DNA மூலம் அடையாளம் காணப்பட்ட 19 உடல்கள்; 6-ம் தேதிக்கு பதில் 12-ம் தேதி பயணித்து இறந்த தம்பதி!
அகமதாபாத்தில் கடந்த 12ம் தேதி நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் 274 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் குஜராத் மாநிலம், ஆனந்த் நகரை சேர்ந்த 33 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனந்த் நகர் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நகரம் என்று அழைக்கப்படுகிறது. ஆனந்த் நகரத்தை சேர்ந்த சன்னி படேலும், அவரது மனைவி மோனாலியும் லண்டனில் வசித்து வந்தனர். அவர்கள் அங்கு தொழில் செய்கின்றனர். அவர்கள் தங்களது இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு லண்டன் சென்றபோது விமான விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இருவரும் கடந்த 12ம் தேதி விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்வதாக இல்லை. அவர்கள் கடந்த 6ம் தேதிதான் பயணம் செய்ய திட்டமிட்டு டிக்கெட் எடுத்திருந்தனர். கடைசி நேரத்தில் சில வேலைகள் இருந்ததால் பயணத்தை 12ம் தேதிக்கு தள்ளிவைத்து தங்களது உயிரை விட்டுள்ளனர். இது குறித்து சன்னி படேல் உறவினர் ஜிக்னேஷ் கூறுகையில், ''இரண்டு பேரும் கடந்த இரண்டு மாதங்களாக ஆனந்த் நகரில்தான் இருந்தனர்.

மோனாலி மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். அவருக்காக தனது தொழிலை ஒதுக்கி வைத்துவிட்டு சன்னியும் வந்திருந்தார். மோனாலி எனது இரண்டரை வயது மகன் மீது அதிக அன்பு வைத்திருந்தார். அவர்களுக்கு குழந்தை இல்லை. ஆனால் எனது குழந்தைகளை அவர்களது குழந்தைகளாக நினைத்து அன்பு செலுத்தினர். 12ம் தேதி நானும், எனது மனைவி மற்றும் மகனுடன் சென்று மோனாலியையும், சன்னியையும் சந்தித்து பேசினோம். மோனாலி என்னை கட்டிப்பிடித்து எனக்கு ஆசீர்வாதம் கொடுத்து மீண்டும் வருவோம் என்று தெரிவித்தார். விமான நிலையத்திற்குள் சென்றதில் இருந்து எனக்கு மெசேஜ் அனுப்பிக்கொண்டிருந்தார். கடைசியாக 1.20 மணிக்கு மெசேஜ் அனுப்பி அனைத்தும் முடிந்துவிட்டதாகவும், சென்று வருவதாகவும் குறிப்பிட்டு இருந்தார். அடுத்த சில நிமிடத்தில் விமானம் விபத்துக்குள்ளாகிவிட்டதாக செய்தி வந்தது. எங்களுக்கு ஆரம்பத்தில் குழப்பமாக இருந்தது.
மோனாலி பயணம் செய்த விமான விபரத்தை உறவினரிடம் கேட்டு உறுதி செய்து கொண்டேன். அதோடு விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்தவர்கள் பட்டியலில் மோனாலியின் பெயரும் இருந்தது. உடனே அகமதாபாத்திற்கு புறப்பட்டு சென்றேன். மோனாலியின் பெற்றோருக்கு போன் செய்து மோனாலியும், சன்னியும் அவசர சிகிச்சை பிரிவில் இருப்பதாக தகவல் கொடுத்தோம். உடனே அவர்கள் கிளம்பி அகமதாபாத் வந்துவிட்டனர். இருவருக்கும் 7 ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடந்தது'' என்றார்.
விமானத்தின் வால் பகுதியில் சிக்கி இருந்த உடல்கள்
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் பல துண்டுகளாக உடைந்து விழுந்தது. இந்த விபத்தில் விமானத்தின் வால் பகுதி விமானம் விழுந்த பி.ஜெ.மருத்துவ கல்லூரி விடுதியில் விழுந்தது. விடுதியின் மாடி பகுதியில் விமானத்தின் வால் பகுதி சிக்கி இருந்தது. மீட்பு படையினர் வால் பகுதியை வெட்டி எடுத்தபோது அதில் ஒரு பணிப்பெண் உடல் கருகி அழுகிய நிலையில் இருந்தது. தீயை அணைக்க பயன்படுத்திய தண்ணீரில் உடல் மிதந்து கொண்டிருந்தது. மற்றொரு உடல் விடுதி இடிபாடுகளில் சிக்கி இருந்தது. அந்த உடலும் மிகவும் அழுகிய நிலையில் இருந்தது. அந்த உடல் மாணவருக்குறியதா அல்லது மருத்துவ கல்லூரி ஊழியரா என்று தெரியவில்லை. விமானத்தின் வால் பகுதியை கேஸ் கட்டர் மூலம் வெட்டி கிரேன் மூலம் கீழே இறக்கினர். விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்கள் இன்னும் முழுமையாக அகற்றப்படவில்லை.
விபத்தில் இறந்தவர்களில் 19 பேரின் உடல்கள் டி.என்.ஏ மாதிரியுடன் ஒத்துப்போனது. இதையடுத்து முதல் கட்டமாக 8 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முதல் உடல் நேற்று மாலை 5 மணிக்கு ஒப்படைக்கப்பட்டது. மருத்துவமனையில் இருந்து போன் வந்த பிறகு மருத்துவமனைக்கு வரும்படி உறவினர்களிடம் பி.ஜெ.மருத்துவமனை மருத்துவ கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.