செய்திகள் :

சொல்லப் போனால்... திட்டமிடப்படாத நெரிசல் கொலைகள்!

post image

காலங்காலமாக நெரிசலில் சிக்கி உயிர்கள் இழக்கப்பட்டுக் கொண்டிருந்த போதிலும் மீண்டுமொரு முறை பெங்களூரில் ஆர்சிபி கிரிக்கெட் அணியின் ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்திருப்பது மக்கள் மனதை அதிர வைத்திருக்கிறது.

11 முட்டாள்கள் விளையாட 11,000 முட்டாள்கள் வேடிக்கை பார்க்கிற விளையாட்டு கிரிக்கெட்! என்று ஒருகாலத்தில் குறிப்பிட்டிருக்கிறார் பேரறிஞரான பெர்னார்ட் ஷா. கிரிக்கெட் மீது அப்போது அவருக்கு என்ன எரிச்சலோ தெரியவில்லை. ஆனால், பெங்களூரில் நடந்திருப்பதைப் பார்க்க சாதாரண மக்களுக்கு வருவது பெருங் கோபம்தான்.

நாடு முழுவதும் பல்வேறு நகர்களில் இரண்டரை மாதங்களாக நடந்த 74 போட்டிகளின் உச்சமாக அகமதாபாத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்த இறுதிப் போட்டியில் ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- ஆர்சிபி அணி கோப்பையைக் கைப்பற்றியது.

கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூரில் இரவு முழுவதும், தொடர்ந்து மறுநாள்  பகலிலும் கொண்டாட்டம். மாலையில் விதான் சௌதா வழி வெற்றி அணியின் சாலை உலா, தொடர்ந்து சின்னசாமி அரங்கத்தில் பாராட்டு விழா என உடனுக்குடன் முடிவு செய்திருக்கின்றனர்.

வேலை நாள் வேறு. ஏற்கெனவே இரவு முழுக்கக் கொண்டாட்டம். சமாளிக்க இயலாது, வேண்டாம் என காவல்துறை மறுத்திருக்கிறது. ஆனாலும் 'திட்டமிட்டிருக்கின்றனர்'. மாநகர வீதிகளிலெல்லாம் மக்கள் திரளும் வேகத்தைப் பார்த்துவிட்டு, 'ரோட் ஷோ கேன்சல், ஸ்டேடியத்துக்கு வாங்க. சின்னசாமி அரங்கத்தில் பாராட்டு விழா மட்டும்தான்' என அறிவித்திருக்கின்றனர். இவையெல்லாம் மக்களைச் சென்றடையக்கூட இல்லை. சாலையோரங்களில் நின்று உலாவைப் பார்த்துவிட்டுச் செல்ல நினைத்தவர்கள்கூட பெருங்கூட்டமாக சின்னசாமி அரங்கத்தை நோக்கிச் சென்றிருக்கின்றனர்.

இந்த அரங்கத்தில் 34,600 பேர் மட்டுமே அமர முடியும். ஆனால், திரண்டுவந்ததாக அரசுத் தரப்பு தகவலே இரண்டரை லட்சம் பேர். இந்த அரங்கத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடக்கிறபோது காவல்துறையினர் 800 பேர் நிறுத்தப்படுவார்களாம். இப்போது 1600 பேர் நிறுத்தப்பட்டிருந்தனர்.

அரங்கத்துக்குள் கூட்டம் நிரம்பிவழிய, கதவுகள் எல்லாம் சாத்தப்பட்டுவிட, தாண்டி உள்ளே செல்ல ரசிகர்கள் முயன்றிருக்கிறார்கள். கெடுவினையாக அரங்கத்துக்கு வெளியே, ஆறாவது வாசல் உள்பட பல இடங்களில் பெரும் நெரிசல். மூச்சுத் திணறியும் மிதிபட்டும் உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காமல் 11 உயிர்கள் பலிகொள்ளப்பட்டுவிட்டன.

பதினோரு குடும்பங்களின் வாழ்வும் கனவுகளும் எதிர்காலமும் நம்பிக்கைகளும் ஒரேயடியாகத் துடைத்தெறியப்பட்டுவிட்டன.

