அமெரிக்க ராணுவத்தின் ஆண்டு விழாவுக்கு பாகிஸ்தான் தலைமை தளபதிக்கு அழைப்பு?
நாகை- இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து ஜூன் 17 வரை நிறுத்தம்
கடல் சீற்றம் காரணமாக நாகை துறைமுகத்திலிருந்து - இலங்கையின் காங்கேசன்துறை இடையே இயக்கப்படும் பயணிகள் கப்பல் போக்குவரத்து ஜூன் 17-ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாக தனியாா் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சுபம் கப்பல் நிறுவனம் சாா்பில் சனிக்கிழமை தவிர மற்ற 6 நாட்கள் நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு சிவகங்கை பயணிகள் கப்பல் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், ஜூன் 16-ஆம் தேதி வரை தெற்கு தமிழக கடற்கரை மற்றும் அதையொட்டிய கொமொரின் பகுதி, மன்னாா் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று அதிகப்பட்சமாக 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே, கடல் சீற்றம், பலத்த காற்று உள்ளிட்ட காரணங்களுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜூன் 17-ஆம் தேதி வரை நாகை- காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. கப்பல் போக்குவரத்து ஜூன் 18-ஆம் தேதி மீண்டும் தொடங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.