விரைவில் அறிமுகமாகிறது ஒன்பிளஸ் பேட் லைட்! சிறப்புகள் என்னென்ன?
Ahmedabad plane crash: ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் - சாவின் விளிம்புவரை சென்று உயிர் தப்பிய 7 பேர்
அகமதாபாத் விமான விபத்தில் 274 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இக்கொடூரமான விபத்தில் 7 பேர் கடைசி நேரத்தில் தங்களது பயணத்தை ரத்து செய்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருக்கின்றனர்.
தாய் வைத்த அன்பு கோரிக்கை
ஏமன் வியாஸ் என்பவர் லண்டனில் இரண்டு ஆண்டுகளாக வேலை செய்துவிட்டு விடுமுறைக்காக வதோதராவிற்கு வந்திருந்தார். அவர் விடுமுறை முடிந்து 12ம் தேதி லண்டன் புறப்பட அகமதாபாத் விமான நிலையம் கிளம்பி வந்தார். விமான நிலையத்தில் அவரை வழியனுப்பி வைக்க அவரது தாயாரும் வந்திருந்தார். அனைத்து பேப்பர் தொடர்பான பணிகளும் முடிந்து தனது தாயாரிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொள்வதற்காக எமன் காலில் விழுந்தார். அந்நேரம் அவரது தாயார் இன்னும் சில நாட்கள் இருந்துவிட்டு போகக்கூடாதா என்று தனது மகனிடம் கேட்டிருக்கிறார்.
ஏமன் மறு கேள்வியே கேட்காமல் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு குடும்பத்தோடு வீட்டிற்கு வந்துவிட்டார். வீட்டிற்கு வரும் போதே அவர் பயணம் செய்ய இருந்த விமானம் விபத்துக்குள்ளானதாக செய்தி வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்ததாக ஏமன் தெரிவித்தார்.
தனது உயிரை தனது தாயார்தான் காப்பாற்றினார் என்று தெரிவித்தார்.

ஏர் இந்தியா ஊழியர்களுக்கு நன்றி
இதே போன்று ஜெய்மன் பட்டேல், பிரியா பட்டேல் ஆகியோர் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்வதற்காக அகமதாபாத் விமான நிலையம் வந்து சேர்ந்தனர். லண்டனில் இருக்கும் ஜெய்மன் பட்டேல் நண்பர் ரோஹித் யாதவ் லண்டனை சுற்றிப்பார்க்க வரும்படி அழைப்பு விடுத்திருந்தார். அவர்களுக்கு சுற்றுலா விசா கிடைத்திருந்தது. செக்கிங் கவுண்டருக்கு மிகவும் மகிழ்ச்சியோடு சென்றபோது அவர்களது ஆவணங்களில் சில பிரச்னைகள் இருந்தது. அதனை சரி செய்து தங்களை உள்ளே அனுமதிக்கும்படி இருவரும் கேட்டனர்.
ஆனால் அதனை சரி செய்வது சாத்தியம் இல்லை என்று கறாராக கூறிவிட்டனர். இது குறித்து ஜெய்மன் பட்டேல் கூறுகையில், ''ஆவணங்கள் சரியில்லாததால் எங்களை பயணம் செய்யவிடவில்லை. நாங்கள் கவலையோடு வீட்டிற்கு வந்தோம். வந்தபிறகு டிவியை பார்த்தபோதுதான் நாங்கள் பயணம் செய்ய இருந்த விமானம் விபத்துக்குள்ளாகி இருந்தது. அதிர்ஷ்டவசமாகத்தான் உயிர் தப்பினேன். இதற்காக ஏர் இந்தியா ஊழியர்களின் காலைதொட்டு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
அதிர்ச்சியாகிவிட்டேன்
சாவ்ஜி தம்பேடியா என்பவர் லண்டனில் உள்ள தனது மகனை பார்க்க 12ம் தேதி அகமதாபாத்தில் இருந்து செல்ல திட்டமிட்டு டிக்கெட் எடுத்திருந்தார். அவரது டிக்கெட் 1 ஏ ஆகும். சாவ்ஜி பயணத்திற்கு வேண்டிய பேக்கை கூட தயார் செய்துவிட்டார். ஆனால் கடைசி சில மணி நேரத்திற்கு முன்பு சாவ்ஜி தனது மகனுக்கு போன் செய்து நான் பயணம் செய்யும் மனநிலையில் இல்லை. பயணத்தை திங்கள் கிழமை வரை ஒத்தி வைக்கும்படி கேட்டுக்கொண்டார். அவரது மகனும் மறுபேச்சு பேசாமல் சரி என்று சொல்லிவிட்டார். சாவ்ஜி இது குறித்து கூறுகையில், ``பயணத்தை ரத்து செய்துவிட்டு இருந்தபோது எனது நண்பர் ஒருவர் என்னிடம் டிவியை பார் என்று சொன்னார். டிவியை பார்த்தவுடன் அதிர்ச்சியாகிவிட்டேன். என்னை சுவாமிநாராயண் தான் காப்பாற்றி இருக்கிறார்'' என்று தெரிவித்தார்.
ட்ராஃபிக் சிக்கல்..!
இதே போன்று பூமி செளகான் என்ற பெண் விமான நிலையத்திற்கு புறப்பட்டு வந்தபோது போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக்கொண்டார். இதனால் அவர் 10 நிமிடம் தாமதமாக வந்தார். அவர் தன்னை உள்ளே விடும்படி கெஞ்சிப்பார்த்தார். ஆனால் அதிகாரிகள் விடவில்லை. அதிகாரிகளின் தயவால் அவர் உயிர் தப்பிவிட்டார்.

`விநாயகரின் அதிசயத்தால்தான் நான் உயிர் தப்பினேன்’ என்று பூமி செளகான் தெரிவித்தார்.
ஜெயேஷ் தக்கர் தொழில் விசயமாக 12ம் தேதி விபத்துக்குள்ளான விமானத்தில் லண்டன் செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால் அன்று அவருக்கு வேறு வேலை இருந்ததால் அன்றைய பயணத்தை ரத்து செய்ததன் மூலம் தனது உயிரை காப்பாற்றிக்கொண்டார்.
இதே போன்று ராவ்ஜி பட்டேல் என்பவரின் மருமகன் அர்ஜூன் தனது மனைவியின் இறுதிச்சடங்கிற்காக குஜராத் வந்திருந்தார். அர்ஜூன் மனைவி புற்று நோயால் காலமாகி இருந்தார். அவர்களுக்கு 4 மற்றும் 8 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றன. அர்ஜூன் தனது வேலையை முடித்துக்கொண்டு லண்டன் புறப்படும் போது பேரக்குழந்தைகளை பார்க்க வரும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் தனக்கு வேலை இருப்பதால் முடித்துவிட்டு வேறு ஒரு நாள் வருவதாக ராஜ்வி பட்டேல் பயணத்தை தவிர்த்தார். ஆனால் அர்ஜூன் அதே விமானத்தில் பயணம் செய்து உயிரிழந்துள்ளார். 20 நாட்களுக்குள் மகள் மற்றும் மருமகனை ராவ்ஜி இழந்துள்ளார்.