காமாட்சி தேவி (27) - மென்பொருள் நிறுவன ஊழியர். தமிழ்நாட்டில் உடுமலைப்பேட்டையிலுள்ள ஒரு பள்ளியின் தாளாளருடைய ஒரே மகள் - வாரிசு. அடுத்த ஆண்டு திருமணம் நடந்திருக்க வேண்டும்.

பூர்ண சந்திரா (26) - தனியார் நிறுவனத்தில் கட்டடப் பொறியாளர். மைசூரிலிருந்து இதற்காகவே வந்திருக்கிறார்.

திவ்யான்ஷி (14) - விராட் கோலி ரசிகை, வெற்றிக் கொண்டாட்டத்துக்குச் செல்லலாம் எனத் தாயுடன் சென்றவர். மூச்சுத் திணறல், தலைக்காயம். வாசலிலேயே மரணம்.

சின்மயி ஷெட்டி (19) - முதலாண்டு பொறியியல் மாணவி, யக்க்ஷகானம், பரதநாட்டியம், கொஞ்சம் கிரிக்கெட். நண்பர்களுடன் விதான் சௌதா சென்றவர்  வற்புறுத்தியதால் அரங்கத்தின் மரண வாசலுக்கு.

சிவலிங்க சுவாமி (15) – 10 ஆம் வகுப்பு முடித்திருக்கிறான், பியூசி சேருவதற்காக மாற்றுச் சான்றிதழ் வாங்கச் செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு இறப்புச் சான்றிதழ் வாங்கவைத்துவிட்டான்.

பூமிக் லட்சுமண் (21) - இறுதியாண்டு பொறியியல் மாணவர், 25 ஆண்டுகளுக்கு முன் பெங்களூருக்கு வந்த இவருடைய தந்தை, மகன் பெயரிலேயே எந்திர உதிரிபாக நிறுவனம் நடத்துகிறார், இருவருமே கிரிக்கெட் ரசிகர்கள்.

சஹானா (25) - பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவருக்கு அடுத்த ஆண்டு திருமணத்துக்குத் திட்டமிட்டிருந்தனர். நண்பர்களுடன் விழாவுக்குச் சென்றிருக்கிறார். அனைவருக்குமே காயம். ஆனால் இவர் மட்டும் பலி.

மனோஜ் குமார் (18) - இரண்டாமாண்டு வணிகவியல் மாணவர். தந்தை பானிபூரி விற்பவர். தீவிரமான கிரிக்கெட் ரசிகர். குடும்பத்தின் எதிர்காலம் முடிவுக்கு வந்துவிட்டது.

பிரஜ்வல் (20) - தனியார் நிறுவனத்தின் நேர்காணலுக்காக பெங்களூர் செல்வதாகத் தெரிவித்துவிட்டு வந்தவர்.

ஏதோ பெயர்களில் இன்னும் இருவர். பெயர் என்ன முக்கியம்? இனிமேல் எல்லாமே வெறும் எண்கள்தானே? இறந்தவர்கள் பெரும்பாலும் முப்பது வயதுக்கும் குறைந்தவர்களே.

இறப்புக்குப் பின் வழக்கம்போல, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு என்ற பெயரில் மாநில அரசு தலா  ரூ. 10 லட்சமும் (தற்போது ரூ. 25 லட்சமாக உயர்த்தியிருக்கிறார்கள்) கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் தலா ரூ. 5 லட்சமும் அறிவித்திருக்கிறது. அவ்வளவுதான் இவர்களுடைய உயிரின் விலை! இழப்புகள் நேரிடும்போதெல்லாம் ஈடு என்பதாக அறிவிக்கப்படும் இந்தத் தொகையென்ன, ஆறுதலா, உதவியா, பரிசா அல்லது குற்ற உணர்வை மறை(ற)க்கவா?

நெரிசலுக்கான காரணம் பற்றி அரசுக்குத்  தலைமை நீதிபதி வி. காமேசுவர ராவ் தலைமையிலான கர்நாடக உயர் நீதிமன்ற அமர்வு 9 கேள்விகளைக் கேட்டிருக்கிறது.

