செய்திகள் :

உயர்கல்வி சேர்க்கையில் இந்தியாவிற்கே வழிகாட்டும் விருதுநகர்; அனுபவம் பகிரும் ஆட்சியர்!

post image

இந்த ஆண்டு தொடர்ச்சியாக, விருதுநகர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் பலர் IIT, NIT, IIIT, CLAT, AIIMS நர்சிங்‌ என நாட்டின் முக்கிய கல்வி நிறுவனங்களில் சேர்வதற்குரிய நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்று வருகிறார்கள்.

பன்னிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு உயர்கல்விக்குச் சேரும் மாணவர்களின் விகிதம் நூற்றுக்கு 95 விழுக்காடுக்கு மேல் என்ற உயரிய அளவு இந்தியாவிலேயே வேறு எந்த மாவட்டமும் இதுவரை எட்டவில்லை.‌

இந்த ஆச்சரியமான தகவல்கள் வந்ததால், இது குறித்து அறிந்து கொள்வதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றோம். அங்குக் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர் அறைக்கு அருகிலேயே செயல்படும் கல்வி கட்டுப்பாட்டு அறையைக் காண்பித்து, இது எப்படித் தொடர்ச்சியாக இயங்குகிறது? மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை ஆண்டு முழுவதும் எப்படிக் கண்காணிக்கிறது? என்னென்ன முன்னெடுப்புகள் செய்திருக்கிறார்கள்? என்பதை அறிந்து கொண்ட போது ஆச்சரியமாகவும் இது இந்தியாவிற்கே வழிகாட்டியான மாடலாகவும் இருந்தது.

நான் முதல்வன் - கல்லூரி கனவு

இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்கான நான் முதல்வன் திட்டத்தின் கீழ், மாணவர்களைக் கல்லூரியில் சேர்க்கும் கல்லூரிக் கனவு என்ற திட்டமும் இருக்கிறது.

இதில் இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களில் சேரக்கூடிய மாணவர்களின் அனைத்து செலவுகளையும் அரசு ஏற்றுக்கொள்கிறது. எனவே இந்த திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த எண்ணிய மாவட்ட ஆட்சியர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் அவர்கள், விருதுநகர் மாவட்டத்தில் பொறுப்பேற்றதற்குப் பிறகு மாணவர்களின் நலனுக்காகவும், கல்வித்துறைச் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கவும் அவரது அறைக்கு அருகிலேயே கல்வி உதவி மைய கட்டுப்பாட்டு அறையை அமைத்து, அதில் சிறந்த அலுவலர்களையும் வல்லுனர்களையும் பணியமத்தியுள்ளார்.

‘நான் முதல்வன்’ திட்டம்

கல்வியாண்டின் தொடக்கத்திலேயே மாணவர்களை அவர்களின் ஆர்வத்திற்கு ஏற்ப மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி மற்றும் சிறந்த பல்கலைக்கழகங்கள் என நேரில் அனுப்பி அவர்கள் எக்ஸ்போசர் பெறுவதற்கு உரிய முயற்சிகள் எடுக்கப்பட்டது.

ஒவ்வொரு பள்ளியிலும் சிறப்பாகப் படிக்கக்கூடிய ஒன்று, இரண்டு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்குத் தனியாக உயர்கல்வி வழிகாட்டி கவுன்சிலிங், அந்த மாணவர்களுக்குத் தேவையான பாடக்குறிப்புகள், உதவிகள் எல்லாம் வழங்கப்பட்டு தொடர்ச்சியாக அவர்கள் படிப்பதற்கு ஊக்குவிக்கப்பட்டார்கள்.

மேலும் மாணவர்களுக்கு மிகப்பெரிய சுமையாக இருப்பது உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுக்கு வழிகாட்டுவதும், அதற்குரிய விண்ணப்ப கட்டணமும் தான்.

குறைந்தது 1500 ரூபாய் ஒரு தேர்விற்கு விண்ணப்பம் கட்டணமாகச் செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணம், பயிற்சி கட்டணம், தனியார் நிறுவனத்தின் ஆலோசனைகள் என அனைத்தையும் பெறுவதற்கு விருதுநகர் மாவட்ட கல்வி அறக்கட்டளை உருவாக்கப்பட்டு அதன் மூலமாக நன்கொடைகள் பெறப்பட்டு செலவுகள் மேற்கொள்ளப்பட்டன.

