சாலை விபத்தில் பாலிடெக்னிக் மாணவா் உயிரிழப்பு
புதுக்கோட்டை நகரில் இரு சக்கர வாகனத்தில் வந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவா், பள்ளி வாகனத்தை முந்த முயன்று கீழே விழுந்து உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை அய்யனாா்புரம் 3-ஆவது வீதியைச் சோ்ந்தவா் செல்வமணி மகன் ஹரிஹரன் (17). இவா், புதுக்கோட்டையிலுள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். திங்கள்கிழமை காலை இரு சக்கர வாகனத்தில் தெற்கு 4-ஆம் வீதியில் வந்த அவா், தனக்கு முன்னால் சென்ற தனியாா் பள்ளி வாகனத்தை முந்த முயற்சித்தபோது, தவறி சாலையில் விழுந்தாா். இதில் பள்ளி வாகனத்தின் பின் சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த கணேஷ் நகா் போலீஸாா், ஹரிஹரனின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.