வெற்றி விழா கொண்டாட முடிவெடுத்தது யார், எவ்வாறு? போக்குவரத்தை முறைப்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? மக்களை / கூட்டத்தை ஒழுங்குபடுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? எவ்வளவு பேர் வருவார்கள் என முன்னதாக ஏதேனும் மதிப்பிடப்பட்டதா? வளாகத்தில் மருத்துவ / பிற வசதிகள் செய்யப்பட்டிருந்தனவா? இல்லை என்றால் ஏன்? காயமுற்றவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல எவ்வளவு நேரமானது? 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் திரளக் கூடிய விழாவுக்கென சிறப்பு செயல் திட்டம் ஏதேனும் வகுக்கப்பட்டிருந்ததா? அனுமதி பெறப்பட்டதா?

கேட்டிருப்பது எல்லாமே சூப்பர் கேள்விகள்தான். ஆனால், இந்த நேர்வுக்கு முன்னரே, பதினோரு பிணங்கள் விழுவதற்கு முன்னரே, கேட்டிருக்க வேண்டியவை!

கூட்டங்கள் திரட்டப்படுவதும் உயிர்கள் கொல்லப்படுவதும் சர்வ சாதாரணமாகிவிட்டதெனலாம். இப்போது மாநகர காவல்துறை ஆணையர் பி. தயானந்தா உள்பட காவல்துறை உயர் அலுவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த உயிரிழப்புகளுக்கு யார்தான் பொறுப்பு? யார் குற்றவாளி? எல்லாம் முடிந்ததும் எல்லாரும் அவரவர் வீடுகளுக்குச் சென்றுவிடுவார்கள், இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் சில மாதங்களில் பணிக்குத் திரும்பிவிடுவார்கள். உறவை இழந்த குடும்பம் என்ன செய்யும், யாரை நம்பி வாழும்?

விபத்துக்குக் கூட்டம் எதிர்பாராத அளவைவிட அதிகமாக வந்ததுதான் காரணம் என்று முதல்வர் சித்தராமையா குறிப்பிட்டிருக்கிறார்; எவ்வளவு பெரிய அபத்தம்? ஐபிஎல் தொடங்கிய 18 ஆண்டுகளில் முதல்முறையாகபெங்களூரின் பெயரிலுள்ள அணி வெற்றி பெற்றிருக்கிறது. இரவிலிருந்து மக்கள் கொண்டாட்ட மனநிலையில் இருந்திருக்கிறார்கள். இதைக்கூட கணிக்க முடியாத அளவிலா இருந்திருக்கும் இவர்கள் அரசும் உளவுத் துறையும்?

சாலை உலா, பாராட்டு விழா அறிவிப்பு. அப்புறம் இது இல்லை, அது மட்டும்தான் என. எல்லாரும் வரலாம் என, அழைப்பு இருந்தால்தான் அனுமதி என. எவ்வளவு குழப்பங்கள்? அரங்கம் நிரம்பியதும் கதவைச் சாத்திவிட்டிருக்கிறார்கள். உள்ளே நுழைய முயன்ற ரசிகர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லையாம்.

இவ்வளவு அவசர அவசரமாக இந்த விழாவை நடத்த வேண்டிய அவசியம்தான் என்ன? திட்டமிட்டுப் பின்னர் ஏதோவொரு விடுமுறை நாளில் நடத்தியிருக்கலாமே? யாருடைய நலனுக்காக?

கட்டுக்கடங்காத கூட்டம் என்றெல்லாம் கூறிக்கொண்டும், குற்றம் சாட்டியும் தப்பித்துக் கொள்வதில் எவ்வித நியாயமோ தார்மிக அடிப்படையோ இல்லை.

இனியென்ன, வழக்குப் பதிவு செய்தாகிவிட்டது... சிலரைக் கைதும்  செய்தாகிவிட்டது. கொஞ்ச நாளில் அவர்கள் எல்லாரும் பிணையில் வெளியே வந்து அவரவர் வேலைகளைத் தொடருவார்கள். மாநிலத்துக்குத் தகுந்த வேகத்தில் அப்புறம் வழக்கு விசாரணை நடைபெறும்; எப்போது முடிவு பெறும், தீர்ப்பு வரும்... எவருக்கும் தெரியாது, தீர்ப்பு வரும்போது மக்கள் எல்லாவற்றையும் மறந்து போய்விட்டிருப்பார்கள் (நாட்டில் இதுவரை கூட்ட நெரிசல் பலிக்குக் காரணமான எத்தனை பேர் தண்டிக்கப்பட்டுச் சிறையில் இருக்கிறார்கள்?).

