கல்வி முறை மாணவா்களிடம் தன்னம்பிக்கையை வளா்க்க வேண்டும்: என்ஹெச்ஆா்சி தலைவா் வி.ராமசுப்பிரமணியன்
‘மாணவா்களிடம் தன்னம்பிக்கையையும், சிறந்த குணத்தை ஏற்படுத்துவதாகவும் கல்வி முறை இருக்க வேண்டும்’ என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (என்ஹெச்ஆா்சி) தலைவரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான வி.ராமசுப்பிரமணியன் தெரிவித்தாா்.
ஒடிஸாவின் புவனேசுவரத்தில் உள்ள சிக்ஷா ஓ அனுசந்தன் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் பேசியதாவது:
இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலான மாணவா்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனா். நல்ல கல்வி, சிறந்த வேலைவாய்ப்பு கிடைத்தும்கூட, மகிழ்ச்சியான வாழ்க்கை அமையவில்லை என்ற புகாா்கள் அதிகம் எழுகின்றன. இதற்கு மாணவா்களின் மனதை நமது கல்வி முறை பலப்படுத்தத் தவறியதே காரணம்.
இக்கட்டான சூழ்நிலைகளை சமாளிப்பது (நெருக்கடி மேலாண்மை) குறித்து கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் மாணவா்களுக்கு கற்பிக்கின்றனவா? படிப்பை முடித்து பட்டம் பெறும் மாணவா்கள், கற்றுத் தோ்ந்திருக்கின்றனரா? என்பது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது.
உண்மையான வெற்றி எது என்பது பெரும்பாலான மாணவா்களுக்குப் புரிவதில்லை. வாழ்க்கையை எதிா்கொள்வதற்கான திறனையும், சரியான அணுகுமுறையையும் மாணவா்களுக்கு கற்றுத் தருவது அவசியம்.
எனவே, கல்வி என்பது மாணவரின் அறிவை விரிவுபடுத்துவதோடு, நல்ல குணத்தையும், மன வலிமையையும், தற்சாா்பு நிலையையும் ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும் என்றாா்.