செய்திகள் :

சொல்லப் போனால்... சொந்த மண்ணிலேயே அன்னியரைப் போல...

post image

தமிழ்நாட்டிலுள்ள ரயில்வே, மத்திய அரசு மற்றும் சார்ந்த துறைகளில் தமிழ் அறியாத பணியாளர்களைக் கொண்டுவந்து குவிப்பதன் மூலம் யார் என்ன சாதிக்க முனைகிறார்கள் எனத் தெரியவில்லை; ஆனால், அவதிப்படுவது என்னவோ மக்கள்தான்!

தமிழ்நாட்டில் பணியாற்றும் இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்.) அலுவலர்களில் எத்தனை பேர் தமிழர்கள்? என்றொரு கேள்வியைத் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆர்வலர் ஒருவர் எழுப்பியதற்குக் கிடைத்த விடை அதிர்ச்சியளிப்பாக இருக்கிறது – 12 பேர் மட்டுமே!

அகில இந்திய அளவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் குடிமைப் பணித் தேர்வுகளின் மூலம் இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி, அயலுறவுப் பணி, வனப் பணி, வருவாய்ப் பணி எனப் பலவற்றுக்கும் உயர் அலுவலர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

கடந்த 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி நாட்டில் 5,055 ஐ.பி.எஸ். அலுவலர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டில் எத்தனை ஐபிஎஸ் அலுவலர்கள் பணியாற்றுகின்றனர்? இவர்களில் எத்தனை பேர் தமிழர்கள்? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார் இந்த ஆர்வலர்.

இதற்கான பதில் – தமிழ்நாட்டில் 203 ஐபிஎஸ் அலுவலர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 12 பேர் மட்டுமே. மீதியுள்ள 191 பேர் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது; நம்ப முடியவில்லை. ஆக, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வெறும் 5.91 சதவிகிதம் மட்டுமே!

காவல் பணியில் நிலைமை இப்படியானால் தமிழ்நாட்டில் இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்.) அலுவலர்களில் தமிழர்கள் அல்லது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர், எத்தனை சதவிகிதம்? தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இன்னொரு கேள்வி எழுப்பும்போதுதான் சாதாரண மக்களுக்குத் தெரிய வரும்.

நண்பர் ஒருவரை அழைத்து வருவதற்காக சில நாள்களுக்கு முன் சென்னையில் எழும்பூர் ரயில் நிலையத்துக்குக் காலை 6.30 மணிவாக்கில் சென்று நடைமேடைச் சீட்டு வாங்குவதற்காக வரிசையில் நின்றபோது மிகவும் கசப்பான நிகழ்வொன்றைக் காண நேரிட்டது.

பயணச் சீட்டு வழங்குவதற்காக சில கவுன்டர்கள் மட்டுமே திறந்திருந்தன. நிறைய ரயில்கள் வந்துசேரும் நேரம், கூடவே நிறைய ரயில்களின்  புறப்பாடுகளும். எல்லா கவுன்டர்களிலும் நடைமேடைச் சீட்டு வழங்கப்படும் என்ற அறிவிப்பு, அனைத்து வரிசைகளிலுமே நீண்ட வரிசை. வெளியூர் செல்லும் பயணிகளும் நடைமேடைச் சீட்டு பெறுவோரும் கலந்துகட்டி நிற்பதால் தேவையற்ற தாமதம்.

இதுவல்ல முதன்மையான பிரச்சினை. பரபரப்பான தருணத்தில், ரயிலைப் பிடிக்க வேண்டிய அவசரத்தில், பக்கத்து வரிசையில் பயணச் சீட்டைப் பெற நிற்கும் ஒருவர், ஒரு குறிப்பிட்ட ரயிலின் பெயரைக் கூறி, ஏதோ ஒரு ரயில் நிலையத்தில் நிற்குமா? விரைவு ரயிலா, பாசஞ்சர் ரயிலா? என்பது போன்ற கேள்வியை கவுன்டரில் இருப்பவரிடம் தமிழில் கேட்கிறார். கவுன்டரில் இருப்பவருக்கோ தமிழ் தெரியவில்லை; அல்லது தமிழில் கேட்கப்பட்ட எதுவும் அவருக்கு சரியாகப் புரியவில்லை. மீண்டும் மீண்டும் இருவருமாக அவரவர் மொழியில் உரத்த குரலில் பேசிக் கொண்டிருக்கின்றனர். வேறொருவர் உதவிக்கு வந்தார். வெறுத்துப்போன பயணி நகர்ந்துவிட்டார்; ஒருவேளை தமிழ் தெரிந்தவர் யாரேனும் இருக்கலாம் என்ற நம்பிக்கையில் அடுத்த கவுன்டருக்கான வரிசைக்குச் சென்றிருக்கலாம்.

