தேர்தல் ஆணையமே தப்பிக்க பார்க்காதே! -ராகுல் காந்தியின் கடும் விமர்சனம்
சத்தீஸ்கரில் 2 பெண்கள் உள்பட 5 நக்சல்கள் சுட்டுக் கொலை!
சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த இரண்டு என்கவுன்டர்களில் 5 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
சமீபத்திய உயிரிழப்புகளுடன், முக்கிய மாவோயிஸ்ட் தலைவர்களான சுதாகர், பாஸ்கர் உட்பட ஏழு நக்சலைட்டுகள் கடந்த மூன்று நாள்களில் கொல்லப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தின் இந்திராவதி தேசிய பூங்கா பகுதியில் நடந்து வரும் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது ஏழு நக்சல்களின் உடல்களைப் பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மாவோயிஸ்ட் தலைவர் சுதாகர், தெலங்கானா மாநிலக் குழு உறுப்பினர் பண்டி பிரகாஷ், தண்டகாரண்யா சிறப்பு மண்டலக் குழு உறுப்பினர் பப்பா ராவ் மற்றும் சில நக்சல்கள் இருப்பது குறித்த தகவல்களின் அடிப்படையில், மாநில காவல்துறையின் சிறப்புப் பணிப் படை மற்றும் மாவட்ட ரிசர்வ் காவல்படை, சிஆர்பிஎஃப்-யின் சிறப்புப் பிரிவான கோப்ரா ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த நடவடிக்கை ஜூன் 4ஆம் தேதி தொடங்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
கொல்லப்பட்ட ஐந்து நக்சலைட்டுகளின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை, அவர்களில் இரண்டு பெண்கள் ஆவார். இந்த நடவடிக்கையில் இரண்டு ஏகே-47 துப்பாக்கிகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகின்றது.
மேலும், இந்த நடவடிக்கையின்போது பாம்பு கடி, தேனீ கொட்டுதல், நீரிழப்பு மற்றும் பிற காரணங்களால் பாதுகாப்புப் பணியாளர்கள் சிலர் காயமடைந்துள்ளனர், மேலும் அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டதாக அதிகாரி கூறினார்.