Ahmedabad Plane Crash: விமான விபத்துகளுக்கான காரணத்தைக் கூறும் 'Black Box' பற்றி தெரியுமா?
குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
என்ன நடந்தது?
ஏர் இந்தியாவின் விமானம் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து மதியம் 1:39 மணியளவில் புறப்பட்டிருக்கிறது.
23வது ரன்வேயில் இருந்து டேக் ஆஃப் ஆன விமானம் 5 நிமிடத்துக்குள்ளாகவே விபத்துக்குள்ளாகியிருக்கிறது.
அதன் கடைசி சிக்னல் 625 அடி உயரத்தில் இருந்து பெறப்பட்டுள்ளது. 57 மீட்டர் நீளம், 60 மீட்டர் அகலம் மற்றும் 17 மீட்டர் உயரம் கொண்ட போயிங் விமானம் அவ்வளவு கீழே பயணிப்பது மிகவும் ஆபத்தானது.
கடைசியாக விமானத்தில் இருந்து விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்துக்கு (ATC) மேடே (MAYDAY) கால் அளித்திருக்கின்றனர்.
அதன்பிறகு ATC-யிலிருந்து விடுக்கப்பட்ட அழைப்புகளுக்கு விமானத்தில் இருந்து பதில் இல்லை.
MAYDAY கால் என்பது விமானத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழலில் உடனடி அவசர உதவிகள் கேட்டு விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்துக்கு விடுக்கப்படும் அழைப்பு.
ஒரு நிமிடத்துக்கு உள்ளாகவே கீழே சரிந்த விமானம், மேகானிநகர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனை குடியிருப்பு கட்டடத்தில் மோதி வெடித்துச் சிதறியுள்ளது.
விமானம் புறப்பட்ட பிறகு, திடீரென சரிசெய்ய முடியாத சிக்கல் எழுந்திருக்கலாம் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.
ஆனால் சரியாக என்ன நடந்தது, எப்படித் தெரிந்துகொள்வது? விமானிகளின் வாக்குமூலம் கிடைக்காது. விமானத்துக்குள் இருந்த எல்லாமும் எரிந்துவிட்டன, விமானப் பாகங்களை ஆராய்வதும் நடக்காத காரியம்.
ஆனால் விமான பயணத்தைப் பொறுத்தவரையில் வரும் முன் காப்பது மட்டுமே சாத்தியம். ஒவ்வொரு விமான விபத்திலிருந்தும் அதற்கான காரணங்களை ஆராய்ந்தால் மட்டுமே அடுத்தமுறை அந்தச் சிக்கல் எழாமல் பாதுகாக்க முடியும். இதற்காக உருவாக்கப்பட்டதுதான் கருப்புப் பெட்டி.
அந்த ஒரு தொழில்நுட்பக் கருவி மட்டுமே விமானத்துக்கு என்ன நடந்தது என்பதைக் கூற முடியும். எல்லா விமானங்கள், ஜெலிகாப்டர்களிலும் கட்டாயமாக வைக்கப்படும் கருப்புப் பெட்டி எப்படிச் செயல்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
எங்கே இருக்கும், எப்படி இருக்கும்?
பொதுவாக போயிங் விமானங்களின் வால் பகுதிகளில் கறுப்பு பெட்டி இருக்கும்.
ஏனென்றால் விபத்து ஏற்படுகையில் வால் பகுதி மட்டுமே பாதிப்பு ஏற்படாமல் இருக்க வாய்ப்பு அதிகம். விமானம் வெடித்துச் சிதறினாலும் கருப்புப் பெட்டியை மீட்பதற்கான வாய்ப்பு அதிகம் என்பதனால் வால் பகுதியைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இந்தக் கருப்புப் பெட்டிகள் உண்மையில் கறுப்பு நிறத்தில் இருக்காது. பளீரென தென்படும்படியாக ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
அப்போதுதான் அவற்றை எளிதாகக் கண்டறிந்து மீட்க முடியும். பின்னர் ஏன் அவை கருப்புப் பெட்டிகள் என அழைக்கப்படுகின்றன? பின்னால் பார்க்கலாம்...
விமானத்தின் மாடலைப் பொருத்து இவை 20 - 25 செ.மீ நீளம், 12 - 15 செ.மீ அகலம் மற்றும் 10 - 12 செ.மீ உயரமாக இருக்கும். 4-10 கிலோ எடை கொண்டதாக இருக்கும் இந்தச் சிறிய கருவிதான் விமானத்தின் வரலாற்றையே உள்ளடக்கி வைத்திருக்கும்.
இதனால் இதனை வலிமையானதாகவும் உருவாக்குவர், தண்ணீரில் 20 ஆண்டுகள் வரை அழியாமல் நீடிக்கும். பல அடுக்குகளைக் கொண்ட டைட்டானியம் மற்றும் ஹை ஸ்ட்ரென்த் ஸ்டீலால் உருவாக்கப்பட்டிருக்கும்.
இது 1000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தைத் தாங்கும் திறனோடும், 20000 அடி உயரத்தில் இருந்து விழுந்தாலும் எதுவும் ஆகாதவாறும், கடலில் விழுந்து விபத்துக்குள்ளானாலும் 30 நாட்களுக்கு அல்ட்ரா சவுண்ட் சிக்னல்களை அனுப்பும்.
