திருப்பூர்: நோயாளிக்குச் சிகிச்சை அளித்த தூய்மைப் பணியாளர்; வைரல் வீடியோ குறித்து அரசு சொல்வது என்ன?
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளத்தில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
கிராமப்புறங்களை உள்ளடக்கிய மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில், போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாத நிலை நீடித்து வருவதாகவும், இதன் காரணமாக அந்த மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள் மிகவும் சிரமம் அடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு காலில் காயத்துடன் சிகிச்சை பெறுவதற்காக மடத்துக்குளம் அரசு மருத்துவமனைக்குச் சென்ற ஒருவருக்கு அங்குத் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றும் பெண் ஒருவர் சிகிச்சை அளித்துள்ளார்.
அப்போது, காயம் பட்டவருடன் வந்த ஒருவர் அப்பெண்ணிடம் மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லையா எனக் கேட்டபோது, "மருத்துவர் இல்லை. நான் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றுகிறேன். காயங்களுக்கு நான்தான் கட்டுப்போடுவேன்" என்று தெரிவிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மருத்துவத் துறை இணை இயக்குநர் மீரா கூறுகையில், "சம்பவத்தன்று இரவு 11 மணி அளவில் நோயாளி ஒருவர் வந்ததாகவும், புண்ணுக்குப் போடப்பட்ட கட்டைப் பிரிக்குமாறு கூறியுள்ளார்.
இதனால், தூய்மைப் பணியாளர் கட்டை மட்டும் பிரித்துள்ளார். 24 மணி நேரமும் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏழு மருத்துவர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில் ஐந்து பேர் மட்டுமே தற்பொழுது பணியாற்றி வருகின்றனர். இரண்டு இடங்கள் காலியாக உள்ளன" என்று கூறியுள்ளார்.
எனினும் தூய்மைப் பணியாளரை வைத்து கட்டைப் பிரிக்க வைத்த சம்பவம் குறித்து அன்று பணியிலிருந்த மருத்துவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்றார்.