விசாரித்த பயணிக்கு ஆங்கிலம் தெரிந்திருக்குமா? கவுன்டரில் இருந்தவருக்கு என்ன தெரியும்? தெரியவில்லை. ஆனால், இந்த வாக்குவாதத்தைத் தொடர்ந்து, இந்தப் பகுதியில் பயணச்சீட்டுப் பெற வரிசைகளில் நின்றுகொண்டிருந்த பயணிகளில் பெரும்பாலானோர், ரயில்வேயின் தமிழ் தெரியாத பணியாளர்கள் தொடர்பாகக் கடும் விமர்சனங்களையும் அதிருப்தியையுமே எரிச்சலுடன் பகிர்ந்துகொண்டனர்.

பயணச் சீட்டு வழங்குமிடங்கள் மட்டும் அல்ல, ரயில்வேயின் சகல இடங்களிலும் இப்போது தமிழ் தெரியாத, தமிழைப் புரிந்துகொள்ளவும் முடியாத ஊழியர்கள், பணியாளர்கள், அலுவலர்கள் ஏராளமாகப் பணியாற்றுகின்றனர்.

ரயில் பயணத்தின்போது வரும் தமிழ் அறியாத டிக்கெட் பரிசோதகர்களால் பல நேரங்களில் பயணிகளுடன் வாக்குவாதங்கள், தேவையற்ற மோதல்கள்  நேரிடுகின்றன. படுக்கை எண்ணைத் தமிழில் (பதினேழு, ஐம்பத்திரெண்டு என்று)  தெரிவித்ததற்காக முகத்தைச் சுளித்த, கொந்தளித்து எரிச்சலாக எதிர்வினையாற்றிய பரிசோதகர்களை நேரிலேயே பார்த்திருக்கிறேன். ரயிலில் வரும் பயணிகள் அனைவரும் எண்களை ஆங்கிலத்தில் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? அதுவும் தமிழ்நாட்டிற்குள்ளே சென்று வரும் ரயில்களிலேயே!

இன்னமும் ரயில் நிலைய அலுவலர்கள் (ஸ்டேஷன் மாஸ்டர்கள்), ஓட்டுநர்கள், கார்டுகள் மற்றும் கேங் மேன்கள், வெல்டர், ஃபிட்டர் போன்ற பிற உடலுழைப்புத் தொழிலாளர்கள் எனத் தமிழ் தெரியாத வேற்றுமொழிக்காரர்கள் நிரம்பியிருக்கிறார்கள். பகல்நேர ரயில்களில் கேட்டரிங் தொழிலாளர்கள்கூட அதிகளவில் தமிழ் தெரியாதவர்களே. ஆனால், இவர்கள் தமிழைப் புரிந்துகொண்டுவிடுகிறார்கள்.

ஏதோ ஒரு பெட்டியில் அல்லது ரயில் நிலையத்தில் ஓரிடத்தில் தீப்பற்றி எரிகிறது என்று யாராவது தமிழில் சொன்னால்கூட இவர்களில் பலர் சிரித்துக்கொண்டுதான் கடந்து செல்வார்களாக இருக்கும்!

அல்லாமல் திரும்பிய பக்கமெல்லாம் ஹிந்தி எழுத்துகள், அறிவிப்புப் பலகைகள். ஒலிபெருக்கியில் தொடரும் ஹிந்தி அறிவிப்புகள். நல்லவேளையாகத் தமிழும் இருக்கிறது (ஹிந்திக்காரர்கள் கஷ்டப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவோ என்னவோ, சென்னை மாநகரில் மின்சார மற்றும் மெட்ரோ ரயில்களில் எல்லாமும்கூட தமிழ், ஆங்கிலத்துடன் ஹிந்தியிலும் அறிவிப்புகள் ஒலிபரப்பப்படுகின்றன - தில்லி, கொல்கத்தா, மும்பை எங்கேனும் தமிழில் அறிவிப்புகள் இருக்கின்றனவா?).

சுருக்கமாகச் சொன்னால் இப்போதெல்லாம் ரயில்வே நிலையங்களும் ரயில் பயணங்களும் நாம் தமிழ்நாட்டிற்குள்தான் இருக்கிறோமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடியதாக மாறிவிட்டிருக்கிறது.

