திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலில் 275 ஆண்டுக்குப் பின் இன்று மஹா கும்பாபிஷேகம்!
பிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசாமி திருக்கோயில் திருவிதாங்கூர் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. ஸ்ரீபத்மநாபசுவாமி கோயில் மூலவர் அனந்த சயனத்தில் 18 அடி நீளத்தில் காட்சி அருளுகிறார். 12008 சாளக்கிராம் கொண்டு 41 வகையான மூலிகைகள் அடங்கிய கடுகு சர்க்கரை யோகம் மூலம் மூலவர் திருமேனி அமைக்கப்பட்டுள்ளது.
1750-ம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் மார்த்தாண்ட வர்மா ஸ்ரீபத்மநாப சுவாமி கோயிலை புதுப்பித்து மகா கும்பாபிஷேகம் நடத்தினார். அதன் பிறகு 275 ஆண்டுகளுக்குப்பின் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

கோயிலில் விஸ்வக்ஸேனா பிரதிஸ்டையும், திருவம்பாடி ஸ்ரீகிருஷ்ணசுவாமி சன்னதியில் அஷ்டபந்தனமும் நடக்கிறது.
கோயில் முக்கிய தந்திரி பிரபஸ்ரீ கோவிந்தன் நம்பூதிரிபாட் தலைமையில், தந்திரி பிரபஸ்ரீ எஸ்.ஆர்.தரணநெல்லூர் பிரதீப் நம்பூதிரிபாட், பிரபஸ்ரீ தரணநெல்லூர் என்.ஆர்.சதீசன் நம்பூதிரிப்பாட், தரணநெல்லூர் சஜி நம்பூதிரிப்பாட் ஆகியோர் முக்கிய பூஜைகளை மேற்கொள்கிறார்கள். காலை 7.40 மணி முதல் 8.40 மணிக்குள் பிரதிஸ்டைகள், அஷ்டபந்தனம் மற்றும் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

கோயில் மூலஸ்தானத்தின் மேல் உள்ள 3 தங்க கும்பங்கள், ஒற்றைக்கல் மண்டபத்தில் உள்ள ஒரு தங்க கும்பம் ஆகியவற்றுக்கு அர்ச்சகர்கள் புனித நீர்கொண்டு அபிஷேகம் செய்கின்றனர்.
கும்பாபிஷேக விழாவில் கேரள மாநில கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர், மற்றும் கோயில் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர். மேலும், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களும் கும்பாபிஷேக விழாவை காண திரண்டுள்ளனர்.