ரூ.1500 கோடி செலவில் வீட்டுவசதி திட்டத்தை அறிமுகம் செய்த கோத்ரெஜ் பிராபர்டீஸ்!
``முருகன் பெயரைக் கேட்டாலே திமுக-வினருக்கு பதற்றம் தொற்றிக் கொள்கிறது!” - சாடும் அண்ணாமலை
கோவை மாவட்டம் இருகூரில் இருந்து திருப்பூர் மாவட்டம் முத்தூர் வரை ஐ.டி.பி.எல். நிறுவனத்தின் குழாய் பதிக்கும் திட்டத்தை சாலையோரமாக நிறைவேற்ற வலியுறுத்தி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அவிநாசிபாளையத்தில் விவசாயிகள் 7-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கோவை, திருப்பூர் மாவட்டங்கள் வழியாக 75 கிலோ மீட்டர் தூரம் குழாய் கொண்டு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. 2002-இல் இந்த திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குழாய் பதிப்பதால் விவசாயிகளின் நில மதிப்பு பாதிக்கப்படும் என்பதை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரிடம் எடுத்துக் கூறியுள்ளோம். இதற்கு மாற்று வழி ஏற்பாடு செய்யவும் வலியுறுத்தி உள்ளோம்.

பாஜக சார்பில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறோம். கோவை, திருப்பூர் மாவட்ட ஆட்சியர்களுடன் விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்தும் வரை 15 நாட்கள் குழாய் அமைக்கும் திட்ட வேலைகளை நிறுத்தி வைக்க கோரிக்கை விடுத்துள்ளோம். விவசாய நிலத்தில் இந்த திட்டத்தை கொண்டு செல்ல மாட்டோம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறினார். இந்த திட்டத்தை மாற்று வழியில் கொண்டு செல்ல மத்திய அரசுக்கு மாநில அரசுதான் பரிந்துரை செய்ய வேண்டும். ஆனால், மத்திய அரசு பிரச்னை என்று தமிழக அரசு கை கழுவ பார்க்கிறது.
மாநில அரசுகள் தான் நிதியை மத்திய அரசுக்கு கொடுப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், 100 சதவீதம் நிதிப் பங்களிப்பை கொடுக்கும் மத்திய அரசின் திட்டத்தை ஏன் அவர் சொல்ல மறுக்கிறார்.
அரசியலில் ஏ டீம், பி டீம் என்பதெல்லாம் காலாவதியாகிவிட்டது. திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. முதல்வர் இதுவரை தனது ஆட்சி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளாரா?. தேர்தலின்போது 511 வாக்குறுதிகளைக் கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின். அதில், எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார் என அவரால் அறிக்கையை வெளியிட முடியுமா? வேலை செய்யாததை மறைக்கவே ஏ டிம், பி டீம் என திமுக-வினர் பரப்புகின்றனர். பாஜக தலைமையிலான கூட்டணி முழுமையடையாமல் உள்ளது. பொறுமையாக காத்திருக்கிறோம். மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கும் எந்த தொடர்பும் கிடையாது. முதல்வர் அவரது கற்பனைத் திறமையை வெளிக்காட்ட தேவையில்லாத பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

முருகன் பெயரைச் சொன்னால்..!
பாஜக-வும், தவெக-வும் கொள்கைரீதியாக மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன. கள் இறக்கும் போராட்டத்துக்கு பாஜக முழுமையாக ஆதரவு தருகிறது. ஆனால், சீமான் போராட்டம் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. அது சீமானின் ஸ்டைல். பாஜக-வால்தான் பாமக-வில் பிரச்னை ஏற்பட்டது என்பது கட்டுக்கதை. எந்தக் கட்சிகளையும் துண்டாடும் எண்ணம் பாஜக-வுக்கு இல்லை. கூட்டணி குறித்து திமுக பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை. திமுக மைனாரிட்டியாக இருக்கும்போது கூட காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கவில்லை. கூட்டணி குறித்து திமுக-வும், திராவிடர் கழகத் தலைவர் வீரமணியும் எங்களுக்கு பாடம் எடுக்கத் தேவையில்லை.
உயர் நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி முருகர் மாநாடு நடக்கிறது. முருகன் பெயரைச் சொன்னால் திமுக தலைவர்கள் ஏன் பதற்றமடைகிறார்கள் என்று தெரியவில்லை. அமைச்சர் ரகுபதி பேச்சு நீதிமன்ற அவமதிப்பாகவே நான் கருதுகிறேன்” என்றார்.