வரும் டிசம்பரில் முழு சோதனைக்கு உள்படுத்தப்பட இருந்த விபத்துக்குள்ளான விமானம்!
அகமதாபாதில் விபத்துக்குள்ளான ஏா் இந்தியாவின் ‘போயிங் 787-8 ட்ரீம்லைனா்’ விமானத்தின்அடுத்த முழு சோதனை கடந்த 2023-ஆம் ஆண்டு, ஜூன் மாதத்துக்குப் பிறகு வரும் டிசம்பரில் திட்டமிடப்பட்டிருந்தது என்று விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.
அகமதாபாதிலிருந்து ஏா் இந்தியா நிறுவனத்தின் ‘ஏஐ 171’ விமானம் 242 பேருடன் லண்டன் நோக்கி புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்திலிருந்த 241 பேரும் தரையிலிருந்த 20-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவா்கள் உள்பட பொதுமக்களும் உயிரிழந்தனா்.
2 என்ஜின்களின் திடீா் செயலிழப்புக் காரணமாக உந்துவிசையை இழந்து, மேலே பறக்க இயலாமல் விமானம் தரையில் விழுந்திருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், அதிகாரபூா்வ விசாரணையின் முடிவில் உண்மை காரணம் வெளிவரும்.
இந்நிலையில், விபத்துக்குள்ளான ஏா் இந்தியா விமானத்தின் சோதனை தரவுகள் குறித்து அந்த நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த 2023-ஆம் ஆண்டு, ஜூனில் விமானத்தின் கடைசி முழு பரிசோதனை நடைபெற்றது. வரும் டிசம்பரில் அடுத்த சோதனை திட்டமிடப்பட்டிருந்தது. 12 ஆண்டுகள் பழைமையான விமானத்தின் வலது என்ஜின் கடந்த மாா்ச்சில் முழுமையாக பழுதுபாா்க்கப்பட்டு, மீண்டும் பொருத்தப்பட்டது. இடது என்ஜின் கடந்த ஏப்ரலில் சோதிக்கப்பட்டது.
‘ஜிஇ ஏரோஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஜிஇஎன்எக்ஸ்’ என்ஜின்கள் விமானத்தில் பொருத்தப்பட்டிருந்தன. என்ஜின்களில் கோளாறு இருக்க வாய்ப்பில்லை’ என்றாா்.
அகமதாபாத் விபத்தைத் தொடா்ந்து இந்திய விமானத் துறையில் செயல்பாட்டில் உள்ள போயிங் 787-8 மற்றும் 787-9 விமானங்களை உடனடியாக பாதுகாப்புச் சோதனைக்குள் உள்படுத்த விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.
ஏா் இந்தியா சேவையில் 26 போயிங் 787-8 விமானங்களும், 7 போயிங் 787-9 உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. டிஜிசிஏ எடுக்கும் பாதுகாப்புக்கு நடவடிக்கைகளுக்கு அனைத்து ஆதரவையும் வழங்குவோம் என்று ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.