பிறகென்ன, இன்னோர் இடத்தில் கூட்டம், நெரிசல், பலி, அது இது எல்லாம் எப்போதும் போல தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.

பெங்களூர் துயரத்தில் சகிக்க முடியாத அக்கிரமம் என்று சொன்னால், வெளியே இத்தனை கிரிக்கெட் ரசிகர்கள் செத்துப் போய்க் கிடக்க, உள்ளே கிரிக்கெட் வீரர்களுடன் விழாக் கொண்டாடி – முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் என எல்லாருமாகப் புளங்காகிதம் அடைந்துகொண்டிருந்ததுதான்! (தெரியவே தெரியாது என்றிருக்கிறார்களாம்!).

கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால்கூட புரிந்துகொண்டுவிட முடியும். பெயரைத் தவிர வேறெந்த வகையிலும் பெங்களூருக்கோ, கர்நாடகத்துக்கோ இந்த அணியுடன் இப்போது எந்தத் தொடர்பும் இருக்கிறதா எனத் தெரியவில்லை.

ஆர்சிபி அணியின் பேட்டர்கள்: ரஜத் படிதார் (ம.பி.), விராட் கோலி (தில்லி), பில் சால்ட் (இங்கிலாந்து), ஸ்வஸ்திக் சிகாரா (உ.பி.), டிம் செய்ஃபெர்ட் (நியூசி.), மயங் அகர்வால் (கர்நாடகம்). ஆல்-ரவுண்டர்கள்: லியாம் லிவிங்ஸ்டன் (இங்கிலாந்து), க்ருணால் பாண்டியா (மும்பை), ஸ்வப்னில் சிங் (உத்தரகண்ட்), டிம் டேவிட் (ஆஸி.), ரொமாரியோ ஷெஃபர்ட் (மே.இ.), மனோஜ் பண்டகே (கர்நாடகம்). பந்துவீச்சாளர்கள்: முஜர்பானி (ஜிம்பாப்வே), ஹேசில்வுட் (ஆஸி.), ரஷிக் தார் (ஜம்மு), சுயாஷ் சர்மா (தில்லி), புவனேஷ்வர் குமார் (ஹைதராபாத்), நுவான் துஷாரா (இலங்கை), இங்கிடி (தெ.ஆ.), அபிநந்தன் சிங் (உ.பி.), மோஹித் ராதே (ஹரியாணா), யஷ் தயாள் (உ.பி).

இவர்களில் இரண்டே இரண்டு பேர் மட்டும்தான் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள். மனோஜ் பண்டகே – இவர் ஒரே ஒரு போட்டியில் விளையாடினார். மயங் அகர்வாலோ மாற்றுவீரராகத் தேர்வு செய்யப்பட்டுக் கடைசி 4 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். மற்ற அனைவருமே வெளிநாடுகள், வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான். மற்றபடி ஸ்நானப் பிராப்திகூட கிடையாது!

யாருக்குச் சொந்தம்? தொடக்கத்தில் ஆர்சிபி அணியின் உரிமையாளர் பெங்களூர்க்காரரான விஜய் மல்லையா. 2008-ல் 111 மில்லியன் டாலருக்கு (சுமார் ரூ. 952.2 கோடி!) வாங்கியிருக்கிறார். கடன்கள், சட்டப் பிரச்சினைகள் காரணமாக மல்லையா வெளிநாடு சென்றுவிட, 2016-ல் அணி கைவிட்டுப் போய்விட்டது. தற்போதைய உரிமையாளர்கள் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட். இந்தியாவில் மதுவடிப்புத் தொழில் சந்தையில் பெரும் பங்கு, உலகின் இரண்டாவது பெரிய மது நிறுவனம்; லண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட டியாஜியோ நிறுவனத்தின் துணை நிறுவனம் எனக் கூறப்படுகிறது.

மது வகைகளைப் போல, போதைப் பொருள்களைப் போல, திரைப்படங்களைப் போல, அரசாங்கங்களின் ஆசிர்வாதத்துடனும் மக்களின் ஆதரவுடனும் கிரிக்கெட்டும் திட்டமிட்டு வெகுமக்களுக்கான ஒரு போதைப் பொருளாக – ரசனையே வெறியாக மாற்றப்பட்டு விட்டிருக்கிறது – பன்னாட்டுப் பெரு வணிக நிறுவனங்களால். இவற்றின்வழி உலகம் முழுவதும் பல்லாயிரம் கோடிகள் புரள்கின்றன.

