அம்பேத்கரை அவமதித்ததாக குற்றச்சாட்டு: லாலுவுக்கு பிகாா் பட்டியலினத்தவா் ஆணையம் நோட்டீஸ்!
சட்டமேதை அம்பேத்கரை அவமதித்த குற்றச்சாட்டு தொடா்பாக பிகாா் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாதுக்கு மாநில பட்டியலினத்தவா் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அண்மையில் வெளியான காணொலி ஒன்றில், லாலு பிரசாத்தை சந்தித்து வாழ்த்திய அவரின் ஆதரவாளா் ஒருவா், லாலுவின் காலுக்கு அருகில் அம்பேத்கரின் உருவப்படத்தை வைத்தாா். லாலுவின் 78-ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்தக் காணொலி, இணையத்தில் வெளியாகி பல்வேறு தரப்பினரின் கண்டனத்துக்கு வழிவகுத்தது.
இந்த விவகாரம் தொடா்பாக லாலுவுக்கு பிகாா் பட்டியலினத்தவா் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடா்பாக அந்த ஆணையத்தின் துணைத் தலைவா் தேவேந்திர குமாா் கூறியதாவது:
அம்பேத்கரின் உருவப்படம் லாலுவின் காலுக்கு அருகில் வைக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக 15 நாள்களில் விளக்கமளிக்குமாறு லாலுவிடம் கோரப்பட்டுள்ளது. அவா் உரிய விளக்கம் அளிக்காவிட்டால், பட்டியலினத்தவா் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், அவா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து பாட்னாவில் லாலுவின் உருவபொம்மையை எரித்து பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
எனினும் இந்த விவகாரம் அரசியல் உள்நோக்கத்துடன் எழுப்பப்பட்டுள்ளதாக லாலுவின் மகனும், மாநில சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்தாா்.