உக்ரைனுக்கு செக்மேட்! ரஷியாவின் பலே திட்டம் என்ன?
உக்ரைனின் பெரும் பகுதிகளை இந்தாண்டு இறுதிக்குள் கைப்பற்ற ரஷியா திட்டமிட்டுள்ளது.
ரஷியா - உக்ரைன் போருக்கான மூல காரணம், நேட்டோவில் உக்ரைன் இணைய முயற்சித்ததுதான். ஆனால், தற்போது போருக்கான காரணம் வேறொன்றாக மாறியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் பெரும்பகுதியை ஆக்கிரமிக்கவே ரஷியா தொடர்ந்து போரிட்டு வருவதாக உக்ரைன் தெரிவிக்கிறது.
உக்ரைனை கடல் அல்லாத நாடாக ஆக்கும் முயற்சியாக, டினிப்ரோ நதிக்கு கிழக்கே உள்ள உக்ரைனின் அனைத்து பகுதிகளையும் ஆக்கிரமிக்க ரஷியா முடிவு செய்துள்ளது. இதன் மூலம், கருங்கடலிலிருந்து உக்ரைன் துண்டிக்கப்பட்டு, வெறும் நிலப்பரப்பை மட்டுமே கொண்ட நாடாக மாறும்.
ஆனால், டினிப்ரோதான் உக்ரைனின் பொருளாதாரத்தில் முக்கிய பங்களித்து வருகிறது. உக்ரைனின் மொத்த பரப்பளவானது, தோராயமாக 6.03 லட்சம் சதுர கிலோமீட்டர்; இதில் 3.36 லட்சம் சதுர கிலோமீட்டரைக் கைப்பற்ற ரஷியா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதுகுறித்து, உக்ரைன் அதிபர் அலுவலகம் கூறுகையில், வருகிற செப்டம்பர் முதல் தேதிக்குள் உக்ரைனின் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் மாநிலங்களை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவர ரஷியா திட்டமிட்டுள்ளது.
மேலும், இந்தாண்டு இறுதிக்குள்ளாக வடக்கு உக்ரைன் வரை ஆக்கிரமித்து, தனது எல்லையை நிறுவ ரஷியா முயற்சிக்கிறது என்று தெரிவித்தது.
அதுமட்டுமின்றி ஒடெசா, மைக்கோலைவ் பகுதிகளைக் கைப்பற்றிவிட்டால், கடலிலிருந்து உக்ரைன் துண்டிக்கப்பட்டு, கடல் போக்குவரத்துக்கு ரஷியாவைதான் உக்ரைன் அணுக வேண்டியிருக்கும்.
உக்ரைனை முதலில் ராணுவம் மூலமாகவும், தொடர்ந்து பொருளாதார ரீதியாகவும் தாக்குதல் நடத்த ரஷியா முயற்சிப்பதாகத் தெரிகிறது.
இதையும் படிக்க:சொல்லப் போனால்... திட்டமிடப்படாத நெரிசல் கொலைகள்!