கூட்ட நெரிசலும் உயிர்ப் பலியும் இப்போதுதான் முதல்முறையாக நடைபெறகிறதா? இதுவரை நடந்தவற்றிலிருந்து நாமும் நம் அரசுகளும் என்ன பாடம்தான் கற்றுக்கொண்டிருக்கிறோம்?

2025 பிப். 15 - தில்லி ரயில் நிலையத்தில் நெரிசல் காரணமாக கும்பமேளா செல்லும் பயணிகள் 18 பலியாகினர்.

2025 ஜன. 29 – உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்ப மேளா நெரிசலில் உயிரிழந்தவர்கள் 40 பேர் என்று சொல்கிறார்கள். சம்பவத்தன்று கடைசி வரை நெரிசல் என்றுகூட சொல்லாமல் நெரிசல் போன்ற சூழலில் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். இன்னமும்கூட உயிரிழந்தோர் எண்ணிக்கை உறுதியாகக் கூறப்படவில்லை.

2025 ஜன. 8 – திருப்பதி கோவிலில் டோக்கன் வழங்குமிடத்தில் நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.

2024 டிச. 4 – ஹைதராபாத்தில் புஷ்பா – 2 திரைப்படம் வெளிவந்த நாளில் திரையரங்கில் நடிகர் அல்லு அர்ஜுன் பிரசன்னமானதால் நெரிசலில் சிக்கி ஒரு பெண் இறந்தார்.

2024 ஜூலை 2 – உத்தரப் பிரதேசத்தில் ஹாத்ரஸ் என்ற இடத்தில் பக்திச் சொற்பொழிவு கேட்கத் திரண்ட இடத்தில் நெரிசலில் சிக்கிக் கொஞ்சம் நஞ்சமல்ல, 121 பேர் இறந்தனர். இவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பெண்கள், குழந்தைகள்!

வரலாற்றின் பக்கங்களைப் பின்னோக்கிப் புரட்டினால், இவ்வாறாக நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறியும் மிதிபட்டும் இறந்தவர்களின் ஆவிகள் வந்துகொண்டேயிருக்கும்.

திருவொற்றியூர் கார்த்திகேயன் என்ற பெயரை யாருக்காவது இப்போது நினைவிருக்கிறதா?  2024 அக்டோபர் 6 ஆம் தேதி சென்னையில் விமானங்களின் சாகசத்தை வேடிக்கை பார்க்க மெரினா கடற்கரைக்கு வந்தபோது நெரிசல், தண்ணீர் இன்றி இறந்த ஐவரில் ஒருவர், மற்றவர்களில் யார் பெயராவது நினைவுண்டா? பறிகொடுத்த குடும்பங்களைத் தவிர? ஆக, அவ்வளவுதான் எல்லாம்.

இதுபோன்ற விபத்துகள்கூட எந்தக் கட்சி ஆளும் மாநிலங்களில் நடந்திருக்கிறது என்பதையெல்லாம் பார்த்துதான் தலைவர்களே எதிர்வினையாற்றுகிறார்கள். பெங்களூரில் 11 பேருக்காகத் துடிக்கிறவர்கள் பலரும் பிரயாக்ராஜில் எண்ணிக்கையே சரியாகத் தெரியாதபோதுகூட கவலைப்படவுமில்லை; கண்டுகொள்ளவுமில்லை.

அடிப்படையான வாழ்வாதாரப் பிரச்சினைகளில்கூட அரசியல்ரீதியாகத் திரளத் தயாராக இல்லாத இந்த மக்கள், இதுபோன்ற கேளிக்கைகளுக்கு மட்டும் எவ்வாறு யாரும் அழைக்காமேலேயே திரளுகின்றனர்?

இதெல்லாம் யார் வீட்டுத் திருவிழா? யாருக்கான திருவிழா? 'ஊர்ல கல்யாணம், மார்ல சந்தனம்' என்பது போல. யார் யாரோ பெரு நிறுவனங்களும் கிரிக்கெட் வீரர்களும் கோடிகளில் சம்பாதித்து அவரவர் வீடுகளுக்குக் கொண்டுசெல்ல, வெறும் ரசனை என்ற பெயரில் எவ்வளவு காலத்துக்குத்தான் இந்த மக்கள் இவ்வாறு நெரிசலில் செத்துக்கொண்டிருப்பார்கள்?

