மதுரை : சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; போக்சோ வழக்கு - குற்றம்சாட்டப்பட்டவர் தற்கொலை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சோமசுந்தரபுரத்தைச் சேர்ந்தவர் 52 வயதான சின்னன். விவசாய கூலித் தொழிலாளியான இவர், அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் வேலைகளுக்கு சென்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மள்ளப்புரம் பகுதியில் உள்ள தோட்டப் பகுதிக்கு வேலைக்கு சென்ற போது அங்கு தனியாக இருந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.

இதனைக் கண்ட சிறுமியின் தாயார், சின்னனை சத்தம் போட்டு விரட்டி விட்டு உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சின்னன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தது.
தன் மீது புகார் அளித்துள்ளது குறித்து அறிந்த சின்னன், போலீஸ் விசாரணைக்கு பயந்து ராஜேந்திரன் என்பவரது தோட்டத்தில் உள்ள புளிய மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த எம்.கல்லுப்பட்டி காவல் நிலைய போலீஸார் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்தது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.