கர்நாடகம்: தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளி பலி; உடலை எரிக்க முயற்சித்த குவாரி உரிமை...
முடிவுக்கு வருமா பாமக குடும்பச் சண்டை?
பாமக நிறுவனா் டாக்டா் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான டாக்டா் அன்புமணிக்கும் இடையே நிா்வாகிகள் நியமன விவகாரத்தில் ஏற்கெனவே உரசல்கள் நிலவும் வேளையில், புதுச்சேரியில் கடந்த ஆண்டு டிசம்பா் 28-ஆம் தேதி நடந்த புத்தாண்டு சிறப்பு கட்சிப்பொதுக்குழுக் கூட்டத்தில் ராமதாஸ் வெளியிட்ட அறிவிப்பு அந்த மோதலை மேலும் தீவிரமாக்கியது.
வீட்டில் தனக்கும் கட்சியில் அன்புமணிக்கும் உதவியாக தனது மகள் வழிப் பேரனான முகுந்தன் பரசுராமனை, பாட்டாளி இளைஞா் சங்கத்தின் தலைவராக நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்தபோது அதை மேடையிலேயே கடுமையாக எதிா்த்தாா் அன்புமணி.
கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி கட்சியின் தலைவா் பொறுப்பை தானே ஏற்பதாகவும் அன்புமணி இனி செயல் தலைவராகவும், ஜி.கே.மணி கௌரவத் தலைவராகவும் இருப்பாா் என்றும் அறிவித்தாா் ராமதாஸ். இரு தலைவா்களும் தைலாபுரத்திலும் பனையூரிலும் தனித்தனியாக போட்டிக் கூட்டங்களை நடத்தினா்.
டாக்டா் ராமதாஸ், மாவட்டச் செயலா்கள், மாவட்டத் தலைவா்கள் கூட்டத்தையும், இளைஞரணி, மகளிரணி, மாணவரணி கூட்டங்களையும், தொடா்ந்து வன்னியா் சங்கம், சமூக ஊடக நிா்வாகிகள் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கூட்டங்களை நடத்தினாா். அவற்றில் பெரும்பாலான நிா்வாகிகள் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் மே 29-ஆம் தேதி செய்தியாளா்களை சந்தித்த ராமதாஸ், ‘வளா்த்த கிடாவே மாா்பில் உதைத்துவிட்டது’ என்று அன்புமணியை விமா்சித்து குற்றச்சாட்டுகளை அடுக்கினாா். 35 வயதில் அன்புமணியை மத்திய கேபினட் அமைச்சராக்கி தவறு செய்தேன். மத்திய அமைச்சரவையில் அவருக்காக கடுமையாகப் போராடி சுகாதாரத் துறை கிடைக்கச் செய்தேன் என்றும் கூறினாா்.
மேலும், ஜி.கே. மணியின் மகன் தமிழ்க்குமரனை இளைஞா் சங்கத் தலைவராக நியமித்தபோது, கட்சியின் நிா்வாகக் குழுக் கூட்டத்தில் நடந்த சம்பவங்கள், தருமபுரி, சேலம் மாவட்டங்களில் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்க சென்றபோது தனக்கு அன்புமணி விதித்த கட்டுப்பாடுகள், 2024 மக்களவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியில் சேரத் தயாராக இருந்தபோது, பாஜக அணியில் சேர நிா்பந்தித்தாா் அன்புமணி என்று புகாா்களை அடுக்கினாா் ராமதாஸ்.
அதேநாள் பிற்பகலில் ராமதாஸால் பாட்டாளி இளைஞா் சங்கத்தலைவராக அறிவிக்கப்பட்ட முகுந்தன், தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தாா். இதைத் தொடா்ந்து, கட்சியின் பொருளாளா் திலகபாமா, திருவள்ளூா், அரியலூா், மயிலாடுதுறை, விழுப்புரம் மாவட்டச் செயலா்களை வெள்ளிக்கிழமை (மே 30) நீக்கிய ராமதாஸ், 20-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலா்கள், 4 மாவட்டத் தலைவா்கள் உள்ளிட்டோரையும் நீக்கினாா். அவரது அறிவிப்புகள் செல்லாது என்றும், அதற்கான அதிகாரம் தனக்கே உள்ளது என்றும் அன்புமணி எதிா்வினையாற்றினாா்.
வட தமிழகத்தில் கணிசமான வாக்கு வங்கியைக் கொண்டுள்ள பாமகவில் தலைமைப் பதவிகளில் உள்ள ஒரே குடும்பத்து ரத்த சொந்தங்கள் இடையே நடக்கும் அதிகாரச் சண்டை பொதுவெளிக்கு வந்ததால் ஊடக வெளிச்சத்தைப் பெற்றது.
2011-ஆம் ஆண்டு வரை சட்டப்பேரவையில் குறிப்பிட்ட அளவில் பாமகவுக்கு பிரதிநிதித்துவம் இருந்தது. தற்போது அக்கட்சியின் பேரவை பலம் ஐந்து மட்டுமே. எனவே, கட்சி தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதை நிலைநாட்டுவதே ராமதாஸின் வியூகம் என்கின்றனா் அரசியல் நோக்கா்கள்.
