Vijay Sethupathi: " `வாத்தியார்' கதாபாத்திரம்... பெரிய வரமா நினைக்கிறேன்!" - நெக...
France: 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை; அதிபர் சொன்ன காரணம் என்ன?
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரூன் விரைவில் நாட்டில் உள்ள 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குச் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தத் தடை செய்யப்படும் என அறிவித்துள்ளார்.
சில மாதங்களுக்குள் ஐரோப்பிய யூனியன் இதேபோன்ற முடிவை எடுக்காவிட்டால், தனிச்சையாக பிரான்ஸ் தடை செய்யும் எனக் கூறியிருக்கிறார்.

கிழக்கு பிரான்ஸில் உள்ள நோஜண்ட் என்ற பள்ளியில் 14 வயது மாணவன் 31 வயது ஆசிரியரை வெறித்தனமாகக் கத்தியால் குத்தி, கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் இந்த முடிவை எடுத்திருக்கிறார் மேக்ரூன்.
வழக்கம்போல மாணவர்களின் பைகளை ஆயுதங்கள் இருக்கிறதா எனப் பரிசோதனை செய்தபோது இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த 14 வயது மாணவரைத் தடுக்க முயன்ற காவல் அதிகாரிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
"15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நாம் சமூக வலைத்தளங்களைத் தடை செய்ய வேண்டும். ஐரோப்பிய நாடுகளை அணிதிரட்டும் முயற்சிகள் நடக்கின்றன, அதற்காகச் சில மாதங்கள் பொறுக்கலாம். இல்லாவிடில் பிரான்ஸிலிருந்து இதைத் தொடங்கலாம்" என அவர் பேசியிருக்கிறார்.

குழந்தைகள் எந்தவித மேற்பார்வையுமின்றி டிஜிட்டல் தளங்களை அணுகுவதனால் இளம் வயதினர் வன்முறைச் சம்பவங்களில் பங்குபெறுவது தொடர்கதையாகியிருக்கிறது என்பதை இம்மானுவேல் மேக்ரூன் குறிப்பிட்டுள்ளார்.
நோஜண்ட் பள்ளியில் நடைபெற்ற சம்பவம் சமூக வலைத்தளத்தின் தாக்கத்தால் உருவானது என விசாரணை அதிகாரிகள் உறுதியாகக் கூறவில்லை என்றாலும், மேக்ரூன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வளரிளம் பருவத்தினரிடையே வன்மம் மற்றும் ஆக்ரோஷம் அதிகரிக்க சமூக வலைத்தளங்களே காரணம் எனக் கூறுகின்றனர்.
முன்னோடியான ஆஸ்திரேலியா!
குழந்தைகளுக்குச் சமூக வலைத்தளங்களைத் தடை செய்யக் குரலெழுப்பப்படுவது இது முதன்முறை அல்ல. ஆஸ்திரேலிய அரசு நீண்ட விவாதங்களுக்குப் பிறகு கடந்த ஆண்டு 16 வயதுக்குள்ளானவர்களுக்குச் சமூக வலைத்தளங்களைத் தடை செய்தது.
நிறுவனங்கள் வயதைச் சோதிக்க வேண்டியது கட்டாயம் என்றும், குழந்தைகளைக் கட்டுப்படுத்த தவறினால் கிட்டத்தட்ட 32.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் கட்ட நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.