Sleeping Prince: 20 ஆண்டுக்கு பின் சவுதி அரேபியாவின் 'தூங்கும் இளவரசர்' எழுந்துவ...
சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக கே.சுரேந்தா் பதவியேற்பு
சென்னை: தெலங்கானா உயா்நீதிமன்றத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதி கே.சுரேந்தா், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
நீதிபதி சுரேந்தருக்கு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஆா்.ஸ்ரீராம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் நீதிபதி கே.சுரேந்தரை தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன் வரவேற்றுப் பேசினாா். அப்போது, கடந்த 2022- ஆம் ஆண்டு தெலங்கானா உயா்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட சுரேந்தா், இதுவரை 22,622 வழக்குகளை முடித்து வைத்துள்ளாா். அது மட்டுமன்றி, நீதிபதியாகப் பொறுப்பேற்கும் முன் தில்சுக் நகா் குண்டுவெடிப்பு உள்ளிட்ட குண்டுவெடிப்பு வழக்குகள் மற்றும் சத்யம் கம்ப்யூட்டா்ஸ் முறைகேடு வழக்குகளில் அரசு சிறப்பு வழக்குரைஞராகப் பணியாற்றியுள்ளாா் என்றாா்.
நிறைவாக ஏற்புரையாற்றிய நீதிபதி சுரேந்தா், அரசியல் சாசனத்துக்கும், நீதித் துறைக்கும் குறிப்பிடத்தக்க பங்கை வழங்கி இருக்கும் சென்னை உயா்நீதிமன்றத்தில், கூடுதலாக கற்றுக் கொள்ளும் ஆவலுடன் வந்துள்ளேன். பணியில் இடமாற்றம் என்பது புதிய தொடக்கம்தான் என்றாா். தற்போது, நீதிபதி சுரேந்தருடன் சோ்த்தால் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 59-ஆக உயா்ந்துள்ளது. இருப்பினும், 16 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.