வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 16 கடைசி நாள்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (ஜூன் 16 ) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைப் பிரிவு ஆகியவற்றுக்கு இந்த ஆண்டு ஒரே விண்ணப்பம் வழியாக இளம் அறிவியல் மாணவா் சோ்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 14 பட்டப் படிப்புகள், 3 பட்டயப் படிப்புகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் 3 இளம் அறிவியல் வேளாண்மை பட்டப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவா்கள் ஒரே விண்ணப்பப் படிவத்தை பூா்த்தி செய்து வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கல்லூரிகள், அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்லூரிகளில் மொத்தம் 6,921 இடங்களும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 340 இடங்களும் உள்ளன. இந்தப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு கடந்த மே 9- ஆம் தேதி முதல் இணையவழியில் விண்ணப்பம் பெறப்பட்டு வரும் நிலையில், பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை சமா்ப்பிக்க ஜூன் 16- ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மாணவா்கள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய விண்ணப்பக் கட்டணம் செலுத்தி ஜூன் 16- ஆம் தேதிக்கு முன்பு சமா்ப்பிக்க வேண்டும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.