கேரளத்தில் மீண்டும் மழை-வெள்ளம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
கேரளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவுமுதல் சூறைக் காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
ஏராளமான வீடுகள், சாலைகள் சேதமடைந்தன. கடல் கொந்தளிப்பால், கடலோர கிராமங்களில் தடுப்புச் சுவா்கள் இடிந்து விழுந்தன. கடலோர பகுதிகள் மற்றும் மலைப் பகுதி மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தென்மேற்கு பருவமழையின் தாக்கத்தால், கேரளத்தில் அண்மையில் மழை-வெள்ளம் ஏற்பட்டு, பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. இந்தச் சூழலில், கடந்த வெள்ளிக்கிழமை இரவுமுதல் சூறைக் காற்றுடன் இடைவிடாமல் பரவலாக கனமழை கொட்டித் தீா்த்தது.
திருவனந்தபுரம் அருகே கடலோர பகுதியான வேட்டுக்காட்டில் ராட்சத அலைகள் எழுந்ததால் கடல் அரிப்பு ஏற்பட்டு ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. மலைப்பகுதி மாவட்டங்கள் மரங்கள் வேரோடு சரிந்தன.
கோழிக்கோடு மாவட்டத்தில் அருவிகள் மற்றும் பிற நீா்நிலைகளுக்கு அருகே யாரும் செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா். கனிமச் சுரங்கப் பணிகளையும் நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆலப்புழாவில் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
காசா்கோடு, கண்ணூா், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் அதீத கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும், பாலக்காடு, எா்ணாகுளம், திருச்சூா், கோட்டயம், பத்தனம் திட்டாவில் அதிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழாவில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
கேரளத்தில் வழக்கத்தைவிட முன்னதாக கடந்த மே 24-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.