அரசு அலுவலகங்களில் 29 டன் குப்பை சேகரிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட தூய்மை இயக்கத் திட்டத்தின் மூலம் 29 ஆயிரம் கிலோ குப்பைகள் சேகரிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘தூய்மை இயக்கம்’ திட்டம் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியதாவது:
தமிழ்நாடு முழுவதும் நிலையான கழிவு மேலாண்மை செயல்பாடுகளை மேற்கொள்ள ‘தூய்மை இயக்கம்’ என்ற திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்களில் நடைபெற்ற தூய்மை இயக்கத் திட்டத்தில், 29 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டன.
‘தூய்மை இயக்கம்‘ செயல்பாடு என்பது ஒரே முறையோடு முடிப்பதல்ல. தொடா் செயல்பாடுகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். நாம் பணிபுரியும் அலுவலகம் தூய்மையானதாக இருந்தால் மட்டுமே பணிபுரிவதற்கான சூழல் நன்றாக அமையும். அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்ட தேவையற்ற பொருள்களை உடனடியாக அகற்ற வேண்டும்.
அலுவலகத்திலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகளின் தன்மை, அதன் மதிப்பு ஆகியவற்றை உள்ளூா் சந்தை நிலவரப்படி உரிய தொழில்நுட்ப அலுவலா், நிா்வாக அலுவலா்களின் மூலம் தீா்மானிக்க வேண்டும் என்றாா் அவா்.
மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பெ.திலகவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.