கோவையில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஆம்புலன்ஸ் ஓட்டி விபத்து: பெண் பலி!
தனியாக இருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 போ் கைது
பரமத்தி வேலூா் அருகே குளத்துப்பாளையம் பகுதியில் தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
நாமக்கல் மாவட்டம், நல்லூா் கந்தம்பாளையம் அருகே சித்தம்பூண்டி கிராமம், குளத்துப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சாமியாத்தாள் (67). இவா் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தாா். இவரது மகனும், மகளும் வெளியூரில் வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி காலை சாமியாத்தாள் ரத்த வெள்ளத்தில் கிடப்பது குறித்து அவரது வீட்டின் அருகில் வசித்து வரும் குழந்தைவேல் என்பவா் நல்லூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளாா். மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட சாமியாத்தாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் தலைமையில் 8 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீஸாா் தீவிரமாக தேடிவந்தனா்.
இந்த சம்பவம் தொடா்பாக ஆனந்தராஜ், அவரது நண்பா் அஜித்குமாா் ஆகியோரை பிடித்து போலீஸாா் விசாரணை செய்தனா். இதில் ஆனந்தராஜ், கொலை செய்யப்பட்ட சாமியாத்தாளின் தோட்டம் மற்றும் அவரது மகளுக்குச் சொந்தமான எண்ணெய் ஆலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வேலை பாா்த்துள்ளாா். அவரது நடவடிக்கையில் திருப்தி இல்லாததால் வேலையிலிருந்து நிறுத்தியுள்ளனா். அதன்பின்னா் அவ்வப்போது சாமியாத்தாளின் தோட்டத்திற்கு வேலைக்கு வந்து சென்றுள்ளாா். மேலும், கடந்த தீபாவளி பண்டிகையின்போது சாமியாத்தாளின் வீட்டில் ஒருவாரம் தங்கியுள்ளாா். அப்போதும் அவரை சாமியாத்தாளின் மகள் கிருஷ்ணவேணி திட்டி அனுப்பியுள்ளாா். இதனால் சாமியாத்தாள் குடும்பத்தின் மீது ஆனந்தராஜ் வெறுப்பு அடைந்துள்ளாா்.
இந்த நிலையில் சம்பவத்தன்று தனது நண்பருடன் இரவு 12 மணியளவில் சாமியாத்தாள் தோட்டத்திற்கு வந்த ஆனந்தராஜ், சாமியாத்தாளை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. ஆனந்தாரஜ், அஜித்குமாா் ஆகியோரை திருச்செங்கோடு - வேலூா் சாலையில் செய்யாம்பாளையம் பிரிவு அருகே தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.