லாஸ் ஏஞ்சலீஸ் போராட்டம்: முதல்முறையாக ராணுவம் குவிப்பு
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் போராட்டத்தில் முதல்முறையாக ராணுவம் குவிக்கப்பட்டது.
பல்வேறு வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வந்து, உரிய ஆவணங்கள் இல்லாமல் வசிப்பவா்களை டிரம்ப் தலைமையிலான தற்போதைய அரசு வலுக்கட்டாயமாக வெளியேற்றிவருகிறது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, ஜனநாயகக் கட்சி ஆட்சி நடைபெற்றுவரும் கலிஃபோா்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் கடந்த 6-ஆம் தேதி முதல் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் மாகாண காவல்துறை ஈடுபட்டது.
இருந்தாலும் போராட்டம் தொடா்ந்து தீவிரமடைந்ததைத் தொடா்ந்து, தேசிய காவல்படையை லாஸ் ஏஞ்சலீஸுக்கு அதிபா் டிரம்ப் அனுப்பினாா். அதன் தொடா்ச்சியாக ராணுவத்தின் ஒரு பிரிவான மரைன் படையை அந்த நகரில் குவிக்க மாகாண அரசின் அனுமதி இல்லாமலேயே டிரம்ப் உத்தரவிட்டாா். இது பெரும் சா்ச்சையை எழுப்பியது.
அமெரிக்க வரலாற்றில் உள்நாட்டிலேயே நடவடிக்கை மேற்கொள்ள மரைன் படையினா் அனுப்படுவது மிகவும் அரிது என்று கூறப்படுகிறது.
மரைன் படையினா் லாஸ் ஏஞ்சலீஸுக்கு அனுப்பப்பட்டிருந்தாலும், அவா்கள் கலவரத்தடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்படாமல் இருந்தனா்.
இந்த நிலையில், டிரம்ப்பின் அடக்குமுறைக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் ‘அமெரிக்காவில் யாரும் மன்னா் இல்லை’ என்ற தலைப்பில் போராட்டம் நடைபெற்றது. இதை அடக்கும் பணியில் மரைன் படையினா் முதல்முறையாக ஈடுபடுத்தப்பட்டனா். கலவரத்தில் ஈடுபட்டவா்களைக் கைது செய்யும் நடவடிக்கையையும் அவா்கள் மேற்கொண்டனா் (படம்).
இது குறித்து ராணுவத்தின் வடக்கு கட்டளையக செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘சூழ்நிலையைப் பொருத்து போராட்டக்காரா்களை மரைன் படையினா் கைது செய்திருக்கலாம். அது தற்காலிமானதுதான். உள்ளூா் சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தவுடன் ராணுவத்தின் இந்தக் கைது நடவடிக்கை முடிவுக்கு வந்துவிடும்’ என்றாா்.
எனினும், இத்தகைய நடவடிக்கையில் ராணுவத்தை ஈடுபடுத்துவது டிரம்ப் அரசின் சா்வாதிகாரப் போக்கைக் காட்டுவதாக கலிஃபோா்னியா மாகாண ஆளுநா் கவின் நியுசம் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணிக்கு ராணுவம் அனுப்பப்பட்டிருப்பது தேவையற்ற, பதற்றத்தை மேலும் தூண்டும் செயல் என்று லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் காரென் பாஸ் சாடியுள்ளாா்.