கருப்புப் பெட்டி எப்படி உருவானது?
ஆஸ்திரேலியாவின் வானூர்தி ஆராய்ச்சி ஆய்வகத்தில் (ARL) பணியாற்றிய டேவிர் வாரன் என்ற ஆய்வாளர்தான் கருப்புப் பெட்டி என்ற திட்டத்தை முதன்முதலில் முன்மொழிந்தார்.
அப்போது இதன் பெயர் கருப்புப் பெட்டி அல்ல. விமானத்தின் தரவுகள் மற்றும் விமானிகளின் குரலைப் பதிவு செய்யும் ஒரு கருவியை உருவாக்க வேண்டுமென்று கூறினார். 1957ம் ஆண்டு இதற்கான முன்மாதிரியை வடிவமைத்தார்.
டேவின் வாரனின் தந்தை ஹ்யூபர்ட் வாரன் ஒரு விமான விபத்தில் உயிரிழந்தார். இது விமானப் பாதுகாப்பு பற்றிய பணியில் அவரைச் செயல்படத் தூண்டியது.
1953ல் ஒரு விமான விபத்தை ஆய்வு செய்கையில், விமான விபத்துகளில் தரவுகள் கிடைப்பது கடினமாக இருப்பதை உணர்ந்துள்ளார். இதுவே கருப்புப் பெட்டியை உருவாக்க உத்வேகமாக அமைந்தது.
ஆரம்பத்தில் இவரது ஐடியா விமானிகளை உளவு பார்ப்பதுபோல இருப்பதாகச் சில அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். பின்னர் கருப்புப் பெட்டியின் அவசியத்தைப் புரிந்துகொண்டு அதைக் கட்டாயமாக்கினர்.
ஆரம்பத்தில் எஃகு கம்பிகளால் உருவாக்கப்பட்ட கருப்புப் பெட்டிகள் பின்னர், பல ஆய்வாளர்கள், நிறுவனங்கள் உதவியால் இன்றைய நவீன வடிவத்தைப் பெற்றுள்ளது.
கருப்புப் பெட்டி எப்படி வேலை செய்கிறது?
கருப்புப் பெட்டி விமானம் விபத்துக்குள்ளாகும் தருணம் வரை அதன் தரவுககள் அனைத்தையும் சேகரித்து வைக்கும். இந்த தரவுகள்தான் விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய உதவும்.இந்த தரவுகளை இரண்டாகப் பிரிக்கின்றனர். CVR - cockpit voice recorder (விமானிகள் அறை குரல் பதிவுக் கருவி), FDR - Flight data recorder (விமான தரவு சேகரிப்புக் கருவி). FDR, விமானம் பறக்கும் உயரம், காற்றின் வேகம், திசை, எஞ்சினின் செயல்திறன், கட்டுப்பாட்டின் உள்ளீடுகள் மற்றும் பிற சிக்கலான செயல்பாட்டுத் தரவுகளைப் பதிவு செய்து வைத்திருக்கும். இதன்மூலம் விபத்தின் சூழ்நிலையை அறிய முடியும், தரவுகள் மூலம் விமானம் தரையில் விழுந்த வேகத்தையும் கணக்கிட முடியும்.
நவீன FDR-கள் நூற்றுக்கணக்கான அளவுருக்களைச் சேகரிக்கும் என்கின்றனர். சுருக்கமாக, மின்னணு தரவு சேகரிப்பு தொகுப்பு எனக் கருப்புப் பெட்டியை வரையறுக்கலாம்.
விபத்துக்கு 25 மணிநேரம் முன்னாள் உள்ள தரவுகள் வரை இதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். விமானத்தின் அமைப்பில், செயல்பாட்டில் உள்ள பிரச்னைகளைக் கண்டறிய இது உதவும்.
CVR, விமானிகளின் உரையாடல்கள், விமான கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்புகள் மற்றும் சுற்றுப்புற சத்தத்தை ஆடியோவாகப் பதிவு செய்யும். விபத்து குறித்து பெரும்பாலான முடிவுகளை அறிய இந்தக் குரல் பதிவுகள் உதவும்.
FDR மற்றும் CVR இரண்டு தனித்தனியான உறைகளில் வைக்கப்படும்.
கருப்புப் பெட்டி எனப் பெயர் வைத்திருப்பது ஏன்?
ஒரு விபத்திலிருந்து மீட்கப்படும் கருப்புப் பெட்டியை அதற்கென இருக்கும் ஆய்வுக் கூடத்தில் சிறப்பு அதிகாரிகளை வைத்து மட்டுமே பரிசோதனை செய்ய முடியும். எளிதாக அதிலிருந்து தரவுகளை எடுக்க முடியாது.
தரவுகளை ரகசியமாக மறைத்து வைத்திருப்பதனால் இஞ்சினியர்கள் இதனை பிளாக் பாக்ஸ் என அழைத்துள்ளனர்.
ஆரம்பக் கால கருப்புப் பெட்டி அடர்நிறம் கொண்ட உலோக பெட்டியில் வைக்கப்பட்டிருந்ததாலும் அந்தப் பெயர் வந்திருக்கலாம் என்கின்றனர்.