Medical Courses: 'மருத்துவப் படிப்புன்னா MBBS மட்டும் இல்ல...' - வேறு என்னென்ன ப...
லெவண்டாவ்ஸ்கி உடனான மோதல்: போலந்து அணி தலைமைப் பயிற்சியாளர் ராஜிநாமா!
போலந்து கால்பந்து அணியில் உள்ள வீரருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அந்த அணியின் பயிற்சியாளர் ராஜிநாமா செய்துள்ளார்.
போலந்து கால்பந்து அணிக்காக 2023-இல் இருந்து தலைமைப் பயிற்சியாளராக மைக்கேல் ப்ரோபியர்ஸ் (52) இருந்துவந்தார்.
பார்சிலோனாவின் நட்சத்திர வீரரும் போலந்து நாட்டிற்காக அதிக கோல்கள் (85 கோல்கள்) அடித்தவருமான ராபர்ட் லெவண்டாவ்ஸ்கியை (36) கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு பியோடர் செபாஸ்டியன் ஜீலின்ஸ்கியை நியமித்ததால் இந்தப் பிரச்னை தொடங்கியது.
இந்த நிகழ்வுக்குப் பிறகு லெவண்டாவ்ஸ்கி, “இனிமேல் மைக்கேல் ப்ரோபியர்ஸ் பயிற்சியாளராக இருந்தால் நான் அணியில் விளையாடமாட்டேன்” எனக் கூறினார்.
உலகக் கோப்பைக்குத் தேர்வாகுவதில் சிக்கல்
போலந்து அணி பின்லாந்துடன் 1-2 என தோல்வியை சந்தித்தது. இதனால், உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் புள்ளிப் பட்டியலில் 3-ஆவது இடத்தில் உள்ளது.
ஐரோப்பாவில் உள்ள மொத்த 12 குரூப்பில் முதலிடத்தில் உள்ள 12 அணிகளும் நேரடியாக தகுதிபெறும்.
இதில் 2ஆவது இடத்திலிருக்கும் 12 அணிகளுடன் நேஷன்ஸ் லீக்கில் 4 இடங்களைப் பிடித்த அணிகளுமாக சேர்ந்து 16 அணிகளும் பிளே ஆஃப்ஸ் முறையில் விளையாடி அதில் 4 அணிகள் தேர்வாகும்.
போலந்து அணி முதலிரண்டு இடங்களுக்குள் இந்தச் சுற்றினை முடித்தால் மட்டுமே 2026 உலகக் கோப்பையில் விளையாட முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
ராஜிநாமா செய்த தலைமைப் பயிற்சியாளர்
இந்தச் சூழ்நிலையில், போலந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக்கேல் ப்ரோபியர்ஸ் தனது ராஜிநாமாவை அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர், “போலந்து அணியின் நன்மைக்காக நான் எனது தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன்” எனக் கூறியுள்ளார்.
பொறுப்புணர்வு வேண்டும்
போலந்து கால்பந்து அமைப்பின் தலைவர் செசரி ஆண்ட்ரெஜ் குலேசா, “நான் பயிற்சியாளர்களுக்கு அதிகமான சுதந்திரத்தை அளித்துள்ளேன். ஆனால், அதில் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
நான் எப்போதுமே வெற்றிகளை மட்டுமே முதன்மையானதாகக் கருதுகிறேன். இது போலந்து ரசிகர்களுக்கு கடினமான நாள்களாக இருக்கும்” எனக் கூறினார்.