இந்த நிலைமை தற்போது ரயில்வேயில் மட்டுமல்ல; வங்கிகள், அஞ்சல் நிலையங்கள் மற்றும் பிற மத்திய அரசுத் துறை நிறுவனங்கள் பலவற்றிலும், எங்கே சென்றாலும் நாள்தோறும் ஏதோவொரு வாக்குவாதத்தை அல்லது சண்டையைப் பார்க்கலாம் என்றாகிக் கொண்டிருக்கிறது.

சில வாரங்களுக்கு முன் கர்நாடகத்தில் பெங்களூரிலுள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையொன்றில் வாடிக்கையாளர் கன்னடத்தில் பேச, வங்கி அலுவலர் பேச மறுத்ததும் வாக்குவாதமாகி, தொடர்ந்து பொதுவெளியில் சர்ச்சையாக மாறி, வங்கிகளிலும் பிற இடங்களிலும் கன்னடம் தெரிந்தவர்களை நியமியுங்கள் என்று மாநில முதல்வர் சித்தராமையா அறிக்கை வெளியிட வேண்டிய நிலையேற்பட்டது.

வங்கிகளில் பணிபுரிய வரும் பிற மாநில ஊழியர்கள், ஆறு மாதங்களுக்குள் உள்ளூர் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றொரு விதி இருந்ததாகவும் தற்போது இந்த விதி நீக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில், தமிழ் மக்கள் வாழும் பரப்பில் செயல்படும் வங்கிகளில் பயன்படுத்தப்படும் படிவங்களில் ஹிந்தி இருக்க வேண்டும் என்பதில் காட்டும் அக்கறையை ஏனோ தமிழில் இருக்க வேண்டும் என்பதில் காட்டுவதில்லை.

இந்த மொழிப் பிரச்சினை இப்போது அஞ்சல் நிலையங்களிலும் தொடங்கிவிட்டது.

சில பத்தாண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டின் அலுவலகங்களில் தமிழ் தெரியாதவர்கள் – பிற மொழி பேசுவோர் தொகை இந்த அளவுக்கு இல்லை. எங்கேனும் ஓரிருவர் இருப்பார்கள்; அவர்களும் எளிதில் தமிழைக் கற்றுக்கொண்டு விடுவார்கள். ஆனால், கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளில் அளவுக்கு அதிகமானோர் பணியாற்றத் தொடங்கியுள்ள நிலையில் தமிழைக் கற்றுக்கொள்ள வேண்டியதில்லை; சமாளித்துக் கொள்ளலாம் என நினைக்கிறார்களோ என்னவோ?

தமிழ்நாட்டில் பணிபுரிய வருவோருக்கு, ரயில்வே உள்பட அது எந்தத் துறையாக இருந்தாலும் தமிழ் தெரிந்திருக்க வேண்டும்; குறிப்பிட்ட காலத்தில் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற விதி ஏற்படுத்தப்பட வேண்டும் (ஐஏஎஸ், ஐபிஎஸ் அலுவலர்களுக்கு இத்தகைய விதி இருக்கிறது; கற்றுக்கொள்கிறார்களா எனத் தெரியவில்லை).

இது எல்லா மாநிலங்களுக்குமே பொருந்தும். தில்லிக்குச் சென்றால் ஹிந்தி, மேற்கு வங்கத்துக்குச் சென்றால் வங்க மொழி, ஹைதராபாதுக்குச் சென்றால் தெலுங்கு, கேரளத்துக்குச் சென்றால் மலையாளம் என யாராக இருந்தாலும் அந்தந்த ஊரின் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படுவது மட்டும்தான் தீர்வாக இருக்கும்.

அலுவலகங்களுக்குள் இருந்தால்கூட பரவாயில்லை; மக்கள் தொடர்புள்ள இடங்களில், மக்களுடன் உறவாட வேண்டிய இடங்களில் உள்ளூர் மொழிகளைத் தெரிந்தவர்களை மட்டுமே நிர்வாகங்கள் நியமிக்க வேண்டும். ஆங்கிலம் தெரிந்திருந்தால் மட்டும் போதுமானதல்ல. கண்டிப்பாக, அந்தந்தப் பகுதி மக்களின் பேச்சு மொழியை அறிந்திருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் மாநில அரசுப் பணி புரிவோருக்குத் தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியுள்ள மாநில அரசு, தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வுகளில் தமிழைக் கட்டாயமான ஒரு கேள்வித் தாளாகவும் வைத்திருக்கிறது.

