ஹாக்கி புரோ லீக்: ஆஸ்திரேலியாவிடம் இந்திய மகளிரணி தோல்வி!
லண்டனில் நடைபெற்றுவரும் ஹாக்கி புரோ லீக் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 1 - 2 என்ற புள்ளிக் கணக்கில் இன்று (ஜூன் 15) தோல்வி அடைந்தது.
இதற்கு முன்பு வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் 2 - 3 என்ற புள்ளிக் கணக்கில் இதே அணியிடம் இந்தியா தோல்வி அடைந்திருந்த நிலையில், மீண்டும் மற்றொரு தோல்வியை சந்தித்துள்ளது.
லண்டனில் உள்ள லீ வேலி ஹாக்கி திடலில் இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டி இன்று (ஜூன் 15) நடைபெற்றது.
விறுவிறுப்பாகத் தொடங்கிய இப்போட்டியின் 3வது நிமிடத்தில் இந்தியாவின் வைஷ்ணவி பால்கே ஒரு கோல் அடித்து புள்ளிப் பட்டியலைத் தொடக்கிவைத்தார். இதன்மூலம் 1 - 0 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது.
37வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஆமி லவ்டன் கோல் அடித்து புள்ளிப் பட்டியலை சமன் செய்தார்.
தொடர்ந்து இரு அணிகளும் போராடி வந்த நிலையில், போட்டி சமனில் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், கடைசி நேரத்தில் ஆஸ்திரேலியா பெனால்டி கோல் அடித்து இந்தியாவை வீழ்த்தியது.
இதன்மூலம் இந்தத் தொடரில் இரண்டாவது முறையாக ஆஸ்திரேலியாவிடன் இந்திய மகளிரணி தோல்வி கண்டுள்ளது.
அடுத்தப்போட்டி நாளை மறுநாள் (ஜூன் 17) ஆர்ஜென்டினாவுடன் நடைபெறவுள்ளது.
இதையும் படிக்க |பாட் கம்மின்ஸ் சாதனை: 12 ஆண்டுகளுக்குப் பிறகு லார்ட்ஸ் பலகையில் இடம்!