காந்தாரா-2: படகு கவிழ்ந்து விபத்து; `தொடர்ந்து ஏற்படும் அசம்பாவிதங்கள்..' - ரசிகர்கள் சோகம்
2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியான திரைப்படம் "காந்தாரா". உலகளவில் ரூ. 400 கோடி வசூல் சாதனை படைத்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, காந்தாரா படத்தின் இரண்டாம் பாகமான "காந்தாரா: சாப்டர் 1" படத்தை தற்போது ரிஷப் ஷெட்டி இயக்கி வருகிறார்.
பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவின் ஷிவமோகா, அகும்பே ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் காந்தாரா: சாப்டர் 1 படப்பிடிப்புக்கு செல்லும்போது நடிகர்களை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. ஆனால், நல்வாய்ப்பாக யாரும் உயிரிழக்கவில்லை. எனினும், காந்தாரா 2-ம் பாகம் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞரான கபில் என்பவர் கடந்த மாதம் கேரளாவில், சவுபர்னிகா நதியில் மூழ்கி உயிரிழந்தார். இதே படத்தில் நடித்து வந்த நகைச்சுவை நடிகர் ராகேஷ் புஜாரி கடந்த மாதம் தனது நண்பரின் திருமண நிகழ்ச்சியில் நடனமாடும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
படப்பிடிப்புக்காக வந்திருந்த கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த விஜூ வி.கே., விடுதியில் தங்கியிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இப்படி தொடர்ந்து காந்தாரா படப்பிடிப்பில் ஈடுபடுபவர்களின் உயிரிழப்புகள் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சிவமோகா மாவட்டத்தில் உள்ள மணி நீர்த்தேக்கத்தில் நடிகர்-இயக்குனர் ரிஷப் ஷெட்டி மற்றும் 30 குழுவினரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது.

காவல்துறையின் தகவலின்படி, நீர்த்தேக்கத்தின் ஆழமற்ற பகுதியான மெலினா கொப்பா அருகே இந்த சம்பவம் நிகழ்ந்ததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது. படகில் இருந்த அனைவரும் காயமின்றி தப்பினாலும், படப்பிடிப்பு உபகரணங்கள் மற்றும் கேமராக்கள் தண்ணீரில் தொலைந்திருக்கிறது. தீர்த்தஹள்ளி காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்து தொடர்ந்து ஏற்படும் அசம்பாவிதங்கள் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.