இவ்வாறு பிற மொழி பேசுவோர் பெரும் எண்ணிக்கையில் ரயில்வே, வங்கிகள் உள்பட தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு நிறுவனங்களில் – அலுவலகங்களில்  பணிபுரிய வருவதில் அரசியல் உள்பட பல்வேறு நோக்கங்கள் இருப்பதாக அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழ் மொழிப் பற்றாளர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இத்தகைய நிலைமைக்கு இன்னொரு பரிமாணமும் இருக்கிறது - மத்திய அரசு மற்றும் சார்ந்த நிறுவனங்களின் பணிகளில் அதிகளவில் பிற மாநிலங்களை, குறிப்பாக, ஹிந்தி தெரிந்தவர்கள் நியமனம் பெற்று வருவதற்குக் காரணம், பெரும்பாலான மத்திய அரசுப் பணி, வங்கிப் பணித் தேர்வுகள் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் நடத்தப்படுவதுதான். ஹிந்தி மட்டுமே தெரிந்திருந்தால் போதும், இவர்களால் எளிதில் தேர்வில் வெற்றி பெற்றுவிட முடியும். ஆனால், தமிழ் போன்ற பிற மாநில மொழிக்காரர்கள், தங்கள் தாய் மொழி அல்லாத ஆங்கிலம் அல்லது ஹிந்தி என இரண்டிலொரு வேற்று மொழியைத் தெரிந்துகொள்ள  வேண்டும்.

குறிப்பிட்ட மாநிலங்களின் அரசுப் பணிகளைத் தவிர்த்து, நாடு தழுவிய அளவில் நடத்தப்படுகிற அனைத்துத் தேர்வுகளும், அனைத்துப் பணிகளுக்கும் அனைத்து மொழிகளிலும் எழுதக் கூடியதான வாய்ப்பை அனைத்து மொழியினருக்கும்  ஏற்படுத்தித் தர வேண்டும்.

தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டு – தமிழைப் பேசிக்கொண்டு, தமிழ்நாட்டிலேயே இருக்கிற ஒரு வங்கிக்கோ, மத்திய அரசு நிறுவனங்களுக்கோ அல்லது ரயில் நிலையத்துக்கோ செல்லும்போது, தமிழ் தெரிந்தவர்களாகப் பணியில் இருக்க வேண்டும்; நல்லபடியாக வேலை முடிய வேண்டும் என்ற அச்சத்துடன், ஏதோ வேற்றூருக்குச் செல்வதைப் போல அச்சத்துடன் செல்வது ஒருவருக்கு எத்துணை பெருந்துயரானதாக இருக்கும்?

வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் இந்தியாவின் பலம் என்றிருந்த காலம் ஒன்றிருந்தது. இன்றைக்குத் தெரிந்தோ தெரியாமலோ, திட்டமிட்டோ திட்டமிடாமலோ ஒற்றுமைக்குள் நிறைய வேற்றுமைகள் நுழைவதைப் போன்ற காட்சிகள் தெரிகின்றன. ரயில் நிலையங்களும் வங்கிகளும் மத்திய அரசு அலுவலகங்களும் தமிழ் மட்டுமே தெரிந்தவர்களைத் தமிழ்நாட்டுக்குள்ளேயே இரண்டாந்தரமானவர்களாக மாற்றும்போது விதைக்கப்படும் வெறுப்புணர்வு தொலைநோக்கில் யாருக்குமே நல்லது அல்லதானே!

இரு பெருந் துயரங்கள்!

வாரத் தொடக்கத்தில் மும்பைப் புறநகர் ரயில்கள் அதனதன் பாதையில் ஒன்றையொன்று கடந்து சென்றபோது குறுகலான ஒரு வளைவில் இரு ரயில்களிலும் வாசல்களில் தொங்கிக்கொண்டிருந்தோர் மோதிக்கொண்டு கீழே விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமுற்றனர். துயரம்.

நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் ஒலித்தன. மும்பை புறநகர் ரயில்கள் அனைத்திலும் அடுத்த ஆண்டுக்குள் – 2026 ஜனவரிக்குள் - தானியங்கி கதவுகள் பொருத்தப்படும் என ரயில்வே அறிவித்திருக்கிறது (கவாச் கதை மாதிரியாகிவிடக் கூடாது).

