தேர்தல் ஆணையமே தப்பிக்க பார்க்காதே! -ராகுல் காந்தியின் கடும் விமர்சனம்
தொழிலாளர்களின் வேலைநேரத்தை உயர்த்திய ஆந்திர அரசு! தொழிற்சங்கங்கள் போராட்டம்
ஆந்திரப் பிரதேசத்தில் தொழிலாளர்களின் வேலைநேரத்தை 9-லிருந்து 10 மணிநேரமாக அம்மாநில அரசு உயர்த்தியதற்கு தொழிற்சங்கங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
ஆந்திரப் பிரதேசத்தில் முதலீட்டாளர்களை ஈர்க்க, முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அந்த வகையில், தொழிற்சாலையில் தொழிலாளர்கள் தினசரி 10 மணிநேரம் பணிபுரியும் வகையில், சட்டத்திருத்தம் கொண்டுவர அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, அம்மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் கூறுகையில், ஒருநாளில் அதிகபட்சமாக 9 மணிநேர வேலையை அனுமதிக்கும் பிரிவு 54, இப்போது 10 மணிநேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னர்வரையில், காலாண்டுக்கு 75 மணிநேரமாக இருந்த கூடுதல் நேர வேலை (OT - Overtime), இப்போது 144 மணிநேரமாக அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
தொழிலாளர் சட்டங்களில் திருத்தப்பட்டிருக்கும் இந்தத் திருத்தங்கள் காரணமாக, இங்கு அதிகளவிலான முதலீட்டாளர்கள் வருகை தருவர்.
மேலும், முன்னர்வரையில் இரவுநேரப் பணிகளில் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், இப்போது அவர்களும் இரவுநேரப் பணிகளில் வேலைசெய்ய விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது. இப்போது, அவர்கள் போக்குவரத்து வசதி, பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பணியாற்ற முடியும். இந்த புதிய விதிகள், பெண்களுக்கு பொருளாதார ரீதியான அதிகாரமளிக்கின்றன. தொழிற்துறை வளர்ச்சியையும் ஊக்குவிக்கின்றன என்று தெரிவித்தார்.
இருப்பினும், அம்மாநிலத்தின் இந்தப் புதிய திருத்தத்துக்கு தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும், ஆந்திர அரசின் இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்து, நாடு முழுவதும் ஜூலை 9 ஆம் தேதியில் போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.