புணே: ஆற்றுப்பாலம் இடிந்ததற்கு மக்களின் அலட்சியமே காரணம்! -பாஜக அமைச்சர்
விமான விபத்தில் சிக்கினாரா இயக்குநர்? வலுசேர்க்கும் ஆதாரங்கள்!
அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு காணாமல் போன இசை ஆல்பங்களை இயக்கும் மகேஷ் ஜிராவாலா என்பவர் மனைவியின் டிஎன்ஏ மாதிரிகள் பெறப்பட்டுள்ளது.
அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடந்த வாரம் விபத்தில் சிக்கியது. இதில், பயணித்த 242 பேரில் ஒருவர் மட்டுமே உயிர்பிழந்த்துள்ளார்.
இதனிடையே, விமானம் மோதிய மருத்துவக் கல்லூரி மற்றும் விழுந்து நொறுங்கிய குடியிருப்புப் பகுதியிலும் சிலர் உயிரிழந்துள்ளனர்.
மொத்தம் 270 சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், 272 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது.
இயக்குநர் சிக்கினாரா?
நரோடாவில் வசிக்கும் மகேஷ் கலாவாடியா என்கிற மகேஷ் ஜிராவாலா, இசை ஆல்பங்களை இயக்கி வருபவர்.
அவர் விபத்து நடைபெற்ற அன்று பிற்பகலில், லா கார்டன் பகுதியில் ஒருவரை சந்திக்கப் போவதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதுதொடர்பாக காவல்துறையில் மகேஷின் மனைவி புகார் அளித்துள்ளர்.
வலுசேர்க்கும் ஆதாரங்கள்
காணாமல் போன மகேஷ், விபத்து அன்று பிற்பகல் 1.14 மணிக்கு அவரது மனைவிக்கு போன் செய்து, சிறிது நேரத்தில் வீடு திரும்பப் போவதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், அவர் வீடு திரும்பாததாலும் மீண்டும் போன் செய்தபோது அணைக்கப்பட்டிருந்ததாலும் காவல்துறையில் புகார் அளித்ததாக அவரது மனைவி ஹெடல் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் மகேஷின் செல்போனை டிராக் செய்தபோது, கடைசியாக அவரின் செல்போன், விபத்து பகுதியில் இருந்து சரியாக 700 மீட்டர் தொலைவில் அணைக்கப்பட்டுள்ளது.
மேலும், பகல் 1.39 மணிக்கு விபத்து ஏற்பட்ட நிலையில், மகேஷின் செல்போன் 1.40 மணிக்கு அணைக்கப்பட்டிருக்கிறது. அவரது ஸ்கூட்டரும் செல்போனும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த நிலையில், மகேஷின் மனைவி ஹெடலின் டிஎன்ஏ மாதிரியையும் காவல்துறையினர் பெற்றுள்ளனர். அடையாளம் தெரியாத நிலையில் உள்ள சடலங்களில் மகேஷின் உடல் இருக்கின்றதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதுவரை 87 சடலங்கள் டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு, 47 சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.