ஷுப்மன் கில் இடத்தில் நான் இருந்தால்... ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுவதென்ன?
டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஷுப்மன் கில் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஷுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி இங்கிலாந்து சென்றடைந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற ஜூன் 20 ஆம் தேதி லீட்ஸ் திடலில் தொடங்குகிறது.
இதையும் படிக்க: வெற்றியை நோக்கிப் பயணிக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கு முன்னாள் கேப்டன் பாராட்டு!
இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின்போது, மூத்த வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். மூத்த வீரர்கள் பலரும் இல்லாத நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக களமிறங்குகிறது இளம் இந்திய அணி.
ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுவதென்ன?
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் இன்னும் சில நாள்களில் தொடங்கவுள்ள நிலையில், தன் மீது அதிப்படியான எதிர்பார்ப்புகள் இருப்பதை ஷுப்மன் கில் உணர்ந்திருப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே ஷுப்மன் கில் மீது அதிகப்படியான எதிர்பார்ப்புகள் உருவாகிவிட்டதாக நினைக்கிறேன். கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால், அவருக்கான பொறுப்புகளும் அதிகரித்துள்ளன. இது போன்ற அதிக அழுத்தம் நிறைந்த இடத்தில் நான் இருந்தால், ஒரு பேட்ஸ்மேனாக சிறப்பான தொடக்கத்தைக் கொடுக்க வேண்டும் என நினைப்பேன்.
இதையும் படிக்க: லயனிடம் ஆட்டமிழக்காத ஒரே வீரர் மார்க்ரம்..! ஐசிசி கோப்பையை வாங்கித்தரும் நாயகன்!
இங்கிலாந்து ஆடுகளங்களில் பேட்டிங் செய்வது மிகவும் கடினம். அவர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு ரன்கள் குவித்தால், அவரது நம்பிக்கை அதிகரிக்கும். பேட்டராக நன்றாக விளையாடும் பட்சத்தில், கேப்டனாகவும் அவரது நம்பிக்கை அதிகரிக்கும். ஷுப்மன் கில் மிகவும் சிறப்பான வீரர். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் நல்ல தொடக்கத்தைக் கொடுத்து, அதிக அளவிலான கேள்விள் எழுவதை தவிர்ப்பார் என நம்புகிறேன் என்றார்.