Plane crash: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 274 ஆக உயர்வு
குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து 230 பயணிகள் மற்றும் 12 விமான பணியாளர்களுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விமான விபத்து உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது அந்த விமானம் விழுந்து வெடித்துச் சிதறி தீப்பிடித்தது. இந்த விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்பட 274 பேர் பலியாகியுள்ளனர்.
பலியானவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உறவினர்களிடமிருந்து டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்படுகிறது.

விபத்துக்குள்ளான ஏா் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி, நேற்று மீட்கப்பட்டது. மேலும் இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது.
விடுதிக் கட்டடம் அருகே தேநீா் கடை நடத்தும் குடும்பத்தைச் சோ்ந்த சிறுவன், மருத்துவக் கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் 33 பேர் என பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதற்கிடையில் பயணிகளை ஏற்றிச் செல்ல உதவுவதற்காக வந்தே பாரத் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
ஏர் இந்தியா விமான விபத்தைத் தொடர்ந்து அகமதாபாத் விமான நிலையத்தில் விமான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருப்பதையடுத்து, சிக்கித் தவிக்கும் பயணிகளை ஏற்றிச் செல்ல உதவுவதற்காக வந்தே பாரத் ரயில்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
சாதாரண விமான சேவைகள் மீண்டும் தொடங்கும் வரை அகமதாபாத்தில் இருந்து முக்கிய நகரங்களுக்கு பயணிகள் போக்குவரத்தை எளிதாக்குவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.