சென்னையைச் சேர்ந்த புகழ்மிக்க தனியார் உயர்கல்வி வழிகாட்டும் நிறுவனத்தின் ஆலோசனைகளும் பெறப்பட்டது. மாணவர்கள் 230 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு JEE, NEET, AIIMS உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பங்கள் செய்யப்பட்டு, அவை கல்வி கட்டுப்பாட்டு அறை மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன.

முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின்கீழ், தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்த ஈரோடு பயிற்சி வகுப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அனைத்து செலவுகளையும் மாவட்ட நிர்வாகத்தின் கல்வி அறக்கட்டளையே ஏற்றுக் கொண்டது.

மேலும் அனைத்து மாணவர்களும் உயர்கல்வி சேர்வதை உறுதி செய்வதற்காக, கடந்த ஆண்டு மட்டும் நான்கு முறை உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டு, கடந்த கல்வியாண்டில் 95% மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார்கள். இந்த ஆண்டு 100 சதவீத இலக்கு எட்டுவதற்குத் தற்பொழுது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆட்சியர் ஜெயசீலன்

மாணவர்கள் தனித்திறனை மேம்படுத்துவதற்காகவும் எந்தெந்த அறிவியல், கணிதத் துறைகளில் ஆர்வமாக இருக்கிறார்களோ, அந்த துறையில் இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களுக்கும் மாணவர்கள் சுற்றுலா அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இப்படித் தொடர்ச்சியான செயல்பாடுகளால் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை மற்றும் அர்ப்பணிப்பு மிக்க பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பில் பணி புரிகிறார்கள்.

இதை உறுதி செய்து மாணவர்கள் அனைவரையும் கல்லூரியில் சேர்ப்பதோடு மட்டுமில்லாமல் இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் பட்டாசு ஆலை கூலித்தொழிலாளரின் மகளையும், லாரி டிரைவரின் மகனையும் கொண்டு சேர்ப்பது, எவ்வளவு பெரிய சமூக மாற்றத்திற்கு வித்திடும் என்பதை மாவட்ட ஆட்சியரிடம் கேட்டபோது, வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும், முன்னேறுவதற்கும் எத்தனையோ வாய்ப்புகள் இருந்தாலும், மிகப்பெரிய வெற்றியை மிக எளிதாகப் பெறுவதற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு கல்விதான் என்று குறிப்பிட்டார்.

அதற்குத் தானே சிறந்து எடுத்துக்காட்டு என்றும், கல்வியின் பயனை முழுமையாக அனுபவித்தவன் என்ற முறையிலும், இதை அடுத்த தலைமுறைக்குச் செய்ய வேண்டியது என்னுடைய கடமை என்று குறிப்பிட்டார்.

எளிய குடும்பத்தில் பிறந்து கிராமத்து அரசுப் பள்ளிகளில் படித்து, முதல் தலைமுறை பட்டதாரியான தான் மிக எளிய குடும்பத்தில் பிறந்து, கல்வி கற்று ஐஏஎஸ் ஆனதை நினைவு கூர்ந்து, சற்று முயற்சி செய்தால் எல்லோருக்கும் திறமை வந்துவிடும், ஆனால் வாய்ப்புகள் என்பது சிறந்த வழிகாட்டுதலைப் பெறக்கூடியவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

அந்த வழிகாட்டுதலை ஏழை, எளிய குழந்தைகளுக்கு விருதுநகர் மாவட்ட கல்வி அறக்கட்டளையும், கல்வி உதவி மைய கட்டுப்பாட்டு அறையும் தடையின்றி வழங்கிக் கொண்டிருக்கிறது. இதன் மூலமாக சிறந்த வாய்ப்புகளை எளிய குழந்தைகளுக்கு உறுதி செய்கிறோம் என்று குறிப்பிட்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

`3 ஆண்டுகள்.. 200 நாட்கள்.. 15,000 மாணவர்கள்'- முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் "காபி வித் கலெக்டர்!"

Qவிருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணவர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப... மேலும் பார்க்க

நெல்லை பல்கலையில் வினாத்தாள் கசிந்த விவகாரம்; தேர்வாணையருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியது யார்?

நெல்லை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 104 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது செமஸ்டர் தேர்வுகள் நடந... மேலும் பார்க்க

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டுமா? ஜூன் 8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், ‘அடுத்து என்ன படிப்பு, எந்த காலேஜ்’ என்ற அறிவுரைகள், கலந்துரையாடல்கள், விவாதங்கள் பல வீடுகளிலும் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கும்.அந்த வகையி... மேலும் பார்க்க