ஓரிரு வாரங்களில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்: மா. சுப்பிரமணியன்
சென்னை: தமிழகம் முழுவதும் இன்னும் ஓரிரு வாரங்களில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு இலவசமாக உடல் பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்கப்படும் என்றும், இதில், மக்கள் முழுமையாக உடற்பரிசோதனை செய்யலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ், புதிய மருத்துவக் கட்டமைப்பு உருவாகி வருகிறது. அதில் சென்னைக்கு சிறப்பான இடம் இருக்கும். வெளிநாட்டிலிருந்து 25 சதவீதம் பேர் தமிழகத்தில் சிகிச்சைக்காக வருகிறார்கள். அனைத்துத் துறைகளிலும் தமிழகம் நாட்டிலேயே முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
முன்னதாக, தமிழகம் முழுவதும் உயா் மருத்துவ பரிசோதனை முகாம்கள் ரூ.13.58 கோடியில் நடத்தப்படும் என்று சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் அறிவித்திருந்தார்.
அதன்படி, பொது சுகாதாரத் துறை சாா்பில் ஆண்டுதோறும் 1,256 உயா் மருத்துவ சேவை முகாம்கள் நடத்தப்பட உள்ளன. வாரந்தோறும் சனிக்கிழமை அல்லது தகுந்த நாள்களில் அவற்றை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊரகப் பகுதிகள், குடிசைப் பகுதிகள், பழங்குடி மற்றும் எளிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து முகாம் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
உடல் பரிசோதனையில், சா்க்கரை அளவு, ரத்த அழுத்தம், எக்ஸ் ரே, இசிஜி, எக்கோ உள்பட முழுமையான உடல் பரிசோதனைகளும், காசநோய், தொழுநோய், புற்றுநோய் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். இதைத் தவிர 15 உயா் சிறப்பு மருத்துவத் துறை ஆலோசனைகளும் வழங்கப்படும்.
ஒரு முகாமுக்கு ரூ. 75,000 வீதம் 1,256 முகாம்களுக்கு ஆண்டுதோறும் ரூ.13.58 கோடி செலவு ஏற்படும். அதில் ரூ.9.42 கோடி தேசிய சுகாதார திட்டம் மற்றும் முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்ட நிதியின் கீழ் பெறப்படும்.
மீதமுள்ள ரூ.4.15 கோடி மட்டும் பரிசோதனைக்கான உபகரணங்கள் மற்றும் மருந்து பொருள்கள் வாங்க மாநில நிதியிலிருந்து வழங்கப்படும். இந்த நிலையில், அதற்கான நிதி ஒதுக்கீட்டு ஒப்புதல் உரிய விதிகளின் கீழ் அண்மையில் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.