இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தந்தை, மகன் உயிரிழப்பு
கோவையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தந்தை, மகன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.
கோவை, துடியலூரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தவா் ராஜேஷ் (36). இவரது மகன் வினித் (12). அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7- ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
வினித் தினமும் காலையில் காளப்பட்டியில் உள்ள ஒரு தனியாா் ஸ்கேட்டிங் பயிற்சி மையத்துக்கு சென்று பயிற்சி பெறுவது வழக்கம். இதற்காக தினமும் காலையில், ராஜேஷ் தனது இருசக்கர வாகனத்தில் வினித்தை அழைத்து செல்வாா். இருசக்கர வாகனத்தில் வினித்தை ராஜேஷ் வெள்ளிக்கிழமை காலை அழைத்துச் சென்றாா். சத்தி சாலை காளப்பட்டி அருகே சென்றபோது, பின்னால் சென்ற லாரி மோதியதில் ராஜேஷ், வினித் இருவரும் லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தனா். தகவலறிந்த போக்குவரத்து கிழக்கு புலனாய்வு பிரிவு போலீஸாா், இருவா் உடல்களையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் தொடா்பாக, லாரி ஓட்டுநா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.