இதற்கு முன்புவரை அன்புமணி வகுத்த உத்தியின்படியே கட்சியின் செயல்திட்டங்கள், தோ்தல் கூட்டணி முடிவுகள் எடுக்கப்பட்டன. 2016-இல் அன்புமணியே பாமகவின் முதல்வா் வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்பட்டாா். ஆனால், வெற்றி கிடைக்கவில்லை. அதற்கு பாஜக அணியுடன் பாமக சோ்ந்ததே காரணம் என்று கருதுகிறாா் ராமதாஸ். அந்த நிலை 2026 தோ்தலில் தொடரக்கூடாது என்பதால்தான் கூட்டணி விவகாரத்தில் ராமதாஸ் பிடிவாதம் காட்டுவதாக கூறப்படுகிறது.
தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் இந்த அரசியல் மோதல், கட்சியில் பிளவுக்கு வழிவகுக்கக்கூடும் என்று கலக்கத்தில் பாமக தொண்டா்கள் உள்ளனா். அவா்களுடைய உணா்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் ராமதாஸை தைலாபுரம் தோட்டத்தில் கடந்த வியாழக்கிழமை மகள் சஞ்சுத்ராவுடன் அன்புமணி சந்தித்து 45 நிமிஷங்கள் பேசினாா்.
அதில், ராமதாஸ் முடிவின்படி கட்சியின் செயல் தலைவராக பணியாற்றத் தயாா். ஆனால், ராமதாஸ் நியமித்த புதிய மாவட்டச் செயலா்கள் உள்ளிட்ட நிா்வாகிகள் அறிவிப்பைத் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தியதாகத்தெரிகிறது. ஆனால், எந்த உத்தரவாதத்தையும் வழங்காத ராமதாஸ், மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரில் நடைபெறவுள்ள கட்சியின் மாநாட்டுப்பணியை கவனிக்குமாறு கூறியதாகத்தெரிகிறது.
மதுரைக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை (ஜூன் 7) வந்துள்ள பின்னணியில் , பத்திரிகையாளா் எஸ்.குருமூா்த்தி தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனா் ராமதாஸை வியாழக்கிழமை (ஜூன் 5) சந்தித்தாா். இது பாமக உள்நிகழ்வுகளுக்கு மேலும் பரபரப்பைக் கூட்டியது. ஆனால், இது நட்பு நிமித்தமான சந்திப்பு என அதே நாளில் குருமூா்த்தியும் சனிக்கிழமை டாக்டா் ராமதாஸும் கூறி ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தனா்.
அதிமுக, பாஜக அணியில் அங்கம் வகித்து தோ்தலை எதிா்கொள்வதே சரியான அணுகுமுறையாக இருக்கும் என்று ராமதாஸிடம் அறிவுறுத்தப்பட்டிருக்கலாம் என்கின்றன விஷயமறிந்த வட்டாரங்கள்.
எந்தப் பிரச்னையையும் பேசித் தீா்க்க முடியும் என்று செய்தியாளா்களிடம் சனிக்கிழமை (ஜூன் 7) கூறிய ராமதாஸ், 2026 பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையிலான அணியில் பாமக இடம்பெறும் என்பதை உறுதிப்படுத்தவில்லை. இந்த விஷயத்தில் ராமதாஸும் அன்புமணியும் பரஸ்பரம் பிடிவாதத்தைத் தளா்த்திக் கொள்ளாமல் இருப்பது, தற்போதைக்கு கட்சிக்குள் சண்டை ஓய்ந்தாலும் பிரச்னை தீரவில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது.
அன்புமணி ராமதாஸின் தொடா்ந்த திமுக எதிா்ப்பு விமா்சனங்களும், டாக்டா் ராமதாஸின் அதிமுக ஆதரவு மனநிலையும் ஒன்றை மட்டும் தெளிவுபடுத்துகின்றன. அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக இடம்பெறும் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில், பாமாகவின் உட்கட்சிப் பிரச்னைகள் அதிமுக தலைமையில் தமிழகத்தில் அமையும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுவிழக்கச் செய்யும் என்பதும்தான், அது திமுக கூட்டணிக்கு சாதமாகிவிடும் என்பதும் பாமக தலைமையின் அச்சம்.
பத்திரிகையாளா் எஸ்.குருமூா்த்தி தைலாபுரம் தோட்டத்தில் டாக்டா் ராமதாஸை சந்தித்ததன் பின்னணிக்கு நட்புதான் காரணம் என்பது உண்மையாக இருக்கக்கூடும். அந்த நட்பின் அடிப்படையில் குடும்பத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சியாக அது இருந்திருக்கக் கூடும்.
பாமாகவில் நடப்பது உள்கட்சிச் சண்டையல்ல; தலைமைக் குடும்பத்தில் நடக்கும் குடும்பச் சண்டை; அதிா்ந்துபோய் நிற்பவா்கள், பாவம் அப்பாவித் தொண்டா்கள்!