அகமதாபாத்: `விஜய் ரூபானி' விமான விபத்தில் மரணித்த 2-வது குஜராத் முதல்வர்!
விபத்துக்குள்ளான விமானத்தின் வயது 11.5 ஆண்டுகள்! 475 அடி உயரத்திலிருந்து விழுந்தது!
ஆமதாபாத்: குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இன்று பகல் பிற்பகல் 1.40 மணிக்கு விழுந்து விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம், கடந்த 11.5 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏஐ-171 விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 168 இந்தியர்கள் 53 பிரிட்டன் நாட்டவர்கள் இருந்துள்ளனர். இரண்டு விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட 242 பேர் இருந்துள்ளனர். இவர்களில் 7 பேர் குழந்தைகள் என்றும், அதில் இரண்டு கைக்குழந்தைகள் என்றும் கூறப்படுகிறது.
விமானம் புறப்பட்ட சிறிது நிமிடத்திலேயே அதாவது 475 அடி உயரத்திலிருந்து விழுந்து விபத்துக்குள்ளானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த இடத்தில் இதுவரை 50 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
விமானத்தைப் பொறுத்தவரை 11.5 ஆண்டுகள் என்பது நடுத்தர வயதுதான் என்றும், ஒரு விமானம் நன்றாக பராமரிக்கப்பட்டால் 30 ஆண்டுகள் வரை இயக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே, விபத்துக்குள்ளான விமானத்தில் ஆயுள் காலம் பற்றிய சந்தேகம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான விமானத்திலிருந்து 1.39 மணிக்கு ஆபத்து குறித்த அழைப்பு வந்த சில வினாடிகளில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது. சென்னையில் இருந்து ஆமதாபாத் சென்ற விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. விமான விபத்தையடுத்து ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.