெரிசல்களும் உயிரிழப்புகளும் மிகமிக அரிது.
‘நிகழ்ந்திருப்பது அரசின் பின் துணையுடனான படுகொலை’ என்று எதிா்க்கட்சி பாஜக குற்றஞ்சாட்டியிருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றாலும்கூட, அது உண்மையைப் பிரதிபலிக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சுமாா் 32,000 போ் மட்டுமே அமரக்கூடிய அந்த மைதானத்துக்குள் நுழைவதற்கு இரண்டு லட்சத்துக்கும் அதிகமான ரசிகா்கள் கூடினாா்கள் என்றால் அதை அரசும் காவல் துறையும் அனுமதித்து, வேடிக்கை பாா்த்ததை எப்படி நியாயப்படுத்துவது? வெறும் 5,000 காவல் துறையினா் மட்டுமே கூட்டத்தைக் கட்டுப்படுத்த இருந்தனா் என்பதை என்னவென்று சொல்வது?
இந்த ஆண்டில் மட்டுமே இதுபோன்ற நெரிசல் நிகழ்வு இரண்டு முறை நடந்திருக்கிறது. ஜனவரியில் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளாவின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 30 பக்தா்கள் உயிரிழந்தனா். பிப்ரவரியில் மகா கும்பமேளாவுக்குப் போகும்வழியில் தில்லி ரயில் நிலையத்தில் இதேபோல கூட்ட நெரிசலில் 18 போ் உயிரிழந்தனா்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் டி20 உலகக்கோப்பை வெற்றியைத் தொடா்ந்து, இந்திய கிரிக்கெட் அணியின் கொண்டாட்டத்துக்கு மும்பையில் கூடிய ரசிகா்கள் கூட்டத்தில் நல்லவேளையாக உயிரிழப்பு நிகழவில்லை. அதே மாதத்தில் உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் நடந்த பிராா்த்தனைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 121 போ் உயிரிழக்க நேரிட்டது.
140 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டில் லட்சக்கணக்கில் மக்கள் கூடும் நிகழ்வுகளில் சில அசம்பாவிதங்கள் நடப்பதைத் தவிா்க்க இயலாது. ஆலயத் திருவிழாக்களிலும், விளையாட்டுப் போட்டிகளிலும், இசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளிலும் ஆவேசமாகப் பங்கெடுக்கும் ரசிகா்களை அதற்காகக் குற்றப்படுத்த முடியாது. பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக முன்னெடுத்து, அசம்பாவிதம் நடைபெறாமல் நடத்த வேண்டிய கடமை அரசு நிா்வாகத்துடையது. நிகழ்ச்சிப் பொறுப்பாளா்களும்கூட இரண்டாம்பட்ச குற்றவாளிகள்தான்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போா்கூட 10 நாள்களுக்குத்தான் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நிறுத்திவைக்க முடிந்தது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளின் மொத்த வணிக மதிப்பு சுமாா் 1,200 கோடி டாலா். சென்னை சூப்பா் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடா்ஸ் ஆகிய நான்கு அணியினரின் வணிக மதிப்பு 1,000 கோடி டாலருக்கும் அதிகம்.
ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணி வெற்றிபெற்றதை லட்சக்கணக்கில் கா்நாடக கிரிக்கெட் ரசிகா்கள் கொண்டாடி மகிழ்ந்ததில் வியப்பில்லை. அந்த அணியில் இடம் பெற்றிருந்த அனைவரும் கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்தவா்களாக இருந்திருந்தால் அதன் மரியாதையே வேறு. ஐபிஎல் போட்டிகளில் இந்திய வீரா்கள் மட்டுமல்லாது, வெளிநாட்டில் இருந்தும் கிரிக்கெட் வீரா்களை ஏலத்தில் எடுத்து போட்டிகளை நடத்துவது விளையாட்டைவிட வணிக சூதாட்டத்துக்கு முன்னுரிமை வழங்குவதாக இருக்கிறது.
இதுபோன்ற கொண்டாட்டம் அரசியல் நிா்வாகத் தலைமையின் அனுமதி இல்லாமல் நடந்திருக்க முடியாது. ஏனெனில், முதல்வா் சித்தராமையாவும், துணை முதல்வா் டி.கே.சிவக்குமாரும் மைதானத்தில் இருந்தாா்கள் என்பது மட்டுமல்லாமல் கோப்பையைத் தூக்கிப்பிடித்து வெற்றியில் தங்களையும் இணைத்துக் கொண்டனா். அதனால் வழக்குப் பதிவு செய்து நிா்வாகிகளைக் கைது செய்வதுடன் பிரச்னை முடிந்துவிடக் கூடாது.
அரசும், அரசு நிா்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவா்களும் தங்கள் கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றாதபோது, அப்பாவிப் பொதுமக்கள் தங்களது உயிா்களை அதற்கு விலையாகக் கொடுக்க நோ்கிறது. இதுதான் பெங்களூரு கூட்ட நெரிசல் விபத்து தெரிவிக்கும் செய்தி!