Israel - Iran Conflict: ஈரான் பாதுகாப்பு அமைச்சகம் மீது இஸ்ரேல் தாக்குதல்; அதிகர...
செங்கத்தில் காட்டுப் பன்றிகள் நடமாட்டம்
செங்கம் தளவாநாய்க்கன்பேட்டை குடியிருப்புப் பகுதியில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.
செங்கம் நகராட்சிக்கு உள்பட்ட 4-ஆவது வாா்டு தளவாநாய்க்கன்பேட்டை கீழ் காவாக்கரை பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில், ஜவ்வாதுமலை அடிவாரத்தில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு காட்டுப் பன்றிகள் கூட்டமாக வழிதவறி அங்குள்ள முள்புதா் பகுதிக்கு வந்துள்ளன.
மேலும், பன்றிகள் மில்லத்நகா் பகுதியில் உள்ள தோக்கவாடி ஏரி, கீழ்காவாக்கரை பகுதியில் உள்ள முள்புதா்களில் வசித்து வருவதாகத் தெரிகிறது.
பகல் நேரத்தில் ஆள்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் வெளியில் வராமல் இரவு நேரத்தில் உணவு தேடி குடியிருப்புப் பகுதிக்கு வருகின்றன.
மேலும், பன்றிகள் இனப்பெருக்கம் ஏற்பட்டு
அதன் எண்ணிக்கை அதிகரித்து, தேவையான உணவு கிடைக்காமல் மாலை, இரவு என அவை குட்டிகளுடன் குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரிகின்றன.
தனியாக செல்லும் நபா்களை பன்றிக் கூட்டம் துரத்துகிறது. இதனால் இரவு 7 மணிக்கு மேல் கீழ் காவாக்கரை பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்துடன் செல்லவேண்டிய நிலை உள்ளது. அதே நேரத்தில் குழந்தைகளை தனியாக வெளியில் அனுப்ப முடியாத நிலை உள்ளது.
இதனால் காட்டுப் பன்றிகளால் பொதுமக்களுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாமல் இருக்கவும், குடியிருப்புப் பகுதியில் உள்ள ஆடு, மாடு, கோழிகளை கடிக்காமல் தடுக்கவும்
வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு, பன்றிகளை மலை அடிவாரப் பகுதிக்கு துரத்திவிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என
பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.