இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | June 17 | Today Rasi palan | Astrology | ...
கோவை: கத்தி முனையில் காருடன் கடத்தப்பட்ட தங்கக் கட்டிகள்; தீவிர விசாரணையில் இரு மாநில போலீஸ்
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெய்சன் ஜேக்கப் (55). இவர் திருச்சூரில் சொந்தமாக நகைக்கடை நடத்தி வருகிறார்.
ஜெய்சன் கோவை மற்றும் சென்னையில் தன் கடைக்குத் தேவையான நகைகளை ஆர்டர் கொடுத்து வாங்கி வருகிறார்.

இவர் கடந்த 13-ம் தேதி சென்னையில் 1.25 கிலோ எடையுள்ள தங்க கட்டிகளை வாங்கி வந்துள்ளார். இதற்காக ஜெய்சன், அவரிடம் பணியாற்றும் ஊழியர் விஷ்ணு ஆகியோர் சென்னை சென்றுவிட்டு ரயில் மூலம் கோவை திரும்பினர்.
14-ம் தேதி அதிகாலை கோவையில் இருந்து கார் மூலம் திருச்சூர் புறப்பட்டுள்ளனர். அவர்களின் கார் தமிழ்நாடு – கேரளா எல்லையான க.க. சாவடி அருகே சென்றுகொண்டிருந்தபோது, அங்குத் திடீரென்று மற்றொரு காரில் வந்த முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட கும்பல் ஜெய்சன் வந்த காரைக் கத்தியைக் காட்டி வழி மறித்துள்ளனர்.

தொடர்ந்து ஜெய்சன் காரின் கண்ணாடியை உடைத்து காருக்குள் சென்ற அந்த நபர்கள், அவர்களுடன் சிறிது தூரம் காரில் பயணித்தனர். பிறகு ஜெய்சன், விஷ்ணுவைக் கீழே இறக்கிவிட்டு, காருடன் தங்க கட்டியைக் கடத்தி சென்றனர்.
இதுகுறித்து ஜெய்சன் க.க. சாவடி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் இரண்டு மாநில காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ஆனாலும், வாகனத்தைக் கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் ஜெய்சனின் கார், பாலக்காடு மாவட்டம் வழுக்கல் பகுதியில் வைத்து கண்டறியப்பட்டுள்ளது.
”விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களையும் கைது செய்வோம்” என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.