'பேரம் பேசத் தெரியலனு சொல்றாங்க; எப்போ என்ன பண்ணணும்னு எனக்கு தெரியும்..'-திருமாவளவன் ஓப்பன் டாக்
திருச்சியில் நேற்று (ஜூன் 14) விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ‘மதச்சார்பின்மை காப்போம்’ என்ற தலைப்பில் பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணியில் பேசிய திருமாவளவன், "திருச்சியில் பேரணி நடத்துவதற்கு முதலில் அனுமதி இல்லை என்று சொல்லிவிட்டார்கள். நாம் ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்தும் நமக்கு பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. அவ்வளவு நெருக்கடிகளையும் தாங்கிக்கொண்டு களத்தில் நிற்கும் இயக்கம்தான் விசிக.
எல்லோரும் தேர்தல் கணக்குகளை பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், நமக்கு அந்த கவலை இல்லை. விசிக திமுகவிடம் சிக்கிக் கொண்டு தவிக்கிறது என்று சொல்கிறார்கள். அட அற்பர்களே, அரசியல் அறியாமையில் உளறும் அரைவேற்காடுகளே, அரசியல் திசை வழியை தீர்மானிப்பவர்கள் விசிக தான்.
இந்திய அரசியலையும் கூர்மைப்படுத்துபவர்களும் விசிக தான். மதச்சார்பின்மைக்கு ஆதரவானவர்கள், எதிரானவர்கள் என்று கூர்மைப்படுத்துகிற அரசியலை விசிக மட்டும் தான் செய்து கொண்டிருக்கிறது.
இதன் வலிமையை தெரியாதவர்கள், திருமாவளவனுக்கு அரசியல் செய்ய தெரியவில்லை, பேரம் பேச தெரியவில்லை, துணை முதலமைச்சர் பதவி வேண்டும் என்று கேட்க மறுக்கிறார் என்றெல்லாம் சொல்கிறார்கள்.
நாங்கள் முதல்வர் பதவிக்கே ஆசைப்படவில்லை. எங்கள் தந்தை அம்பேத்கர், பிரதமர் பதவியை கைப்பற்றுங்கள் என்று வழிகாட்டியிருக்கிறார். அதுதான் அதிகாரமுள்ள பதவி.
இந்த மண்ணின் பூர்வக்குடிகள் ஆட்சி அதிகாரத்தில் வர வேண்டும். எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியும், எனக்கு தெரியும், விசிகவுக்கு தெரியும்.
யூடியூப்பில் யாரெல்லாமோ எனக்கு அறிவுரை வழங்குகிறார்கள். 35 ஆண்டுகளாக நாங்களும் அரசியல் செய்து கொண்டுதான் இருக்கிறோம்” என்று விசிக தலைவர் திருமாவளவன் பேசியிருக்கிறார்.