நம்முடைய உயிர் நம்மைத் தவிர, நம் குடும்பத்தைத் தவிர யாருக்குமே ஒரு பொருட்டல்ல. வீட்டுக்கு, குடும்பத்துக்கு, அப்பா, அம்மாவுக்கு, கணவன் - மனைவிக்கு, சகோதர, சகோதரிகளுக்கே மிகவும் முக்கியம். கொண்டாட்டம் நடத்துகிறவர்கள், கூட்டத்தைக் கூட்டுகிறவர்கள், இவற்றை எல்லாம் அனுமதிக்கிறவர்கள் ஒருவருக்குமே நம் உயிரைப் பற்றிய அக்கறை இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை; தேவையுமில்லை. எதிர்பார்க்கவும் முடியாது; கூடாது. இருக்கவே இருக்கிறது இழப்பு ஈடு.

பக்தர்களோ, ரசிகர்களோ, தொண்டர்களோ... யாராக இருந்தாலும் உணர்வுவயப்பட்டு சென்று இவ்வாறு நெரிசலில் சிக்கிக் கொள்வதும் உயிரைப் பலி கொடுப்பதும் இது முதல் அல்ல, இதுவே முடிவாக இருந்துவிடட்டும்!

இதையும் படிக்க | சொல்லப் போனால்... ஐஏஎஸ் கனவு என்றொரு மாயவலை!

முடிவுக்கு வருமா பாமக குடும்பச் சண்டை?

பாமக நிறுவனா் டாக்டா் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான டாக்டா் அன்புமணிக்கும் இடையே நிா்வாகிகள் நியமன விவகாரத்தில் ஏற்கெனவே உரசல்கள் நிலவும் வேளையில், புதுச்சேரியில் கடந்த ஆண்டு டிசம்ப... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... ஐஏஎஸ் கனவு என்றொரு மாயவலை!

கனவு காணுங்கள், கனவு காணுங்கள் என்ற தூண்டுதலில் குடிமைப் பணித் தேர்வுகளை எழுதச் சென்று வெற்றிகொள்ள முடியாதபோது, தன்னையே முடித்துக் கொள்வதும் எதிர்காலத்தைத் தொலைக்க நேர்வதும் புதிதாகச் சிந்திக்க வேண்டி... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... யார் அகதி? எது தர்ம சத்திரம்?

‘உலகம் முழுவதுமுள்ள அகதிகளை வரவேற்க இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல’ என்று இலங்கைத் தமிழர் தொடர்பான தீர்ப்பு ஒன்றில் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பது உலகெங்கும் வாழும் தமிழர்களிடையே பெரும் அதிர்வல... மேலும் பார்க்க

மாநிலக் கல்விக் கொள்கை மறைந்து கிடப்பது ஏன் ?

முதல் முறையாக இந்தியாவில் ஒரு கூட்டாட்சி அமைப்பை உருவாக்கியது 1935 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் கால - அரசுச் சட்டம் (Government of India Act 1935). இந்தச் சட்டத்தின்படி, முக்கியமான ‘பொது நலனான’ “கல்வி... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... டிரம்ப் சொல்வதெல்லாம் உண்மைதானா?

ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து நேரிட்ட பதற்றமான சூழலில் இந்தியா – பாகிஸ்தான் இடையே தானும் தன்னுடைய நிர்வாகமும்தான் மத்தியஸ்தம் செய்ததாக மீண்டும் மீண்டும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சொல்லிக் கொண்டி... மேலும் பார்க்க

பாமகவுக்கு கைகொடுக்குமா வன்னியா் மாநாடு?

சென்னையை அடுத்த மாமல்லபுரம் திருவிடந்தையில் நடந்த சித்திரை முழுநிலவு பெருவிழா வன்னியா் இளைஞா் மாநாடு பாட்டாளி மக்கள் கட்சிக்கு (பாமக) அரசியல் ரீதியாக கைகொடுக்குமா என்பது விவாதப் பொருளாகியுள்ளது. 12 ஆ... மேலும் பார்க்க