முருகன் மாநாடு: `எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டால் பங்கேற்போம்’ - சொல்கிறார் செல்லூர் ராஜூ
மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் நடந்த கட்டுமானப்பணி பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, "அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற குற்ற சம்பவங்களில் எங்கள் முதலமைச்சர் முறையாக நடவடிக்கை எடுத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். பொள்ளாச்சி வழக்கில் எங்கள் ஆட்சியில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு, தண்டனை வாங்கிக் கொடுத்துள்ளோம். திமுக அரசாங்கம் எந்த ஒரு சம்பவத்திலும் சிபிஐ-க்கு உத்தரவிடுவது கிடையாது. யார் அந்த சார் என்பதை சொல்ல மறுக்கின்றனர்" என்றவர்,

மக்கள் தான் எஜமானர்கள்
"இந்து முன்னணி நடத்தும் முருகன் மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டால் நாங்கள் பங்கேற்போம். திமுக கூட்டணி வலுவாக உள்ளதாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். வலுவாக இல்லை என்று யார் சொன்னது? நாங்கள் சொல்லவில்லையே. முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு செல்வாக்கு உள்ளது, சாலையில் சென்றால் கூட்டம் கூடுகிறது, அப்படி இருக்கும்போது எங்கள் கூட்டணி ஸ்டிராங்காக உள்ளது என்று ஏன் அடிக்கடி சொல்ல வேண்டும்? அவர்களுக்கு தன் பயம் இருப்பதால் தான் சொல்கிறார்கள். என்னதான் கூட்டணி இருந்தாலும் மக்கள் தான் எஜமானர்கள்.
அதிமுக தலைமையில்தான் ஆட்சி என்று அமித் ஷா, நயினார் நாகேந்திரன் சொல்லிவிட்டார்கள். இதற்கு மேல் கேட்க வேண்டுமென்றால் மக்களை சந்திக்க எடப்பாடி பழனிசாமி வரும்போது அவரிடம் கேளுங்கள்.” என்றார்.
"அதிமுக கூட்டணிக்கு விஜய் வராதது வருத்தமளிக்கிறதா?" என்ற கேள்விக்கு
"மக்களோடுதான் கூட்டணி நாங்கள் வைத்துள்ளோம். தேர்தல் நெருங்கும் போதுதான் எதையும் சொல்ல முடியும்" என்றவரிடம்,

"அமைச்சர் மூர்த்தி உங்கள் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் கொடுத்துக் கொண்டிருக்கிறாரே?" என்றதற்கு,
"அமைச்சர் மூர்த்தி அவருடைய பாக்கெட்டில் இருந்தா கொடுக்கிறார், எப்படியோ மேற்கு தொகுதி மக்கள் இதன் மூலம் பயனடைந்தால் போதும். அமைச்சர் சின்ன கேரியர் கொடுப்பதாக சொல்கிறார்கள், முடிந்தால் பெரிய ஹாட் பாக்ஸ் ஆக கொடுங்கள், அதுபோல் நிகழ்ச்சிகளுக்கு 200 ரூபாய் கொடுத்து மக்களை அழைத்து சென்று நீண்ட நேரம் நிற்க வைப்பதாகச் சொல்கிறார்கள், அதனால் கூடுதலாக கொடுங்கள்" என்றார்.