ஆனால், இது நடைமுறைச் சாத்தியமில்லை என்பது யாருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை கதவுகளை அமைத்துவிட்டாலும்கூட, மும்பை போன்ற பெருங்கூட்ட மாநகரில் செயலுக்குக் கொண்டுவருவதில் இருக்கும் சிரமம் தொடர்புடையவர்களுக்குத் தெரியும்; பார்க்கலாம், இன்னும் ஆறு மாதங்கள்தானே இருக்கின்றன.

நால்வருக்காக நொந்துகொண்டிருந்த சில நாள்களிலேயே இடியைவிட மிக மோசமாக அகமதாபாதிலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் விமானம் ஆயிரம் அடி உயரத்தைக்கூடத் தொடாமல் கட்டடங்களின் மீது எரிந்து விழுந்து வெடித்துச் சிதறியது – 274 பேர் பலி, கூடவே கட்டடங்களில் இருந்த மருத்துவர்கள் உள்பட சிலரும்.

வழக்கம்போல இழப்பீடு அறிவித்துக்கொண்டும், ஆறுதல் தெரிவித்துக்கொண்டும்  விபத்துக்குக் காரணங்கள் என்னவாக இருக்கலாம் என்று விவாதித்துக்கொண்டும் இருக்கிறார்கள்.

family killed in air india crash
கடைசிப் படம்...

என்ன கொடுத்தாலும், என்ன செய்தாலும் பறிபோய்விட்ட இத்தனை உயிர்களையும், கலைந்து, கருகிப் போய்விட்ட இவர்களுடைய பெருங்கனவுகளையும் யாரால், எவ்வாறு மீட்டெடுத்துத் தர முடியும்? சாவுக்குச் சற்றுமுன் தாய், தந்தையுடன் செல்ஃபிக்கு போஸ் கொடுக்கும் அந்தக் குழந்தைகளின் முகங்களைப் பார்க்க முடியவில்லை!

இதையும் படிக்க... சொல்லப் போனால்... நெரிசல் பலி; முதல் அல்ல, முடிவாக இருக்கட்டும்!

கப்பல் கவிழ்ந்தது; கேள்விகள் எழுந்தன...

உலக வா்த்தகத்தில் சுமாா் 80%-90% சரக்குப் போக்குவரத்து கடல் வழியாக நடைபெறுகிறது. உலகம் முழுவதும் உள்ள கடல் பரப்பில் சுமாா் ஒரு லட்சம் வா்த்தகக் கப்பல்கள் நாடுகளுக்கு இடையே சரக்குகளைக் கொண்டு செல்கின்ற... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... திட்டமிடப்படாத நெரிசல் கொலைகள்!

காலங்காலமாக நெரிசலில் சிக்கி உயிர்கள் இழக்கப்பட்டுக் கொண்டிருந்த போதிலும் மீண்டுமொரு முறை பெங்களூரில் ஆர்சிபி கிரிக்கெட் அணியின் ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்திருப்பது மக்கள்... மேலும் பார்க்க

முடிவுக்கு வருமா பாமக குடும்பச் சண்டை?

பாமக நிறுவனா் டாக்டா் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான டாக்டா் அன்புமணிக்கும் இடையே நிா்வாகிகள் நியமன விவகாரத்தில் ஏற்கெனவே உரசல்கள் நிலவும் வேளையில், புதுச்சேரியில் கடந்த ஆண்டு டிசம்ப... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... ஐஏஎஸ் கனவு என்றொரு மாயவலை!

கனவு காணுங்கள், கனவு காணுங்கள் என்ற தூண்டுதலில் குடிமைப் பணித் தேர்வுகளை எழுதச் சென்று வெற்றிகொள்ள முடியாதபோது, தன்னையே முடித்துக் கொள்வதும் எதிர்காலத்தைத் தொலைக்க நேர்வதும் புதிதாகச் சிந்திக்க வேண்டி... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... யார் அகதி? எது தர்ம சத்திரம்?

‘உலகம் முழுவதுமுள்ள அகதிகளை வரவேற்க இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல’ என்று இலங்கைத் தமிழர் தொடர்பான தீர்ப்பு ஒன்றில் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பது உலகெங்கும் வாழும் தமிழர்களிடையே பெரும் அதிர்வல... மேலும் பார்க்க

மாநிலக் கல்விக் கொள்கை மறைந்து கிடப்பது ஏன் ?

முதல் முறையாக இந்தியாவில் ஒரு கூட்டாட்சி அமைப்பை உருவாக்கியது 1935 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் கால - அரசுச் சட்டம் (Government of India Act 1935). இந்தச் சட்டத்தின்படி, முக்கியமான ‘பொது நலனான’ “கல்வி... மேலும் பார்க்க